

























Updated on:
சென்னை: என்எல்சியின் 3 சதவீத பங்குகளை விற்பனை செய்யும் முடிவை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் (என்.எல்.சி இந்தியா) பங்குகளை செலுத்தப்பட்ட பங்கு மூலதனத்தில் 3 சதவிட்வரையிலான பங்குகளை மத்திய அரசு விற்பனை செய்ய எடுத்துள்ள முடிவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.
என்எல்சி நிறுவனம் தமிழகத்தின் நெய்வேலியை தலைமையிடமாக கொண்டு இயங்கும் நவரத்தின பொதுத் துறை நிறுவனமாகும். மாநில அரசின் நிர்வாகத்தின் ஒத்துழைப்போடும், தமிழக மக்களின் ஆதரவோடும் பல தசாப்தங்களாக இயங்கி வருகிறது.
தமிழகத்தின் மின்சாரத் தேவையை பூர்த்தி செய்தல், வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் மாநிலத்தின் பொருளாதார கட்டமைப்பு வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றி வருகிறது. தமிழகத்தின் தேவையைத் தாண்டி கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி போன்ற மாநிலங்களின் மின் தேவையையும் பூர்த்தி செய்து வருவதோடு இந்நிறுவனத்தின் கிளைகள் இந்தியாவில் சில இடங்களில் உள்ளன.
இந்நிறுவனத்தில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிறுவனம் தொடர்ந்து லாபம் ஈட்டி வரும் நிறுவனமாகும். நிகழாண்டு ரூ.3,670 கோடி லாபத்தை ஈட்டி மிகச் சிறப்பாக இயங்கி வருகிறது. இப்படி சிறப்பாக செயல்படும் நிறுவனத்தின் மூன்று சதவீத பங்குகளை மத்திய அரசு விற்பது என்பது பொதுத் துறை நிறுவனங்களை சீரழிக்கும் செயலாகும்.
மத்திய அரசு நாட்டில் இயங்கும் நெடுஞ்சாலைகள், ரயில்வே நிலையங்கள், விமான நிலையங்கள், வங்கி, இன்சூரன்ஸ் என லாபம் ஈட்டி வரும் நவரத்தின பொதுத் துறை நிறுவனங்களை தேசிய பணமயமாக்கல் திட்டம் என்ற பெயரில் தனியாருக்கு தாரை வார்த்து வருவதன் தொடர்ச்சியாகவே தற்போது என்எல்சி நிறுவனத்தின் 3 சதவீத பங்குகளை மத்திய அரசு விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. என்எல்சி-யின் பங்குகளை விற்பனை செய்யக் கூடாது என முதல்வர் விஜய், மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது நல்ல அம்சமாகும்.
மத்திய அரசு தொடர்ந்து தமிழகத்துக்கு உரிய நிதி ஒதுக்கீடு செய்ய மறுப்பு, கல்வி, மாநில உரிமைகள் மற்றும் கூட்டாட்சி பறிப்பு, புதிய கல்விக் கொள்கை திணிப்பு, நீட் தேர்வு என தமிழகத்தையும், தமிழக மக்களையும் வஞ்சித்து வரும் நிலையில் தற்போது நவரத்தின பொதுத்துறை நிறுவனமான என்எல்சி பங்குகளையும் விற்பனை செய்வது என்பது தமிழக மக்களுக்கு செய்யும் மாபெரும் துரோகமாகும்.
எனவே, மத்திய அரசு 3 சதவீத என்எல்சி பங்குகளை விற்பனை செய்யும் முடிவை உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துவதோடு, மத்திய அரசின் இந்த மக்கள் விரோத நடவடிக்கைக்கு எதிராக பொது மக்களும், ஊழியர்களும் தங்களது வலுவான கண்டனக் குரலை எழுப்புமாறும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக்கொள்கிறது” என்று பெ.சண்முகம் கூறியுள்ளார்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。