

























எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்
Updated on:
தஞ்சாவூர்: “சட்டப்பேரவையின் தரத்தை ஆளுங்கட்சி குறைத்து வருகிறது. எதற்கெடுத்தாலும் திமுகதான் காரணம் என ஆயத்தமான பதிலை ஆட்சியாளர்கள் வைத்துள்ளனர். தமிழ்நாடு தற்போது மிகப் பெரிய பேரிடரில் சிக்கியுள்ளது” என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாட்டில் இன்று நடைபெற்ற திமுக நிர்வாகி இல்ல திருமண விழாவில் பங்கேற்று உதயநிதி ஸ்டாலின் பேசியது: இந்த சோஃபா மாடல் ஆட்சியின் போலி பிம்பம் கடந்த ஒரு மாதத்தில் நொறுங்கிக் கிடக்கிறது. ஒவ்வொரு நாளும் இந்த ஆட்சியின் அவலங்கள் அனைத்தையும் மக்கள் புரிந்து வருகின்றனர். இந்த அரசின் தவறுகளை, சறுக்கல்களை இளைஞர்கள் தட்டிக் கேட்கத் தொடங்கிவிட்டனர். ஆனால், அப்படி தட்டிக்கேட்கிற இளைஞர்களை, நம்முடைய கழகத்தினரை கைது செய்யும் வேலையை இந்த ஷோஃபா மாடல் அரசு தொடங்கியுள்ளது.
தூய சக்தி எனக் கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், அடுத்து நிமிடங்களில் குதிரை பேரத்தைத் தொடங்கிவிட்டனர். மேலும், தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் மின் வெட்டு நிகழ்கிறது. இதனால், விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு அரசு அறிவித்த குறுவை சாகுபடி சிறப்பு தொகுப்புத் திட்டம் போதவில்லை என விவசாயிகள் சாலையில் வந்து போராட்டம் நடத்துகின்றனர்.
இதைச் சட்டப்பேரவையில் கூறியபோது, திமுகவின் தூண்டுதலால் விவசாயிகள் போராட்டத்துக்கு வருவதாக முதல்வர் கூறினார். தமிழ்நாட்டில் தற்போது சட்டம் - ஒழுங்கை ஆட்சியாளர்கள் படுகுழியில் தள்ளியுள்ளனர். இது குறித்து சட்டப்பேரவையில் பேசியபோது, அதற்கு முதல்வர் பதில் அளிக்கவில்லை. சட்டப்பேரவையில் ஆளுங்கட்சியினர் என்னென்ன கூத்துகள் நடத்தினர் என்பது அனைவரும் தொலைக்காட்சியில் பார்த்துள்ளனர்.
இது சட்டப்பேரவையா அல்லது திரையரங்கமா அல்லது சூட்டிங் நடைபெறும் இடமா எனக் கேட்கும் அளவுக்கு சட்டப்பேரவையின் தரத்தை ஆளுங்கட்சி குறைத்து வருகிறது. ஆனால், எதற்கெடுத்தாலும் திமுகதான் காரணம் என ஆயத்தமான பதிலை ஆட்சியாளர்கள் வைத்துள்ளனர். தமிழ்நாடு தற்போது மிகப் பெரிய பேரிடரில் சிக்கியுள்ளது. இதிலிருந்து தமிழ்நாட்டை மீட்க வேண்டியது நம்முடைய பொறுப்பு. அதற்காக நாம் அனைவரும் வருங்காலத்தில் ஒற்றுமையுடன் உழைக்க வேண்டும். இவ்வாறு உதயநிதி பேசினார்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。