

























Updated on
:
1 min read
சென்னை: தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க 118 தொகுதிகளில் கட்டாயம் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு, எந்த கட்சியும் 118 தொகுதிகளை பெற்றிருக்காத நிலையில், ஜனநாயக முறைப்படி அரசியலமைப்பு சட்டப் பிரிவுகள் 163 மற்றும் 164-ன்படி தமிழக ஆளுநர் 4 வழிமுறைகளைக் கையாண்டு அரசியல் கட்சிகளை ஆட்சியமைக்க சட்ட ரீதியாக அழைப்பு விடுக்கலாம்.
அதன்படி தேர்தலுக்கு முன்பே அரசியல் கட்சிகள் ஒன்றாகச் சேர்ந்து கூட்டணி அமைத்திருந்தால் அந்த கூட்டணியை அழைக்கலாம். அதிக இடங்களைக் கைப்பற்றிய கட்சி போதிய ஆதரவுடன் இருந்தால் அக்கட்சியை அழைக்கலாம். தேர்தல் முடிந்த பிறகு வெற்றி பெற்ற கட்சிகள் தங்களுக்குள் கூட்டணி அமைத்து இருந்தால் அழைக்கப்படலாம்.
பெரும்பான்மை அவசியம்
வெளியிலிருந்து பெறப்படும் ஆதரவுடன் பெரும்பான்மையற்ற மைனாரிட்டி ஆட்சியை அமைக்கும் கட்சியை அழைக்கலாம். இந்த வழிமுறைகளின்படி ஆட்சியமைக்கப்படும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட கட்சியின் சட்டப்பேரவை கட்சித் தலைவராக தேர்வானவர் முதல்வராக நியமிக்கப்படலாம்.
அதன்பிறகு அந்த கட்சியின் முதல்வர் அரசியலமைப்பு சட்டப்பிரிவு 174-ன்படி எஸ்.ஆர். பொம்மை வழக்கில் உச்ச நீதிமன்றம் கடந்த 1994-ல் பிறப்பித்த தீர்ப்பின் அடிப்படையில் அந்த கட்சி சார்பில் சட்டப்பேரவையைக் கூட்டுவார். சட்டப்பேரவையில் ஆட்சி அமைத்த கட்சி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்.
அந்த கட்சி தனிப்பெரும்பான்மைக்கான பலத்தை, அதாவது 118 உறுப்பினர்களின் ஆதரவு தங்களுக்கு இருக்கிறது என்பதை நிரூபித்துவிட்டால் அந்த ஆட்சி எந்தவொரு பிரச்சினையும் இன்றி தொடரும்.
ஒருவேளை அந்தக் கட்சியால் பலத்தை நிரூபிக்க முடியாவிட்டால் அதற்கு அடுத்த இடத்தில் உள்ள கட்சி ஆட்சியமைக்கும் வகையில் தங்களது பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் அழைப்புவிடுப்பார்.
அதன்படி அந்தக் கட்சி தங்களது பலத்தை சட்டப்பேரவையில் நிரூபித்துவிட்டால் அந்த கட்சி ஆட்சியமைக்கும். இரண்டாவதாக அழைக்கப்பட்ட கட்சியும் ஆட்சியமைக்க முடியாவிட்டால் அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 356-ன்படி குடியரசுத் தலைவர் ஆட்சி பிரகடனப்படுத்தப்படும். அதன்பிறகு மீண்டும் புதிதாக தேர்தல் நடத்தப்படும்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。