

























Updated on
:
3 min read
சினிமாவைப் போல் அரசியலிலும் அவ்வப்போது சூப்பர் ஸ்டார்கள் கிளம்பி ஓர் அலை போல் அடித்து வாக்குகளைச் சுருட்டிச் செல்வதுண்டு. அதில் மோடி அலை, கேஜ்ரிவால் அலை, எம்ஜிஆர் அலை முதல் இப்போதைய விஜய் அலை வரை பட்டியலிட்டுக் கொள்ளலாம். எல்லாம் அவர்கள்மயமாகி அவர்களைப் பற்றியே செய்திகளும், விவாதங்களும் சுழலும். அரசியலில் அவர்கள் ‘ஓம் க்ரீம்’ போன்ற மந்திரமொழியாகிப் போவார்கள்.
இந்திய அரசியலில் இப்போது அப்படியொரு புதிய சூப்பர் ஸ்டார் உருவாகியிருக்கிறார் / உருவெடுத்துள்ளது - (திணைப் பிரச்சினையை விட்டுவிடுவோம்). அந்த சூப்பர் ஸ்டார் வேறு யாருமில்லை கரப்பான்பூச்சி (cockroach).
இந்தியாவின் ஆளுங்கட்சிக்கு தாமரை சின்னம், எதிர்க்கட்சிக்கு கை சின்னம் ஆனால் நம் புதிய ‘பொலிட்டிக்கல் சூப்பர் ஸ்டார்’ கட்சிக்கு கைகட்டி ஸ்டைலாக நிற்கும் கரப்பான்பூச்சியே சின்னம். கட்சியின் பெயர் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (Cockroach People's Party - CJP). நாம் முதல் பத்தியிலேயே சொன்னதுபோல் ஒட்டுமொத்த ஊடக வெளிச்சமும் சிஜிபி மேல்தான் இப்போது. இனி ப்ரைம் டைம் விவாத நிகழ்ச்சிகளிலும் கூட அந்த சூப்பர் ஸ்டார் ஹிட் ஆகலாம்!
தொடக்கப்புள்ளி எது?
கடந்த வாரம் உச்ச நீதிமன்றத்தில் நடந்த ஒரு விசாரணையின்போது பேசிய தலைமை நீதிபதி சூர்ய காந்த், “கரப்பான்பூச்சிகளைப் போன்ற இளைஞர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு எந்த வேலையும் இருப்பதில்லை; எந்தத் தொழிலும் செய்வதில்லை. அவர்களில் சிலர் ஊடகவியலாளர்களாகவும், சமூக ஊடகங்களில் செல்வாக்கு செலுத்துபவர்களாகவும், தகவல் அறியும் உரிமை ஆர்வலர்களாகவும் மாறி அனைவரையும் தாக்க தொடங்குகிறார்கள்” எனக் கூறியிருந்தார்.
அதை பகடி செய்யும் விதமாக உருவாக்கப்பட்ட ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ என்ற எக்ஸ் பக்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் எம்பிக்களான மஹுவா மொய்த்ரா, கீர்த்தி ஆசாத் ஆகியோர் இணைந்னர். அன்றிலிருந்து அந்தக் கட்சியும், லோகோவும் இணையத்தில் மிகவும் பிரபலமானது.
இந்திய இளைஞர்கள் பலரும் இந்தப் பக்கத்தில் குவிந்து கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். “கரப்பான்பூச்சிகளை அழிப்பது அவ்வளவு எளிதல்ல.. அதுபோலத்தான் நாங்கள்..” என்று அவர்கள் கருத்து கூறி வருகின்றனர்.
இதற்கிடையில், நீதிபதியும், “நான் இந்திய இளைஞர்கள் என்று பொதுப்படையாகச் சொல்லவில்லை, சில இளைஞர்கள் போலி பட்டங்களுடன் உலா வருகின்றனர். அவர்களைத்தான் சொன்னேன்,” என்று விளக்கமளித்தார். ஆனால், இளைஞர்கள் ஓய்வதாக இல்லை.
நையாண்டி கட்சிதான், ஆனால்...
