


























Updated on:
லக்னோ: உத்தரப் பிரதேச தலைநகர் லக்னோவில் உள்ள பயிற்சி மைய கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் மாணவர்கள் உள்பட 14 பேர் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.
லக்னோ அலிகஞ்ச் பகுதியில் உள்ள மூன்று மாடி கட்டிடம் ஒன்றில் மாணவர்களுக்கான பயிற்சி மையம் ஒன்று செயல்பட்டு வந்தது. இங்கு, செல்ல பிராணிகளுக்கான கடை உள்ளிட்ட பிற கடைகளும் இதில் இயங்கி வந்துள்ளன.
இந்நிலையில், இந்த கட்டிடத்தில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென கொழுந்துவிட்டு எரிந்து வேகமாக கட்டிடம் முழுவதற்கும் பரவியது. பயிற்சி மையத்தில் இருந்த மாணவர்கள் பலர் இந்த தீ விபத்தில் சிக்கிய நிலையில், அவர்களில் சிலர் மாடியில் இருந்து கீழே குதித்துள்ளனர். மேலும், பலர் வெளியே வர முடியாமல் உள்ளேயே சிக்கிக் கொண்டுள்ளனர்.
தீ விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு தீ அணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து மாநில துணை முதல்வர் பிரஜேஷ் பதக்கும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார். ஒரு மணி நேரத்துக்கும் மேலாக தீ கொழுந்துவிட்டு எரிந்த நிலையில், தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதையடுத்து, கட்டிடம் முழுவதும் அதிகாரிகள் சென்று ஆய்வு செய்தனர். தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரதேச பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பிரஜேஷ் பதக், “இந்த சம்பவத்தில் 14 பேர் உயிரிழந்தனர். நான்கு பேர் காயமடைந்து கேஜிஎம்சி மருத்துவமனையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களுக்கு சிறந்த மருத்துவ சிகிச்சையை அளிப்பதே எங்கள் முன்னுரிமை. தீ விபத்து எப்படி, ஏன் ஏற்பட்டது என்பது குறித்த விவரங்கள் விசாரணை அறிக்கைக்குப் பிறகே தெரிய வரும்.
சம்பவ இடத்தில் தேடுதல் பணியை அதிகாரிகள் முடித்துவிட்டனர். மாணவர்கள் வேறு யாரும் உள்ளே சிக்கி இருக்கவில்லை என்பதை உறுதிப்படுத்தி உள்ளனர். இந்த தீ விபத்துக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு தனது முழு ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. தேவையான அனைத்து உதவிகளும் அவர்களுக்கு வழங்கப்படும்” என தெரிவித்தார்.
சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறுகையில், “இது மூன்று மாடி கட்டிடம். மேல் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டு வேகமாகப் பரவியது. மீட்புப் பணிகளின்போது சில ஜன்னல்கள் உடைக்கப்பட்டன. ஐந்து முதல் ஏழு மாணவர்கள் கிழே குதித்தனர். அவர்களில் ஒருவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது” என தெரிவித்தார்.
விபத்து குறித்து வேதனை தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。