




















Updated on
:
1 min read
சென்னை: “எஸ்ஐஆர் காரணமாக வாக்கு சதவீதம் அதிகரித்தது போன்ற தோற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தில் வழக்கமான வாக்குப் பதிவுதான் நடந்துள்ளது” என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “தமிழகத் தேர்தலில் வழக்கமான வாக்குப் பதிவுதான் நடந்துள்ளது. இதில் வியப்படைவதற்கு ஒன்றும் கிடையாது. வாக்காளர் பட்டியல் எஸ்ஐஆர் சிறப்பு திருத்தம் மூலம், லட்சக்கணக்கான வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டு உள்ளன. அவ்வாறு நீக்கம் செய்யப்படாமல் இருந்து, வாக்குப்பதிவு நடந்திருந்தால், பழைய மாதிரியே வாக்குப்பதிவு நடந்திருக்கும்.
ஆனால் எஸ்ஐஆர் திருத்தம் மூலம் வாக்குப் பதிவு செய்யப்படாமல், எண்ணிக்கையில் மட்டும் இருந்த, லட்சக்கணக்கான வாக்குகள் நீக்கம் செய்யப்பட்டு இருப்பதால், கூடுதலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது போன்ற தோற்றம் உருவாகி உள்ளது.
ஒவ்வொரு 5 ஆண்டு தேர்தலுக்குப் பிறகும், புதிய வாக்காளர்கள் 20 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் இணைவார்கள். அந்த வகையில், 20 லட்சம் முதல் 25 லட்சம் வரை புதிய வாக்காளர்கள் தற்போது சேர்ந்து உள்ளனர். அவர்கள் போட்ட வாக்குகள்தான் கூடுதலாகி உள்ளன. இது ஐந்த ஆண்டுகளுக்கு ஒரு முறை வழக்கமாக நடப்பதுதான்.
இந்த தேர்தலில் மீண்டும் திமுகதான் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மாபெரும் வெற்றி பெறும். இதை களத்தில் மக்களை நேரடியாகச் சந்தித்தபோது உணர முடிந்தது.
தமிழகத்தில் தொங்கு சட்டப்பேரவை அமையும் என்று நான் எப்போதும் சொல்லவில்லை. தேர்தலுக்குப் பிறகு அரசியல் சூழல் மாறும் என்றுதான் கூறினேன்.
அதாவது, தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, விஜய் வாங்கிற வாக்கு சதவீதத்தைப் பொறுத்து, தமிழக அரசியல் சூழல் மாறும் என்ற பொருளில் சொல்லி இருந்தேன்” என்று அவர் கூறினார்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。