





















Updated on:
சென்னை: நெருக்கடி நிலையின் 51-வது ஆண்டு நினைவையொட்டி, தமிழக பாஜக சார்பில் சென்னை தி.நகரில் உள்ள கமலாலயத்தில் நேற்று “அரசியலமைப்பு படுகொலை தினம்” கடைப்பிடிக்கப்பட்டது.
இதில், பாஜக தேசிய இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதில் சுதாகர் ரெட்டி பேசியதாவது: 1975 ஜூன் 25 அன்று, மக்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டு, பத்திரிகை சுதந்திரம் நசுக்கப்பட்டு ஏராளமானோர் சிறையில் அடைக்கப்பட்டனர். ‘இந்தியாதான் இந்திரா, இந்திராதான் இந்தியா’ என்ற முழக்கம் உருவானது.
இது ஜனநாயகம், அரசியலமைப்புக்கு மேலாக ஒரு தனிநபர் அதிகாரம் குவிக்கப்பட்டதன் ஆபத்தான அடையாளம் ஆகும். அவசரநிலை காலத்தில் கொண்டுவரப்பட்ட 42-வது சட்டத்திருத்தம், அரசின் கைகளில் எல்லையற்ற அதிகாரத்தைக் குவித்து, நிறுவனங்களின் சுதந்திரத்தையும் அரசியலமைப்பின் ஆன்மாவையும் சிதைத்தது.
பின்னர் அந்த விதிகள் மாற்றப்பட்டு, அரசியலமைப்புச் சமநிலை மீட்டெடுக்கப்பட்டது. அன்று ஜனநாயகத்தைக் காக்க சிறைவாசம் அனுபவித்த தியாகிகளின் உத்வேகமே இன்று நம்மை வழிநடத்துகிறது.
இந்நிலையில், தற்போது, பிரதமர் மோடியின் தலைமையிலான அரசு தொலைநோக்கு, அரசியலமைப்பு விழுமியங்களை பாதுகாத்து வருகிறது. தேசியக் கல்விக் கொள்கை மற்றும் ஜம்மு-காஷ்மீருக்கான பிரிவு 370 ரத்து போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவுகள் மூலம் தேசிய விருப்பங்கள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.
எனவே, நெருக்கடி நிலை தந்த வரலாற்றுப் பாடங்களை இன்றைய இளைஞர்கள் விரிவாகக் கற்க வேண்டும். ஜனநாயகம் என்பது நமக்கு எளிதாகக் கிடைத்து விடவில்லை. அரசியலமைப்பையும், ஒவ்வொரு குடிமகனின் சுதந்திரத்தையும் பாதுகாக்கும் பொறுப்பு அடுத்தடுத்த தலைமுறைகளிடம் உள்ளது என்றார்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。