
























Updated on
:
2 min read
அகமதாபாத்: ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் அகமதாபாத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் சிஎஸ்கே அணியை 89 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது குஜராத் டைட்டன்ஸ் அணி. இந்த ஆட்டத்தில் 230 ரன்கள் இலக்கை துரத்திய சிஎஸ்கே அணி 13.4 ஓவர்களில் 140 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. குஜராத் அணியின் பந்துவீச்சில் முகது சிராஜ், காகிசோ ரபாடா, ரஷித் கான் ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர்.
குஜராத் அணிக்கு இது 9-வது வெற்றியாக அமைந்தது. இதன் மூலம் அந்த அணி லீக் சுற்றை முதல் 2 இடங்களுக்குள் நிறைவு செய்வதை உறுதி செய்துள்ளது. ஏனெனில் குஜராத் அணியின் நிகர ரன் ரேட் 0.695 ஆக உள்ளது. 14 ஆட்டங்களில் விளையாடி உள்ள குஜராத் அணி 9 வெற்றி, 5 தோல்விகளுடன் 18 புள்ளிகளுடன் லீக் சுற்றை நிறைவு செய்துள்ளது.
அதேவேளையில் 5 முறை சாம்பியனான சிஎஸ்கே அணி இந்த தோல்வியால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது. அந்த அணி 14 ஆட்டங்களில் 6 வெற்றி, 8 தோல்விகளுடன் 12 புள்ளிகளுடன் லீக் சுற்றை முடித்துள்ளது.
சிஎஸ்கே அணிக்கு எதிரான வெற்றிக்கு பின்னர் குஜராத் டைட்டன்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளரான ரஷித் கான் கூறியதாவது: ஒவ்வொரு அணிக்கும் மேம்படுத்த வேண்டிய சில சிறிய விஷயங்களும் இருக்கும், அதே நேரத்தில் மிகவும் வலுவான சில பகுதிகளும் இருக்கும். எந்த அணியும் 100 சதவீதம் முழுமையான, கச்சிதமான அணியாக இருக்க முடியாது. உங்களிடம் எவ்வளவு சிறந்த வீரர்கள் இருக்கிறார்கள் என்பது முக்கியமல்ல. இந்தத் தொடர் முழுவதும் எங்களது நடுவரிசை பேட்டிங் குறித்து நிறைய விவாதங்கள் நடந்துள்ளன.
ஆனால், இப்போது ஒவ்வொரு வீரரும் தங்கள் பொறுப்பை உணர்ந்து சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார்கள். ஒவ்வொருவரும் தங்களது பொறுப்பை ஏற்றுக்கொள்கிறார்கள், அதுதான் மிகவும் முக்கியம். துல்லியமாக இல்லாத அந்த 10 சதவீதம் அல்லது 15 சதவீத விஷயங்களைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தால், அது மீதமுள்ள 70 முதல் 75 சதவீத அல்லது 80 சதவீத விஷயங்களையும் நிச்சயம் பாதிக்கும். எங்களைப் பொறுத்தவரை, நாங்கள் விஷயங்களை மிகவும் எளிமையாக வைத்திருக்கிறோம்.
எதிரணி யாராக இருந்தாலும் சரி, களத்தில் யாருக்கு வாய்ப்பு கிடைத்தாலும் சரி, எவ்வாறு அதிக தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறோம் என்பதுதான் முக்கியம். அது பேட்டிங், பந்துவீச்சு அல்லது ஃபீல்டிங் என எதுவாகவும் இருக்கலாம். எனவே எங்கே பலவீனமாக இருக்கிறோம், எங்கே வலுவாக இருக்கிறோம் என்பதைப் பற்றி அதிகம் யோசிக்க வேண்டாம். நமக்கு முன்னால் என்ன இருக்கிறது, அணிக்கு நான் எப்படி சிறப்பாகச் செய்ய முடியும் என்பதைப் பற்றி மட்டுமே யோசிக்க வேண்டும்.
