惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

小众软件
小众软件
博客园 - Franky
罗磊的独立博客
G
Google Developers Blog
The GitHub Blog
The GitHub Blog
P
Proofpoint News Feed
Recent Announcements
Recent Announcements
V
V2EX
F
Fortinet All Blogs
阮一峰的网络日志
阮一峰的网络日志
Blog — PlanetScale
Blog — PlanetScale
月光博客
月光博客
U
Unit 42
GbyAI
GbyAI
A
About on SuperTechFans
WordPress大学
WordPress大学
Engineering at Meta
Engineering at Meta
雷峰网
雷峰网
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
Martin Fowler
Martin Fowler
D
DataBreaches.Net
The Cloudflare Blog
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
MongoDB | Blog
MongoDB | Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
Bulbbul: கொலையும் செய்வாள் புல்புல் | திரை தேவதைகள் 15
2026-04-25 · via hindutamil
பாரதி ஆனந்த்

Updated on

8 min read

ஒரு குட்டி வரலாற்றுக் குறிப்பு சொல்கிறேன்... 1600-களில் அமெரிக்காவின் மாஸசட்ஸ் மாகாணத்தில் சேலம் என்றிடத்தில் ‘விட்ச் ட்ரயல்ஸ்’ என்றொரு சம்பவம் நடந்திருக்கிறது. இதை பிரபலமாக ‘சேலம் விட்ச் ட்ரயல்ஸ்’ (Salem Witch Trials) என்றழைக்கின்றனர். அதில், பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். கொலையானவர்களில் பெரும்பாலானோர் பெண்கள். அவர்கள் எதற்காக கொல்லப்பட்டார்கள் என்பது பற்றி பல்வேறு தியரிகள் உண்டு. அதில் அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டவற்றில் ஒன்று, மதத்தை எதிர்த்ததற்கு, மதம் திணித்த ஆணாதிக்கத்தை எதிர்த்தற்கு, கல்வி கற்றதற்கு, மூலிகை மருத்துவம் பயின்றதற்கு, சில நேரங்களில் அதிருசியாக சமைத்ததற்காகக் கூட பெண்கள் கொல்லப்பட்டார்கள் என்பது. ஆண் எதிர்பார்ப்பைக் கடந்து நடந்த பெண்கள் ‘விட்ச்’ என்றும், அவர்களை ஆதரித்த ஆண்களும் ‘விட்ச்’ என்றும் வரையறுக்கப்பட்டு படுகொலைகள் நடந்தேறியிருக்கின்றன.

அப்படியே, உங்கள் நினைவலைகளை சற்று முன்னோக்கி செலுத்தி 2024-ல் வெளியான ‘கொட்டுக்காளி’ திரைப்படத்தின் சில காட்சிகளை வேகமாக ஓட்டிப் பாருங்களேன். அதில் பேய் பிடித்ததாக சொல்லப்படும் மீனாவுக்கு (அன்னா பென்), பாண்டி (சூரி) உடனான திருமணத்தில் இஷ்டமில்லை என்று புரிந்து கொள்ளலாம். வெறித்த கண்களோடு இருக்கும் அவளை பேயோட்ட குடும்பத்தினர் அழைத்துச் செல்வர். ஆட்டோவில் செல்லும்போது சினிமா பாடலைப் பாடும் மீனாவை பாண்டி மூர்க்கத்தனமாக அடித்துத் துவைப்பான். “பாட்டு கேக்குதாடி உனக்கு. அவன நெனச்சு பாடுறியோ...” என்று கெட்டவார்த்தைகளையும் சேர்த்துக் கொண்டு வசை பாடுவான். காதலித்திருப்பாள் போல மீனா! அதனால்தான் அவள் ‘கொட்டுக்காளி’.

இப்படியாக, தாம் வகுத்த சட்டத் திட்டங்களுக்குள், தாம் எதிர்பார்த்தபடியே பொருந்திப் போகும் பெண்களை தாயென்று, தெய்வமென்று போற்றும் உலகம், அதிலிருந்து இம்மி விலகினாலும்கூட அவளை ‘கொட்டுக்காளி’ என்றும் ‘சூனியக்காரி’ என்றும் தூற்றும்.

