























Updated on:
லண்டன்: பிரிட்டன் பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக கெய்ர் ஸ்டார்மர் அறிவித்துள்ளார். அடுத்த பிரதமரை தேர்வு செய்வதற்கான நடைமுறைகளைத் தொடங்க தனது தொழிலாளர் கட்சியை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
கடந்த 2024-ல் நடைபெற்ற பிரிட்டன் நாடாளுமன்றத் தேர்தலில் தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றதை அடுத்து அதன் தலைவரான கெய்ர் ஸ்டார்மர் பிரதமராக பதவியேற்றார். 2024-ம் ஆண்டு ஜூலை 5-ம் தேதி பதவியேற்ற கெய்ர் ஸ்டார்மர் கடந்த இரண்டு ஆண்டுகளாக பிரிட்டன் பிரதமராக உள்ளார்.
அடுத்த பொதுத் தேர்தல் 2029-ல் வர உள்ள நிலையில், கெய்ர் ஸ்டார்மர் தலைமையின் கீழ் மீண்டும் தேர்தலை சந்திப்பது குறித்து கட்சிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து, கட்சித் தலைவர் பதவியில் இருந்தும் பிரதமர் பதவியில் இருந்தும் ராஜினாமா செய்ய உள்ளதாக அவர் அறிவித்துள்ளார். தனக்குப் பதில் வேறு ஒருவரை கட்சித் தலைவராகவும் பிரதமராகவும் தேர்வு செய்வதற்கான நடைமுறைகளைத் தொடங்க கட்சியை அவர் கேட்டுக்கொண்டார்.
லண்டனில் பிரதமர் அலுவலகத்துக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த கெய்ர் ஸ்டார்மெர், தனது ராஜினாமா முடிவை அறிவித்தார். அப்போது, தொழிலாளர் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் குடும்பத்தினர் உடன் இருந்தனர். “கடந்த பொதுத் தேர்தலில் எனது தலைமையில் தொழிலாளர் கட்சி மிகப் பெரிய வெற்றியை பெற்றது. தொழிலாளர் கட்சியின் ஆட்சியால், கடந்த இரண்டு ஆண்டுகளில் பிரிட்டனில் மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்பட்டுள்ளது.
அடுத்த பொதுத் தேர்தலில் தொழிலாளர் கட்சியை வழிநடத்துவதற்கு ஏற்ப சிறந்த நிலையில் நான் இல்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன். எனவே, கட்சித் தலைவர் மற்றும் பிரதமர் பதவியில் இருந்து விலக இருக்கிறேன். எனது இந்த விலகல் முடிவை மன்னரிடம் தெரிவித்துவிட்டேன். எனக்குப் பதிலாக வேறு ஒருவரை தேர்ந்தெடுப்பதற்கான நடைமுறையை தொடங்குமாறு கட்சி நிர்வாகக் குழுவிடம் கேட்டுக்கொண்டுள்ளேன்.
ஜூலை 9-ம் தேதி வேட்புமனு தொடங்கி ஜூலை 16-ம் தேதிக்குள் அது நிறைவடையும். போட்டி இருந்தால், செப்டம்பரில் நாடாளுமன்றம் மீண்டும் கூடும் முன்பாக புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார். அதிகார மாற்றம் சுமுகமாக நடைபெறுவதை உறுதி செய்ய என்னால் இயன்ற அனைத்தையும் செய்வேன்.
தலைவர் பதவிக்கான போட்டி முடியும் வரை நான் பிரதமராக தொடர்வேன். எனக்குப் பின் பொறுப்பேற்க இருப்பவருக்கு முழுமையான மற்றும் உறுதியான ஆதரவை அளிப்பேன். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நான் பொறுப்பேற்றபோது இருந்ததைவிட தற்போது பிரிட்டன் மிகவும் வலிமையானதாக மாறி இருப்பதை அவர்கள் உணர்வார்கள் என்பது எனக்குத் தெரியும்.
நாட்டின் மிக முக்கியமான பணியில் இருந்து நான் விலகும்போது அதனினும் முக்கியமான மற்றொரு பணியில் அதிக நேரத்தை நான் செலவிட உள்ளேன். இன்ப, துன்பங்களில் எனக்கு உறுதுணையாக இருந்த எனது மனைவி விக்டோரியாவுக்கு சிறந்த கணவனாகவும், என் குழந்தைகளுக்கு சிறந்த தந்தையாகவும் இருப்பதற்காக அதிக நேரத்தை செலவிடுவேன்” என தெரிவித்தார்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。