




















நடவடிக்கை கோரி ஓட்டுநர், நடத்துநர்கள் போராட்டம்
Updated on:
மதுரை: சோழவந்தான் அருகே அரசுப் பேருந்து ஓட்டுநரை கத்தியால் வெட்டிய தவெக பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஓட்டுநர், நடத்துநர்களின் பணி புறக்கணிப்பால் பேருந்து ஓடவில்லை.
மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து நேற்று இரவு 10.40 மணிக்கு கடைசி நேர அரசு நகர பேருந்து சென்றுள்ளது. இந்தப் பேருந்தை பிரசாத் என்பவர் ஒட்டினார். பயணிகளை ஊரில் இறக்கிவிட்டுவிட்டு சோழவந்தானுக்கு திரும்பியது. கருப்பட்டிக்கு அருகே 4 பேர் மெயின் ரோட்டின் குறுக்கே கார் ஒன்றை நிறுத்தி இருந்தனர். காரை எடுக்கச் சொல்லி ஓட்டுநர் பிரசாத் அவர்களை எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது கருப்பட்டியைச் சேர்ந்த தங்கம் என்பவரின் மகன் தனுஷ்கோடி (45), பிரசாத்தை கத்தியால் தலையில் வெட்டியுள்ளார். அவருக்கு ரத்தம் கொட்டியது. அந்தப் பேருந்தில் பணியில் இருந்த நடத்துநர் மொக்கசாமி 108 ஆம்புலன்ஸை வரவழைத்து மதுரை அரசு மருத்துவமனையில் பிரசாத்தை அனுமதித்தார்.
இந்நிலையில், இந்தத் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தனுஷ்கோடியை உடனே கைது செய்ய வலியுறுத்தியும், சோழவந்தான் அரசு பேருந்து பணிமனையில் 300-க்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள், நடத்துநர்கள், பணிமனை ஊழியர்கள் இன்று காலை முதல் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இதன் காரணமாக சோழவந்தான் பணிமனையில் 55 அரசு பேருந்துகள் இயங்காமல் நிறுத்தப்பட்டன. பணிக்குச் செல்வோர் உள்ளிட்ட பொது மக்கள் பாதிக்கப்பட்டனர்.
அரசு போக்குவரத்து கழக மேலாளர்கள், போலீஸ் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர். ஓட்டுநரை தாக்கிய தனுஷ்கோடி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் உறுதியளித்தனர்.
தனுஷ்கோடி மீது போலீஸார் வழக்குப் பதிவு அவரை தேடுகின்றனர். ஏற்கெனவே தனுஷ்கோடி மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும், குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளார் என்றும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
அரசுப் பேருந்து ஓட்டுநரை தாக்கிய தனுஷ்கோடி தவெக கட்சியில் உறுப்பினராக இருப்பதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。