இதை இந்த உலகமே தமக்கானது என்று பட்டயம் போட்டு வைத்திருக்கும் ஆணாதிக்க சமூகம், நிலபரப்புகள் கடந்து அன்றும் செய்தது, இன்றும் செய்து கொண்டிருக்கிறது. இனியும் நீடிக்காமல் இருக்க வேண்டும் எனும் நோக்குடன் எடுக்கப்பட்ட த்ரில் திரைப்படம்தான் ‘புல்புல்’ (Bulbbul).

2020-ல் இந்தியில் நேரடியாக நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான ‘Bulbbul’, ஒரு ‘பீரியட் ஹாரர்’ ஜானர் திரைப்படம். இது, ஆணாதிக்க சமூகம் உருவாக்கிய சுடாயில் (Chudail) சூனியக்காரி / விட்ச் நிகழ்த்தும் வேட்டையை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருக்கிறது. அன்விதா தத் குப்தன் என்ற பெண் இயக்குநர் படைத்த இப்படம், சிறந்த நடிகை மற்றும் உறுதுணை நடிகர் பிரிவுகளில் ஃபில்ம் ஃபேர் விருதுகளைப் பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பால்ய விவாகத்துக்குள் தள்ளப்பட்ட ‘துறுதுறுப்பான’ புல்புல், பதின்ம வயதில் உடல், மன ரீதியில் சகிக்க முடியாத துன்புறுத்தல்களை சந்தித்து, உச்சபட்ச அநீதிகளை எதிர்கொண்டு, அதிலிருந்து மீண்டெழுந்து மர்மப் புன்னகை தரித்து ‘உக்கிர’ புல்புல் ஆகி தனக்கான பாணியாக வயலன்ட் ஜஸ்டிஸை கையில் எடுப்பதுதான் தான் படத்தின் ஒன்லைன்.

1880-களில் இந்தியாவின் பெங்கால் பிரசிடென்ஸி என்று அறியப்பட்ட இப்போதைய மேற்கு வங்கத்தின் ஒரு குக்கிராமம்தான் ‘புல்புல்’ படத்தின் கதைக்களம். ‘புல்புல்’ என்பது கொண்டைக் குருவியைக் குறிக்கும் சொல். இந்தியச் சமூகத்தில் சிவப்பு நிறக் கொண்டை கொண்ட குருவிகள் அன்பு, செல்வச் செழிப்பு மற்றும் விசுவாசத்தின் அடையாளமாகக் கருதப்படுகின்றன.

புல்புல் பறவையைப் பார்ப்பதே நல்ல ‘சகுணம்’ ஆகக் கருதப்படுகிறது. அதனாலேயே, புல்புல்லை பால்ய விவாகம் செய்து அழைத்துச் செல்லும் தாக்கூர் குடும்பத்தின் மூத்த ஆண் வாரிசு இந்திரானில், புப்புல் வளர்ந்ததும் அந்தப் பறவைபோல் அதிர்ஷ்டம், விசுவாசம் அடையங்களை சுமந்து நிற்பாள் என்று நம்புகிறான்.

பெண்ணுடன் தொடர்புபடுத்தப்படும் அதிர்ஷ்டம், விசுவாசம் தொடங்கி குடும்ப கவுரவம் வரையிலான இத்தகைய அடையாளங்கள் தான் காலங்காலமாக பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளுக்கான விதையாக இருக்கின்றன.

அந்த அடையாளங்களை அவள் ஏற்க மறுத்தால், மீறி நடந்தால் அவள் வசைகளுக்கு உள்ளாவதும், வதைபடுவதும் நிச்சயம்.

இங்கே கதையில், புல்புல்லுக்கும் அதுதான் நேர்கிறது. ‘மூத்த மருமகள்’ என்ற அடையாளம் அவளுக்கு வழங்கப்படுகிறது. அவளை ல்லோரும் அத்தனை மரியாதையுடம் “படீ பஹூ...” என்று விளிக்கின்றனர்.

அந்த “படீ பஹூ..!” பருவம் வந்ததும் தனது அழகையும் அன்பையும் தனக்கு விருந்து படைப்பாள் என்று இந்திரானில் காத்திருக்க, அவள் மனமோ சத்யாவையே சுற்றிச் சுழல்கிறது. அது காதலாகக் கூட முழு உருவம் பெறவில்லை. தன் கூடவே ஓடி, விளையாடி, கதைப் பேசித் திரியும் தன் வயதொத்த எதிர்பாலின நபரின் மீதான ஈர்ப்பாகத்தான் இருக்கிறது.

