




















‘இந்து தமிழ் திசை’ - ‘கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி’ சார்பில் ‘உனக்குள் ஓர் ஐஏஎஸ்’ வழிகாட்டி நிகழ்ச்சி சென்னை தி.நகரில் நேற்று நடைபெற்றது. இதில் முன்னாள் தலைமைச் செயலர் வெ.இறையன்பு, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் முன்னாள் ஆலோசகர் வெ.திருப்புகழ் ஆகியோர் மாணவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினர். ‘கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி’யின் நிர்வாக இயக்குநர் சத்யஸ்ரீ பூமிநாதன், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் உதவிப் பொதுமேலாளர் மு.முருகேசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Updated on
:
3 min read
சென்னை: ‘இந்து தமிழ் திசை’ - ‘கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி’ சார்பில் நடந்த ‘உனக்குள் ஓர் ஐஏஎஸ்’ வழிகாட்டி நிகழ்ச்சியில் பேசிய மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் வெ.இறையன்பு, வெ.திருப்புகழ் ஆகியோர், “இடைவிடாத முயற்சியும், தளராத நம்பிக்கையும் இருந்தால் யுபிஎஸ்சி தேர்வில் நிச்சயம் வெற்றிபெறலாம்” என மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினர்.
‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், ‘கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி’யுடன் இணைந்து போட்டித் தேர்வர்களுக்கான ‘உனக்குள் ஓர் ஐஏஎஸ்’ வழிகாட்டி நிகழ்ச்சியை பல்வேறு மாவட்டங்களில் நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் உள்ளிட்ட யுபிஎஸ்சி தேர்வுகளுக்கும், டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கும் ஆலோசனை வழங்கும் வழிகாட்டி நிகழ்ச்சி, சென்னை தி.நகர், வாணி மஹாலில் நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்வில், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலர் இறையன்பு, மாணவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கி பேசியதாவது: ‘மக்களோடு மக்களாக பழகுவேன்’ என்று எண்ணுபவர்களே இத்தேர்வை எழுதலாம். நீங்கள் மனிதர்களை நேசிப்பதாக இருந்தால் இந்த பணிக்கு வாருங்கள். வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும்போது, ‘என் கால்கள் தண்ணீரில் நனையக் கூடாது’ என்று நினைப்பவர்களாக இருந்தால் இந்த பணிக்கு வரக்கூடாது.
இயந்திரங்களை நேசிக்கிறேன், கணினியின் முன்னால் அமர்வதில் களிப்படைகிறேன் என்று கருதினால் இந்த தேர்வை எழுதாதீர்கள். அதேபோல் ஏராளமானோர் பட்டப்படிப்பை முடித்துவிட்டு, வேலை தேடுவதற்கு இது ஒரு வாய்ப்பு என்று கருதி இத்தேர்வை எழுதுகின்றனர். சிலர் கவுரவம், மதிப்பு, மரியாதை கிடைக்கும் என எழுதுகிறார்கள். இவர்கள் எல்லாம் யுபிஎஸ்சி தேர்வில் தோற்றுத்தான் போகின்றனர். அதேபோல் மனப்பாடம்தான் வழி என்று நினைப்பவர்களும் தோற்கத்தான் செய்கின்றனர்.
போட்டித்தேர்வில் தேர்ச்சி, வெற்றி என்பதல்ல. தகுதி பெற்றிருக்கிறீர்களா என்பது தான் முக்கியம். இங்கு நாம் எழுதுகிற அனைத்தும் முக்கியம். பெறும் ஒவ்வொரு மதிப்பெண்ணும் முக்கியம். ஒவ்வொரு நொடியும் உன்னிப்பாக யார் படிக்கிறார்களோ, அவர்கள்தான் இதில் வெற்றி பெறுவார்கள். போட்டித் தேர்வுகளில் அறிவு 30 சதவீதம், புரிதல் 30 சதவீதம், பகுப்பாய்வு 40 சதவீதம் என்ற அடிப்படையில் தான் கேள்விகள் கேட்கப்படுகின்றன.
ஒரு தகவல் தெரிந்தால் மட்டும் இங்கு போதாது, அந்த தகவல் எதனால் கிடைத்தது, என்ன தாக்கத்தை அது ஏற்படுத்தும் என்பதையெல்லாம் நீங்கள் சிந்தித்து எழுத வேண்டும். இதற்காக ஆய்வு கட்டுரைகளைப் படியுங்கள். அண்மையில் நிகழ்ந்தமாற்றங்களைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள். தோல்வி அடைந்தால் துவண்டு விடாதீர்கள். அடுத்தமுறை இன்னும் இரட்டிப்பு வேகத்தோடு செயல்படுங்கள்.
