






















Updated on
:
1 min read
சென்னை: பொறியியல் கல்லூரிகளில் பிஇ, பிடெக் இடங்களில் சேருவதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தொழில்நுட்பக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் 440-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இங்கு வழங்கப்படும் பிஇ, பிடெக் படிப்புகளில் உள்ள சுமார் 1.70 லட்சம் இடங்கள் பொதுக் கலந்தாய்வு மூலம் ஒற்றைச் சாளர முறையில் நிரப்பப்படுகின்றன.
மாணவர் சேர்க்கைப்பணிகளை தமிழக அரசு சார்பில் மாநில தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் மேற்கொள்கிறது. இந்நிலையில், வரும் 2026-27-ம் கல்வி ஆண்டில் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு நேற்று வெளியாகியுள்ளது.
இதுகுறித்து தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் எஸ்.விசாகன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழக வளாக பொறியியல் கல்லூரிகள், அண்ணாமலை பல்கலைக்கழகம் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின்கீழ் பிஇ, பிடெக் இடங்களில் சேருவதற்கான கலந்தாய்வில் பங்கேற்க ஆன்லைன் விண்ணப்ப பதிவு மே 3 (நேற்று) முதல் ஜூன் 2-ம் தேதி வரை நடைபெறும். www.tneaonline.org என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்ப நடைமுறை, கால அட்டவணை, சான்றிதழ்கள் பதிவேற்றும் முறை (ஒலி - ஒளி வாயிலாக), கடந்த 5 ஆண்டுகளில் கல்லூரி பாடப்பிரிவு மற்றும் வகுப்பு வாரியாக கட்ஆஃப் மதிப்பெண் மற்றும் தரவரிசை விவரங்கள், பொறியியல் சேர்க்கை சேவை மையங்கள், சிறப்பு ஒதுக்கீட்டில் சேருவதற்கான சான்றிதழ் மாதிரிகள் உள்ளிட்ட தகவல்களும் இணையதளத்தில் உள்ளன.
விண்ணப்ப பதிவு கட்டணம் ரூ.500. எஸ்சி, எஸ்சி-அருந்ததியர், எஸ்டி பிரிவினருக்கு ரூ.250. இணையதள வசதி இல்லாதவர்கள் பயன்பெறும் வகையில் தமிழகம் முழுவதும் 110 பொறியியல் சேர்க்கை சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றின் முகவரி, தொடர்பு எண்கள் இணையதளத்தில் தரப்பட்டுள்ளன.
பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் சந்தேகங்கள், கேள்விகளுக்கு விளக்கம் அளிக்க தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தில் சிறப்பு அழைப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. 1800-425-0110 என்ற எண்ணில் இந்த மையத்தை காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。