எதையும் தேர்வு செய்யும் உரிமைகூட பெண்ணுக்கு அரும்பிவிடக் கூடாது என்பதால் அந்த ஈர்ப்பு அங்கேயே பொசுக்கப்படுகிறது.

பெண் சுதந்திரத்துக்கு கொள்ளி வைக்கும் இத்தகைய செயல்களை சமூகம் சில நேரங்களில் பெண்களைக் கொண்டே செய்ய வைக்கும். அதற்கான சாட்சிதான் படத்தில் வரும் வினோதினி கேரக்டர்.

புல்புல் திருமணம் செய்துவைக்கப்பட்ட உயர்சாதி இந்துக் குடும்பத்தில் இந்திரானிலின் முதல் சகோதரன் மகேந்தர் மனநலம் பாதிக்கப்பட்டவன். அவனுடைய மனைவிதான் வினோதினி. புல்புல் அறியாமல் திருமணத்துக்குள் தள்ளப்பட்டாள்; வினோதினியோ எல்லாம் தெரிந்தே அதற்குள் தள்ளப்பட்டிருப்பாள்.

1880-களில் பெங்கால் பிரஸிடன்சியில் இந்து ஆதிக்க உயர் சாதி சமூகத்தில் பெண்களின் நிலை இதுவாகத்தான் இருந்தது என்பதை தோலுரிப்பதுபோல் அக்குடும்பத்தின் திருமண பந்தங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. குடும்பத்தின் தலைவர் இந்திரானிலுக்கு பினோதினி உடல் மீதும் உரிமையுண்டு, புல்புல் மீதும் உரிமையுண்டு. அந்த வீட்டில் பெண் ஒரு போகப் பொருள்.

இந்தியச் சமூகத்தில் சாதி, மதங்கள் கடந்து பெண்கள் பெரும்பாலும் ஆணின் உடைமையாக இருக்கின்றனர். அதை அவன் எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். அவள் குடும்ப கவுரவத்தின் அடையாளம். அதனால், அவளை யார் எப்படி பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதையும் அந்தக் குடும்பமே தீர்மானிக்கும்.

குடும்பங்கள் பல நேரங்களில் கொடுமைகளின் கூடாரமாகி விடுகின்றன. அதனாலேயே, விக்டிமைசேஷனுக்கு ஆளான பினோதினி, புல்புல் அதே பாணியில் விக்டிம் ஆக்கப்படுவதற்கான முதல் காயை நகர்த்துகிறாள். சத்யா மீதுதான் புல்புல்லுக்க்கு ஈடுபாடு என்று இந்திரானிலிடம் தூபம் போடுவாள். விளைவு, சத்யா லண்டன் அனுப்பிவைக்கப்படுவான்.

ஆணாதிக்க சமூகத்துக்குள், ஒரே குடும்பத்துக்குள் ஒரே மாதிரியான அடக்குமுறைகளுக்கு ஆளான இரு பெண்கள் எவ்வாறு தங்களை தகவமைக்கின்றனர் என்பதை இயக்குநர் பேசியிருக்கும் விதம் பாராட்டுதலுக்கு உரியது.

புல்புல் - சத்யா கதாபாத்திரங்களை வடித்தபோது சத்யஜித் ரே இயக்கிய ‘சாருலதா’-வின் சாருலதா - பூபதி கதாபாத்திரங்களால் ஈர்க்கப்பட்டதாக இயக்குநர் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

‘சாருலதா’ கதை எழுதியவர் ரவீந்திரநாத் தாகூர். அந்தப் படக்கதையும் இதேபோன்றதொரு உயர்சாதி முற்போக்கு குடும்பப் பின்னணி கொண்டதே. இங்கே புல்புல் கனவுகள் உடைக்கப்படுவதோடு, அவள் சிதைக்கப்படுவாள். அங்கே சாருலதா மனம் கொண்ட ஆசைகள் நொறுக்கப்பட்டு சிதைந்துபோன இதயத்தோடு வாழ நிர்பந்திக்கப்படுவாள்.

இன்றும்கூட சாருலதாக்கள், ‘கொட்டுக்காளி’ மீனாக்கள் இருக்கிறார்கள். இவர்களைத் தாண்டியும் உச்சபட்ச வதைகளை அனுபவிக்கும் புல்புல்களும் இருக்கிறார்கள். அதனால்தான் ‘புல்புல்’ போன்ற படங்கள் இப்போதும் அவசியமாகின்றன.

