























சி.விஜயபாஸ்கர் | கோப்புப்படம்
Updated on:
சென்னை: “உழைக்கும் தொண்டர்களின் மனதை வெல்ல முடியாத தலைமை, மக்களின் மனதை எப்படி வெல்லும்?” என தனது எக்ஸ் பக்கப் பதிவு மூலம் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை மறைமுகமாக விமர்சித்திருக்கிறார் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்.
2026 சட்டப்பேரவை தேர்தலுக்குப் பிறகு, எடப்பாடி பழனிசாமி மற்றும் சி.வி.சண்முகம் - எஸ்.பி.வேலுமணி அணி என இரு தரப்பாக அதிமுகவில் உட்கட்சிப் பூசல் ஏற்பட்டது. பின்னர் எஸ்.பி.வேலுமணி இபிஎஸ்ஸுடன் சமாதானம் ஆனார்.
சி.வி.சண்முகம், கடந்த ஞாயிற்றுக் கிழமை செய்தியாளர்களை சந்தித்தபோது, “அதிமுக ஒரு குடும்பத்தின் பிடிக்குள் செல்கிறது. கட்சி காப்பாற்றப்பட வேண்டும். கட்சியின் செயற்குழு கூட்டத்தையாவது உடனடியாகக் கூட்ட வேண்டும்” என்று கட்சித் தலைமையின் மீது சரமாரி குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
இந்தச் சூழலில், சி.விஜயபாஸ்கரும் தவெகவில் இணையப் போவதாகச் செய்திகள் பரவிய நிலையில், அவர் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவு கவனம் பெற்றுள்ளது.,
அதிமுக தலைமை மீதான அதிருப்தியை மீண்டும் அவர் பதிவு செய்துள்ளதாகப் பார்க்கப்படுகிறது.
இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “தலைமை என்பது அதிகாரமோ, ஆணவமோ அல்ல. ‘அர்ப்பணிப்பு மிகுந்த அரவணைப்பு’. உழைக்கும் தொண்டர்களின் மனதை வெல்ல முடியாத தலைமை, மக்களின் மனதை எப்படி வெல்லும்? உணர்வுகளை மதிக்காத இடத்தில் உண்மையான பயணம் சாத்தியமா?” எனப் பதிவிட்டுள்ளார்.
இதன்மூலம், சி.விஜயபாஸ்கர் தவெகவுக்கு செல்ல முடிவு எடுத்துவிட்டது போலவும், அதற்கு அதிமுக தலைமை தான் காரணம் என்பதுபோலவும் இருப்பதாகக் கூறப்படுகிறது.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。