
























Updated on
:
2 min read
சென்னை: தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழலைப் பயன்படுத்தி குடியரசுத் தலைவர் ஆட்சி வரக் கூடாது, 108 இடங்களைப் பெற்றும் தவெக ஆட்சியமைக்க விசிக தடையாக இருந்துவிடக் கூடாது என்ற 2 காரணங்களுக்காக மட்டுமே தவெகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவை வெளியில் இருந்து வழங்கியிருக்கிறோம் என்றார் விசிக தலைவர் தொல்.திருமாவளவன்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக தனிப்பெரும் கட்சியாக 108 இடங்களைக் கைப்பற்றினாலும் கூட, பெரும்பான்மை இல்லாததால் இதுவரை ஆட்சியமைக்க இயலாமல் தவித்த நிலையில், மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் தவெகவுக்கு விசிக ஆதரவு தெரிவித்துள்ளது. இதன்மூலம் அக்கட்சி பெரும்பான்மையை எட்டியது. தவெகவை தொடர்ந்து ஐயூஎம்எல் கட்சியும் நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியதால் தவெக வசம் தற்போது 120 எம்எல்ஏக்கள் பலம் உள்ளது.
இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன் கூறியது: “தமிழகத்தில் தொங்கு சட்டசபை உருவாகும் நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைக்க முடியாத நிலை ஏற்பட்டது.
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் விசிக இடம்பெற்று 8 தொகுதிகளில் போட்டியிட்டதில் 2-ல் நாங்கள் வெற்றி பெற்றோம். அதேபோல் இடதுசாரிகளும் தலா 2 இடங்களில் வெற்றி பெற்றன.
இந்நிலையில் விசிக, இடதுசாரிகள் இணைந்து பேசினோம். மக்கள் நலக் கூட்டணி இருந்தபோதே கொள்கை அடிப்படையிலும், மக்கள் பிரச்சினைகளில் ஒருங்கிணைந்து களமாடி வருவதையும் பழக்கமாகக் கொண்டுள்ளோம்.
இந்தச் சூழலில் தொலைநோக்குப் பார்வையுடன் இணைந்து முடிவெடுப்போம் என்று கலந்து பேசினோம். இந்த நிலையில் சிபிஎம், சிபிஐ மாநிலக் குழுவில் எடுத்த முடிவை ஒட்டி விசிக உயர்நிலைக் கூட்டத்தில் கலந்தாலோசித்து உயர்நிலைக் குழு ஒப்புதலோடு முடிவை அறிவிப்பது என முடிவு எடுத்தோம்.
முதலில் தவெகவுக்கு ஆதரவு என்ற முடிவை இடதுசாரிகள் எடுத்தார்கள். அதன் அடிப்படையில் விசிக உயர்நிலைக் கூட்டம் இணையவழியில் நடந்தது. உயர் நிலைக் கூட்டத்தில் பகிரப்பட்ட கருத்துகளின் அடிப்படையில், விசிக பொதுச் செயாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறப்பினரோடு கலந்தாலோசித்து ஒரு முடிவை எடுத்தோம். அதன் அடிப்படையில் தவெகவுக்கு ஆதரவுக் கடிதம் வழங்கியுள்ளோம்.
தமிழகத்தில் இந்த அரசியல் சிக்கலை பயன்படுத்தி குடியரசுத் தலைவர் ஆட்சி வந்துவிடக் கூடாது என்ற அடிப்படையிலும், 108 இடங்களோடு தவெக திணறிக் கொண்டிருக்கும் நிலையில் ஆதரவளிக்க வேண்டும் என்ற அடிப்படையில் ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துள்ளோம்.
தவெக ஆட்சியமைக்க விசிக நிலைப்பாடு தடையாக இருந்துவிடக் கூடாது, குடியரசுத் தலைவர் ஆட்சி வரக் கூடாது என்ற இரண்டு காரணங்களால் மட்டுமே இந்த முடிவு எடுத்துள்ளோம்.
ஆட்சி அமைக்க மட்டுமே ஆதரவு அளிக்கிறோம். அதற்காக எந்த நிபந்தனையும் இல்லை. தவெகவுக்கு வெளியில் இருந்து ஆதரவு தருகிறோம்” என்றார். அவருடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியனும் இருந்தார்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。