கரப்பான்பூச்சி ஜனதா கட்சியானது தலைமையும், தொண்டர்களும் கொண்ட நிஜமான அரசியல் கட்சி அல்ல. மாறாக, சமுதாய சீர்கேடுகளை கேள்விக்கு உள்ளாக்கும் நையாண்டி கட்சி. இதில் சேருபவர்களுக்கு சில தகுதிகள் இருக்கின்றன. வேலைவாய்ப்பற்றவர்கள், அதனால் சோம்பேறிகளாகி எப்போதும் ஆன்லைனில் கிடப்பவர்கள் ஆனாலும் தரமான அரசியல் பார்வைகளை, சமூகக் கருத்துகளை முன்வைக்கக் கூடியவர்கள் இதில் இணையலாம்.
இதைத் தொடங்கியவர், அமெரிக்காவின் பாஸ்டன் பல்கலைக்கழகத்தின் மாணவரும், அரசியல் தொடர்பு உத்தியாளருமான 30 வயதே ஆன அபிஜீத் திப்கே. இவர்தான் சிஜேபி எக்ஸ் பக்கத்தைத் தொடங்கினார்.
சிஜேபி என்ற ஆன்லைன் கட்சியை உருவாக்குவது விளையாட்டாக ஆரம்பமானது என்கிறார் அவர். அமெரிக்கா செல்லும் முன் அவர் ஆம் ஆத்மி கட்சியில் பணியாற்றியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிஜேபி-யை கூகுள் ஃபார்ம் ஆக ஆன்லைனில் இறக்கிவிட்டு, “நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். ஒரு தளத்தை உருவாக்குவோம்” என்று குறிப்பிட்டிருந்தார்.
ஆனால், சில நாட்களிலேயே ஆயிரக்கணக்கானோர் அந்த கூகுள் ஃபார்மில் சிஜேபி-யை ஆமோதித்து கையொப்பமிட்டனர். #MainBhiCockroach ( நானும் ஒரு கரப்பான்பூச்சி) என்ற ஹேஷ்டேக் அவர்களை வெகுவாக ஈர்த்தது. இந்த இயக்கம், வீதிக்கும் வந்தது. வேலைவாய்ப்பின்மையால் பாதிக்கப்பட்ட சில இளைஞர்கள் கரப்பான்பூச்சி வேடமணிந்து ஆதரவு தெரிவித்தனர்.
மே 21 நிலவரப்படி சிஜிபி இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர்வோர் எண்ணிக்கை 1 கோடியாக உயர்ந்தது. பாஜகவின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டா பக்கத்துக்கான ஃபாலோயர்ஸ் விட இது அதிகமானது.
இந்தச் சூழலில் சிஜேபி-யின் எக்ஸ் கணக்கிலும் 2 லட்சம் ஃபாலோயோர்ஸ்கள் வர, அது தற்காலிகமாக முடங்கிப் போனது. பின்னர் அது மீட்டெடுக்கப்பட்டது. சில மணி நேரங்களிலேயே எக்ஸ் கணக்கு மீட்கப்பட அதன் கீழே, ‘மீண்டும் வந்தது கரப்பான்பூச்சி - எங்களை ஒழித்துவிடலாம் என நினைத்தீர்களா?’ என்று பதிவிடப்பட்டுள்ளது.
அதேபோல் சிஜேபி இன்ஸ்டா பக்கத்தை ஹேக் செய்ய முயற்சி நடந்ததாக அபிஜீத் தீப்கே கூறியிருக்கிறார். இன்ஸ்டா பக்கத்தில் பகிரப்பட்ட புகைப்படத்தில், தாமரையை கரப்பான்பூச்சி உண்பதுபோல் காட்டப்பட்டிருக்கிறது. வெறும் 4 நாட்களில் பாஜக இன்ஸ்டா ஃபாலோயர்ஸ் எண்ணிக்கையை கடந்ததை இப்படி பகடி செய்திருக்கிறார்கள்.
இளைஞர்கள் அமோக ஆதரவு ஏன்?
ஓர் அமைப்பாகவோ, அதிகாரம் செலுத்தக் கூடியதாகவோ அல்லாது ஆன்லைன் பகடி கட்சியாக உருவாக்கப்பட்ட சிஜேபி-க்கு ஏன் இத்தனை ஃபாலோயர்கள், ஏன் இத்தனை பிரபல்யம், ஏன் இந்த அமோக ஆதரவு என்று அரசியல் ஆலோசகர் ஒருவரிடம் கேட்டால், “இந்திய இளைஞர்கள் இணையத்தில் அரசியல் கட்சிகளின் கருத்துகளை நிறையவே பார்க்கின்றனர். ஆனாலும், எங்கேயும் தங்களைப் போன்ற வேலையில்லா இளைஞர்களுக்கான குரல் இல்லை; தங்களுக்கான பிரதிநிதித்துவம் இல்லை என்று உணர்கின்றனர். அதனால் தான் இளைஞர்களின் வேலையின்மை உள்ளிட்டப் பிரச்சினைகளைப் பேசும் சிஜிபி சமூக வலைதள பக்கங்களில் குவிகின்றனர்,” என்கிறார்.