சிஎஸ்கேவுக்கு எதிரான ஆட்டத்தின் போது ஆடுகளத்தின் தன்மை மாறவில்லை. எங்களுடைய வேகப்பந்து வீச்சுப் பிரிவு, இந்தத் தொடர் முழுவதும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அகமதாபாத் ஆடுகளத்தைப் பொறுத்தவரை, நல்ல வேகத்துடன் சரியான பகுதியில் தொடர்ந்து பந்துவீசினால், பந்துவீச்சாளர்களுக்கு சாதகமான விஷயம் இருக்கும். அதேபோல், முதலில் பேட்டிங் செய்து ரன்களைக் குவிக்கும் போது ஆடுகளத்தின் சூழலைப் பார்த்துவிட்டு அதற்கு தகுந்தாற்போல் விளையாட முயற்சிக்க வேண்டும்.
பந்துவீச்சு குழுவாகவும், பேட்டிங் குழுவாகவும் ஆடுகளத்தின் சூழலுக்கு ஏற்ப எங்களை நாங்கள் மிக விரைவாக மாற்றிக்கொள்கிறோம். இதுதான் இந்தத் தொடர் முழுவதும் எங்களுக்கான முக்கிய பலமாக உள்ளது. அந்த வகையில் சிஎஸ்கே அணியைவிட நாங்கள் இந்த சூழலுக்கும் ஆடுகளத்துக்கும் மிக விரைவாக எங்களை மாற்றிக்கொண்டோம். நாங்கள் மீண்டும் வெற்றி பெற்றதற்கு பின்னணியில் இருக்கும் காரணம் இதுதான்.
230 ரன்கள் இலக்கை பாதுகாக்கும் போது பந்துவீச்சில் ரன்கள் செல்லத்தான் செய்யும். ஆனால் ஒரு பந்துவீச்சாளராக நான், ஒரு விஷயத்தை எப்போதும் மாறாமல் வைத்திருப்பேன். அந்த வகையில் எதிரணியின் பேட்ஸ்மேன் பந்தை பவுண்டரிக்கு அடிப்பதை கடினமாகவும் சவாலாகவும் மாற்ற முற்சிப்பேன்.
போட்டியின் போது நல்ல நாட்களும் இருக்கும், மோசமான நாட்களும் இருக்கும். மோசமான நாட்களிலும் உங்களை நீங்கள் எப்படி கையாள வேண்டும் என்பதை தெரிந்திருக்க வேண்டும். தொடர்ந்து சிறப்பாகவே செயல்பட்டு, எந்தவொரு மோசமான நாளையும் சந்திக்கவில்லை என்றால், உங்களால் நிறைய கற்றுக்கொள்ள முடியாது.
நான் விளையாடும் ஒவ்வொரு போட்டிக்குப் பிறகும், பந்து வீசப்பட்ட இடங்களின் வரைபடத்தை எனக்கு அனுப்புமாறு வீடியோ பகுப்பாய்வாளரிடம் கேட்பேன். அதில் நான் அதிகப்படியான பந்துகளை எங்கே வீசியிருக்கிறேன், இன்னும் எப்படி சிறப்பாகச் செயல்படலாம் என்று பார்ப்பேன்.
ஷுப்மன் கில் ஒவ்வொரு நாளும் தனது ஆட்டத்தில் முன்னேற்றம் அடைந்து வருகிறார். அவர், ஆடுகளத்தின் சூழலுக்கும் மைதானங்களுக்கும் ஏற்ப தன்னை மிக விரைவாக மாற்றிக்கொள்கிறார். அதோடு ஆட்டத்தையும் மிக விரைவாகப் புரிந்துகொள்கிறார்.
ஷுப்மனிடம் இருக்கும் சிறந்த விஷயம் என்னவென்றால், அவருக்குத் தன் ஆட்டம் என்னவென்று நன்றாகத் தெரியும். தனது இன்னிங்ஸை எப்படித் தொடங்க வேண்டும், எப்படி வேகப்படுத்த வேண்டும், அதை எப்படி முடிக்க வேண்டும் என்பது அவருக்குத் தெரியும். இவ்வாறு ரஷித் கான் கூறினார்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。