ஒவ்வொரு நாளும் அட்டவணையை தயாரித்து, எதை படிப்பது என்று குறித்துக்கொண்டு, அதை முடித்துவிட்ட பிறகுதான் தூங்க வேண்டும். மனம் நிர்ணயித்துவிட்டால், உடல் ஓய்வெடுக்காது. மனதை திடப்படுத்துங்கள். வைராக்கியத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். இடைவிடாத முயற்சியும், அயராத உழைப்பும், தளராத நம்பிக்கையும் இருந்தால் நிச்சயம் வெற்றி பெறுவோம். இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்வில் ஊக்க உரையாற்றிய தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் முன்னாள் ஆலோசகர் வெ.திருப்புகழ் பேசும்போது, “குடிமைப் பணித் தேர்வு என்பது பிழைப்பு அல்ல, அது ஓர் அழைப்பு. எப்படி அதை நாம் பிழைப்பதற்காக செய்கிறோம் என்கிற நிலையிலிருந்து மாறி, இயற்கையின் அழைப்பாக, இருத்தலின் அழைப்பாக, இதயங்களின் அழைப்பாக அதை ஏற்றுக் கொண்டு பணி செய்ய வேண்டும். பணம் சம்பாதிப்பதற்கோ, புகழுடன் வாழ்வதற்கோ இந்த பணி உரியது அல்ல. சமூக மாற்றத்தை உருவாக்குவதற்கான ஒரு களமாகும்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்கள் மற்றும் பெற்றோர். படங்கள்: எஸ்.சத்தியசீலன்
உலகில் உள்ள மக்களாட்சி நாடுகளில் குடிமைப் பணியாளர்கள் கடுமையான போட்டி தேர்வுகளின் மூலமாகவே தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அதேபோல் இந்தியாவில் யுபிஎஸ்சி நடத்தும் தேர்வு முறையும் ஒரு கடுமையான தேர்வு முறையாகும். அந்த வகையில் ஆண்டுதோறும் 10 லட்சம் பேர் விண்ணப்பிக்கும் இத்தேர்வில் இறுதியாக ஆயிரம் பேர் மட்டுமே தேர்வு செய்யப்படுகின்றனர். இதில் முதல் 100 இடங்களை பெறுபவர்களுக்கு மட்டுமே ஐஏஎஸ் பணிவாய்ப்பு கிடைக்கிறது.
இத்தகைய கடினமான போட்டி நிலவுவதால் மாணவர்கள் தங்களை மிகச்சிறந்த முறையில் தயார் செய்து கொள்ள வேண்டியது அவசியம். இன்றைய இளைஞர்களிடம் கணினி பயன்பாட்டால் எழுதும் பயிற்சி குறைந்து வருகிறது. யுபிஎஸ்சி தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் தினமும் எழுதிப் பழக வேண்டும். அதேபோல் மாணவர்களுக்காக ‘கிங்மேக்கர்ஸ் அகாடமி’ போன்ற பயிற்சி நிறுவனங்கள் சிறந்த வழிகாட்டுதல்களை வழங்கி வருகின்றன. முழுமையான உழைப்பும், விடாமுயற்சியும் இருந்தால் இத்தேர்வில் நிச்சயம் வெற்றிபெற முடியும்” என்று தெரிவித்தார்.
முன்னதாக ‘கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி’யின் நிர்வாக இயக்குநர் சத்யஸ்ஸ்ரீ பூமிநாதன் பேசுகையில், “இந்த குடிமைப் பணியை எப்படிபயன்படுத்தினால், எத்தகைய ஆளுமையாக நீங்கள் வெளிப்படுவீர்கள் என்பதற்கு எடுத்துக்காட்டு இங்கு வந்திருக்கும் சிறப்பு விருந்தினர்கள்.
தமிழக மாணவர்கள் பலர் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றிப்பெறுவதற்கு அடித்தளமிட்டவர் இறையன்பு. இந்த நிகழ்ச்சி, கண்டிப்பாக உங்களுக்குள் இருக்கக்கூடிய ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் என்கிற கனவை தட்டி எழுப்பும். அந்த கனவு இல்லாத மாணவர்களுக்கு அந்த கனவை விதைக்கும். குடிமைப் பணிகளின் தாக்கத்தை உணரச்செய்யும். முதன் முயற்சியிலேயே ஒரு சிலருக்கு தான் வெற்றி கிடைக்கும். ஆனால் பயிற்சியும், முயற்சியும் தொடர்ச்சியாகஇருந்தால் மகிழ்ச்சியான வெற்றியை பெறமுடியும்” என்று குறிப்பிட்டார்.
‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் உதவிப் பொதுமேலாளர் (நிகழ்வு ஒருங்கிணைப்பு & விற்பனைப் பிரிவு) மு.முருகேசன் பேசும்போது, “‘ஒவ்வொரு ஆண்டும் யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வரும் போது அதில்வெற்றிப்பெற்ற மாணவர்களின் பெயர், இந்த அரங்கில் இருக்கும் மாணவர்களின் பெயராக இருக்கவேண்டும், தமிழக மாணவர்கள் ஏராளமானோர் வெற்றிபெற வேண்டும் என்பதுதான் ‘இந்து தமிழ் திசை’ மற்றும் ‘கிங்மேக்கர்ஸ் அகாடமி’யின் பெரும் நம்பிக்கையாகும். அந்த வகையில்தான் இந்த நிகழ்ச்சிகளை தொடர்ச்சியாக நடத்திவருகிறோம்” என்று தெரிவித்தார்.
இந்நிகழ்வில் இந்த ஆண்டு யுபிஎஸ்சி தேர்வு மற்றும் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் வெற்றிப்பெற்ற கிங்மேக்கர்ஸ் அகாடமியைச் சேர்ந்த மாணவர்களும் கவுரவிக்கப்பட்டனர்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。