ஆனால், ஆளுங்கட்சி ஆதரவாளர்களோ, “இது எதிர்க்கட்சிகளுடன் தொடர்புடைய அரசியல் சித்து விளையாட்டு. நாகரிகமான இணைய அரசியலுக்கு சவால்விடும் தன்னிச்சையான கிளர்ச்சி” என்று விமர்சிக்கின்றனர்.
உலகிலேயே இந்தியாவில்தான் 30 வயதுக்குக் கீழே உள்ள இளைஞர்களின் எண்ணிக்கை அதிகம். சுமார் 70 கோடி பேர் இந்த வயது வரம்புக்குள் உள்ளனர். இந்நிலையில், 29% இந்திய இளைஞர்கள் அரசியல் ஈடுபாட்டை முழுவதுமாக தவிர்க்கின்றனர் என்கிறது ஒரு புள்ளிவிவரம். 11% பேர் மட்டுமே ஏதேனும் அரசியல் கட்சியின் உறுப்பினராக இருக்கின்றனர்.
இதைச் சுட்டிக் காட்டும் தீப்கே, “தங்கள் குரல் கேட்கப்படவில்லை. பிரதிநிதித்துவமும் பெறவில்லை என்ற விரக்தியில் இந்திய இளைஞர்கள் இருக்கிறார்கள்” என்கிறார்.
“அண்மைக் காலமாகவே தெற்கு ஆசியாவின் இலங்கை, நேபாளம், வங்கதேசம் போன்ற நாடுகளில் விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை ஆகியனவற்றால் வெகுண்டெழுந்த இளைஞர்கள் நடத்திய போராட்டங்கள் ஆட்சி மாற்றத்துக்கு வித்திட்டிருக்கிறது. இந்தியா அதுபோன்றதொரு நிலையை தவிர்த்துக் கொண்டிருக்கிறது. ஆனால் அதற்கான அழுத்தம் கனன்று கொண்டிருக்கிறது.
இந்தியப் பொருளாதார வளர்ச்சிக் குறியீடுகள் ஏறுமுகம் காட்டினாலும் கூட வேலை நிமித்தமான பதற்றங்கள், சமத்துவமின்மை, விலைவாசி உயர்வு தரும் நெருக்கடிகள் இருக்கத்தானே செய்கின்றன. கல்வி வாழ்க்கையில் முன்னேற்றத்துக்கான உத்தரவாதத்தைத் தருவதாக இல்லை. வாழ்க்கைத்தரம் மேல்நோக்கி நகரும் என்பதற்கு உறுதியைத் தருவதாக இல்லை.
இந்திய ஜென் Z இளைஞர்கள், பாரம்பரிய அரசியல் கட்சிகளைக் கைவிடத் தொடங்கியுள்ளனர். அவர்கள் தங்கள் வேதனையை, மொழியை அறிந்த புதிய அரசியல் அமைப்புகளை விரும்புகின்றனர். சிஜேபி பக்கத்தில் வரும் கருத்துகள் அதையே பிரதிபலிக்கின்றன. அங்கே வரும் இளைஞர்கள், “எல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது” என்று போலியாகச் சொல்ல விரும்பாதவர்கள்” என்கிறார் தீப்கே.
காட்சி மாறலாம்...
இளைஞர்கள் தங்கள் கோபத்தையும், ஆதங்கத்தையும் வெளிப்படுத்தும் புகலிடமாக இருக்கும் சிஜேபி, விரைவில் காணாமல் போகலாம். அது பிரபலமான அதே வேகத்தில் இல்லாமல் போகலாம்.
ஆனாலும், இந்திய அரசியலில் சிஜேபியும், கரப்பான்பூச்சி எனும் சூப்பர் ஸ்டாரும் ஏற்கெனவே ஒரு புதுமையைப் புகுத்திவிட்டன. காட்சிகள் மாறினாலும் இந்த அலை ஓயாது எனலாம். மீம் பார்ட்டியும், பூச்சி சின்னமும் இந்திய இளைஞர்களின் கோபத்தின் சாட்சியாக வரலாற்றில் நிற்கும்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。