

















Updated on
:
2 min read
ஹாலிவுட்டில், பிராங்க் காப்ரா இயக்கத்தில் 1934-ல் வெளியாகி 5 ஆஸ்கர் விருதுகளை அள்ளிய திரைப்படம், ‘இட் ஹேப்பண்ட் ஒன் நைட்’. கிளார்க் கேபிள், கிளாடெட் கோல்பர்ட் நடித்து சூப்பர் ஹிட்டான இப்படம் உலகம் முழுவதும் பல்வேறு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.
இக்கதையின் பாதிப்பிலும் பல்வேறு மொழிகளில் திரைப்படங்கள் உருவாகின. பின்னர் இதே கதையை மையமாக வைத்து ‘ரோமன் ஹாலிடே’ என்ற திரைப் படமும் ஹாலிவுட்டில் உருவானது. இந்தியில், தேவ் ஆனந்த், மதுபாலா நடிப்பில் ‘நடான்’, ஏவி.எம் தயாரிப்பில் ராஜ் கபூர், நர்கிஸ் நடிப்பில் ‘சோரி சோரி’ உள்ளிட்ட சில திரைப்படங்கள் இக்கதையின் பாதிப்பில் உருவானது தான்.
இதே கதையில் தமிழில் உருவான திரைப்படம், ‘சந்திரோதயம்’. எம்ஜிஆர், ஜெயலலிதா முதன்மைப் பாத்திரங்களில் நடித்த இப்படத்தில், எம்.ஆர்.ராதா, நம்பியார், பண்டரி பாய், அசோகன், நாகேஷ், மனோரமா, பாரதி, எஸ்.என்.லட்சுமி, ‘குலதெய்வம்’ ராஜகோபால் என பலர் நடித்தனர்.
‘பணத் தோட்டம்’, ‘கலங்கரை விளக்கம்’ படங்களுக்குப் பிறகு கே.சங்கர், எம்.ஜி.ஆரை, மீண்டும் இயக்கிய படம் இது. சரவணா பிலிம்ஸ் சார்பில் ஜி.என்.வேலுமணி தயாரித்த இந்தப் படத்துக்கு தம்பு (சி.வி.ராமகிருஷ்ணன்) ஒளிப்பதிவு செய்தார்.
செல்வமணி எஸ்டேட்டின் வாரிசான தேவி (ஜெயலலிதா), தன் நிச்சயதார்த்தத்துக்கு முதல் நாள் வீட்டை விட்டு ஓடிவிடுகிறார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்த, அவருடைய தந்தை ஜமீன்தார் பொன்னம்பலத்துக்கு (அசோகன்) அவமானமாகிறது. வீட்டைவிட்டு வெளியேறி, தனியாகத் தவிக்கும் தேவியை, ரவுடிகளிடமிருந்து நாளிதழ் நிருபரான சந்திரன் (எம்ஜிஆர்) காப்பாற்றுகிறார். தன் வீட்டிலேயே அவருக்கு அடைக்கலம் தருகிறார்.
சந்திரன், ‘தினக்கவர்ச்சி’ என்ற நாளிதழில் நிருபராகப் பணிபுரிவது அவருக்குத் தெரியவருகிறது. அந்த நாளிதழை நடத்தி வரும் துரியோதனன் (எம்.ஆர்.ராதா), செய்திகளைப் பரபரப்பாக்குவதில் மட்டுமே குறியாக இருக்கிறார். சந்திரன் தன் முதலாளியின் இந்த போக்கை அடிக்கடி எதிர்க்கிறார். அதே நாளிதழின் புகைப்படக் கலைஞர் ஆழ்வார் (நாகேஷ்), சந்திரனுக்கு நெருங்கிய நண்பராக இருந்து, பல நேரங்களில் உதவி செய்கிறார்.
இறுதியில், குடும்பத்தாரின் சம்மதத்தோடு சந்திரன், தேவியை எப்படித் திருமணம் செய்து கொள்கிறார் என்பது கதை. துரியோதனன் தன் தவறுகளுக்காக வருந்தி, சந்திரனிடம் புதிய நாளிதழைத் தொடங்கச் சொல்கிறார். அதற்கு ஒரு பெயரையும் தேர்ந்தெடுக்கச் சொல்கிறார். அந்தப் பெயர் சந்திரோதயம்! இப்படத்துக்கு எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்தார்.
புதியதோர் உலகம் செய்வோம் என்ற பாரதிதாசனின் பாடலைத் தவிர மற்றப்பாடல்களை வாலி எழுதினார். ‘புத்தன் ஏசு காந்தி பிறந்தது பூமியில் எதற்காக ?’, ‘கெட்டி மேளம் கொட்டுற கல்யாணம்’, ‘காசிக்கு போகும் சன்னியாசி’, ‘எங்கிருந்தோ ஆசைகள்...’, ‘சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ...’ என அனைத்துப் பாடல்களும் வரவேற்பைப் பெற்றன. இப்போது வரை பலரின் பேவரைட் லிஸ்ட்டில் இப்பாடல்கள் இருக்கின்றன.
இதில் ‘புத்தன் ஏசு காந்தி பிறந்தது’ பாடலில் எம்ஜிஆருடன் குழந்தைகள் சிலரும் மழையில் நனைந்து கொண்டு உடன் வர வேண்டும். செயற்கை மழையில் பாடல் படமாக்கப்பட்டது. ஆனால், குழந்தைகளுக்குப் பாதிப்பு வந்துவிடக் கூடாது என்பதற்காக, அதை வெந்நீர் மழையாக மாற்ற வைத்தாராம் எம்.ஜி.ஆர். இதை அந்தக் காலத்தில் பெருமையாக பேசுவார்கள்.
இப்படத்தின் கிளைமாக்ஸ் சண்டைக் காட்சியில் எம்.ஜி.ஆரும் நம்பியாரும் மோதுவார்கள். உடைந்த, உருண்டோடும் ‘டேபிள் லேம்’பை மட்டுமே வைத்து, அதன் வழி நிழல்களையும் ஒளியையும் பயன்படுத்தி அக்காட்சியை அருமையாக படமாக்கி இருப்பார் தம்பு. டெக்னாலஜி அதிகம் வளராத அந்தக் காலத்தில் இந்த லைட்டிங் உத்தி பரபரப்பாகப் பேசப்பட்டது.
இப்படம் 1966-ம் ஆண்டு இதே நாளில் (மே 27) வெளியானது. இன்றோடு 60 ஆண்டுகளை நிறைவு செய்தாலும் இனிமையான பாடல்கள், நாகேஷின் நகைச்சுவை, எம்.ஜி.ஆர், எம்.ஆர்.ராதா, ஜெயலலிதா ஆகியோரின் நடிப்பு ஆகியவற்றால் இப்படம் இன்றும் பேசப்படுவதாக இருக்கிறது.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。