நமக்காக நாம் நிற்க வேண்டும். நமக்காக நாம் போராட வேண்டும். நமக்கான நீதியை நாம்தான் பெற வேண்டும்.

புல்புல் தனக்கான நீதியை வன்முறைப் பாதையில் பெற்றிருப்பாள். அவளுக்கான வாய்ப்பு அப்போதைய சூழலில் அதுமட்டுமே.

தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காக பழிவாங்கும் பெண்கள் சார்ந்த திரைப்படங்களைப் பற்றி பேசும்போது மகள் ‘கில் பில்’ சீரிஸ் பாகம் 1-ஐ விதந்தோதினார். அதைப்பற்றிய சிந்தனை நீண்டபோதுதான், பெண்களின் பழிவாங்கல் படங்கள் வன்முறை நிறைந்த ரிவென்ஜ் கில்லிங் படமாக, இல்லையேல் கோர்ட் டிராமாக்களாகவே இருந்திருக்கின்றன.

காலத்தின் சோதனையைக் கடந்து நிற்கக் கூடிய ஒரு ரிவன்ஜ் படத்தை, ஒரு ஃபேன்டஸி பீரியட் டிராமாவாக ‘புல்புல்’ படத்தை கொடுக்க இயக்குநர் முடிவெடுத்தது பாராட்டத்தக்கது.

மேலும், படம் முழுக்க விரவிக் கிடக்கும் அடர் சிவப்பு கலர் டோன் யாவும் கோபம், பழிதீர்த்தல், நெகிழ்ச்சி எனப் பல உணர்வுகளையும் அழுத்தமாகக் கடத்தியிருக்கிறது.

புல்புல் மரமேறி மாங்காய் பறிக்கும் குழந்தையாக அலங்காரக் கால்களைக் காட்டி அறிமுகமாகும்போது அந்தப் பிஞ்சு முகம் மகிழ்ச்சியின் சாட்சியாக இருக்கும். தன் அலங்காரக் காலில் மெட்டியிடப்படும்போது, “இது எதற்காக?” என்று புல்புல் கேட்க, “இந்த விரலில் ஒரு நரம்பு இருக்கும். அதை அழுத்தாவிட்டால் நீ பறந்துவிடுவாய்” என்று அத்தை சொல்ல, “பறவை போலவா?!” என்று வினவும் புல்புல்லின் கேள்வியில் அப்பாவித்தனம் ஊற்றெடுக்கும்.

குழந்தைகளின் அப்பாவித்தனங்கள் அழகியலுக்குள் அடங்கும். அதன் கற்பனைகள் சூரியன் போன்றது. யாராலும் நெருங்கிவிடமுடியாதது. ஆனால், பெண் குழந்தைகளின் அப்பாவித்தனங்கள் எக்ஸ்ப்ளாய்ட் செய்யப்படுவதும், அவர்களின் கற்பனைகளின் சிறகுகளை வெட்டி எடுப்பதுமே பேட்ரியார்கி சமூகத்தால் சீசன் செய்யப்பட்ட பெண்களின் கடமையாக இருக்கிறது.

அதன் பிரதிபலிப்புதான் புல்புல் கேள்விக்கு ‘மெட்டி உன்னை கட்டுப்படுத்தும்’ என்று அத்தை சொல்லும் பதில்.

புல்புல் பிறந்த வீட்டில் அவள் அத்தை, புகுந்த வீட்டில் அவளது கொழுந்தன் மனைவி என அவளுடைய பால்ய கால அப்பாவித்தனத்தை சுரண்டிய ஆணாதிக்க ஏஜன்ட்டுகள் இருப்பார்கள்.

திருமணம் முடிந்து பல்லக்கில் செல்லும் புல்புல் குழந்தைக்கே உரித்தான தூக்க கால பயம் தொற்றிக்கொள்ள புலம்பி அலறுவாள். அப்போது ஆரம்பிக்கும் அவளுக்கான கட்டுப்பாடுகள். ‘கூப்பாடு போடாதே; அமைதியாக இரு’ என்பாள் வினோதினி.

