
















Updated on:
புதுடெல்லி: நடிகையும் மாடலுமான ட்விஷா சர்மா உயிரிழந்த விவகாரம் தொடர்பாக அவரது மாமியாரும் ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதியுமான கிரிபாலா சிங்கை சிபிஐ கைது செய்துள்ளது.
ட்விஷா சர்மா மே 12-ம் தேதி, போபாலில் உள்ள அவரது கணவர் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இது தொடர்பாக மே 15-ம் தேதி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. அதே நாளில், போபால் விசாரணை நீதிமன்றம், கிரிபாலா சிங்குக்கு ஜாமின் வழங்கியது. அதேநேரத்தில், ட்விஷா சர்மாவின் கணவர் சமர்த் சிங் கைது செய்யப்பட்டு சிபிஐ காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், கிரிபாலா சிங்குக்கு வழங்கப்பட்டிருந்த முன்ஜாமீனை மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம் நேற்று (புதன்கிழமை) நள்ளிரவு ரத்து செய்தது.
வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி தேவநாராயண் மிஸ்ரா, “ட்விஷா சர்மா மரண வழக்கு தொடர்பான விசாரணைக்கு அவரது மாமியாரான கிரிபாலா சிங் போதிய ஒத்துழைப்பை அளிக்கவில்லை என்பது உறுதியாகி இருக்கிறது. மேலும், அவர் மீது தீவிர குற்றச்சாட்டு உள்ள நிலையில் அதன் தீவிர தன்மையை விசாரணை நீதிமன்றம் முறையாக பரிசீலிக்கத் தவறி உள்ளது. எனவே, கிரிபாலா சிங்குக்கு அளிக்கப்பட்ட ஜாமின் ரத்து செய்யப்படுகிறது” என உத்தரிவிட்டார்.
இதையடுத்து, கிரிபாலா சிங்கை சிபிஐ கைது செய்துள்ளது. முன்னதாக, இந்த வழக்கில் சிபிஐ பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில், ‘ட்விஷா சர்மாவின் மாமியாரும், ஓய்வு பெற்ற கூடுதல் மாவட்ட நீதிபதியுமான கிரிபாலா சிங், கடந்த 2025-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற திருமணத்தின் போது ரூ.2 லட்சம் வரதட்சணை கேட்டு கட்டாயப்படுத்தியுள்ளார்.
இதன்படி ரூ.2 லட்சத்தை கொடுத்துள்ளனர். திருமணம் முடிந்த ஒரு சில மாதங்களிலேயே ட்விஷாவுக்கு அவரது கணவர் சமர்த் சிங் மற்றும் மாமியார் கிரி பாலா சிங் ஆகியோரால் கடுமையான மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது.
மேலும், திருமணத்துக்குப் பிறகு ட்விஷாவின் அடிப்படை தேவைகளுக்குக் கூட அவரது கணவரும் மாமியாரும் பணம் கொடுக்க மறுத்துள்ளனர். இதனால், ட்விஷாவின் பெற்றோர் ஆன்லைன் மூலம் பணம் அனுப்பி வந்துள்ளனர்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。