பின்னாளில், சத்யா மீதான புல்புல் கொண்ட ஈர்ப்பால் பொறாமைப்பட்டு அவள் கால்களை இரக்கமின்றி நையப் புடைப்பான் இந்திரானில். கால்கள் சிதைக்கப்பட்டு சிகிச்சையில் இருக்கும் புல்புல்லை ‘விளையாட வா’ என்று கூப்பிட்டு பாலியல் வன்கொடுமை செய்வான் மகேந்தர். இருவருக்குமே புல்புல் ஓர் உடைமை.

புல்புல் மணக்கோலத்தில் புகுந்த வீட்டில் அமர்ந்திருக்கும் முதல் நாளில் இருந்தே மகேந்தருக்கு அவள் பொம்மையாகத் தான் தெரிந்திருப்பாள். அவளை அவன் வன்புணர்வு செய்யும்போதும் ‘குடியா’ (பொம்மை) என்றே அழைப்பான்.

ஒர் பெண் உடல் மீதான வன்முறைகளை நிகழ்த்தும் ஆணுக்கு அந்தப் பெண் ஒரு பொம்மைதான். அவளது மறுப்பும், அழுகுரலும், கெஞ்சலும் அவனுக்கு ரிமோட் பொம்மை எழுப்பும் சத்தம் போன்றது; பொருட்படுத்தக் கூடியதாக இருப்பதில்லை.

இது ஏதோ 1880-களில் நடந்தது என்று நாம் கடந்த செல்லக் கூடாது. இன்றைக்கும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

புல்புல்லுக்கு மிகப் பெரிய அநீதி நிகழ்ந்தபோது, “உனக்கு இது நேர்ந்திருக்கக் கூடாது. ஆனால் நீ தாக்கூர் குடும்பத்தின் மருமகள்; அமைதியாக இரு. நீ இந்த வீட்டின் மூத்த மருமகள்; அமைதியாக இரு. உனக்கு இதைச் செய்த உன் கொளுந்தன் மனநிலை பாதிக்கப்பட்டவன்; அமைதியாக இரு.

இங்கு நடந்ததை நீ வெளியில் சொல்லத் துணியாதே; அமைதியாக இரு. உனக்கு பணம் இருக்கிறது, நகை இருக்கிறது, பட்டு வஸ்திரங்கள் இருக்கிறது; அமைதியாக இரு” என்று அச்சுறுத்தும் ஆணாதிக்க சமூகத்தின் குரலாகப் பேசுவாள் வினோதினி.

பல்லக்கில் சொன்ன அதே ‘அமைதியாக இரு’ வார்த்தைகள் இப்போது நம்மை உறைய வைப்பதாக இருக்கும்.

அப்படித்தான் இன்றும் என்ன நடந்தாலும் ‘அமைதியாக இரு’ என்று பெண்களிடம் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். இதனால்தான், பல பாலியல் அத்துமீறல்கள் வழக்குகளாவதில்லை. பல வரதடசிணைக் கொடுமைகள் தற்கொலைகளில் முடிகின்றன.

ஒரு பெரிய பலவீனத்துக்குப் பின், ஒரு நீண்ட கண்ணீருக்குப் பின், ஒரு கடும் விரக்திக்குப் பின் நமக்குள் ஒரு சுயபரிசோதனை நிகழும். அது நடந்துவிட்டால் நம் வாழ்க்கை புதுப்பொலிவு பெறும். சில நேரங்களில் நம்முள் எற்படும் வெறுமையும் கூட நம்மை உயிர்த்தெழச் செய்யும்.

புல்புல் உயிர்ழ்த்தெழுவாள். இந்திரானிலும், மகேந்தரும் செய்த கொடுமைகளால் மூர்ச்சையாகிப் போகும் புல்புல்லுக்கு காளிதேவியின் அருளாசி கிட்டும். அத்துடன் அவள் வாழ்க்கையும், அவள் தோற்றமும் புதுப் பொலிவு பெறும்.

புல்புல் தரித்த அழகான புன்னகை, மர்மப் புன்னகையாக மாறும். அவளுடைய பேச்சுக்கள் மட்டுமல்ல, நடையும், உடையும் கூட கூரிய வாள் போல் இருக்கும்.

அதன்பிறகு கிராமத்தில் நடக்கும் கொலைகள் பின்னணியில் இருப்பது புல்புல் என்று வெகு எளிதாக பார்வையாளர்களால் ஊகிக்க முடியும்.

“அப்படி நீங்கள் ஊகிப்பதில் எனக்குப் பிரச்சினையில்லை. நான் சொல்லவந்தது இன்வஸ்டிகேட்டிவ் திகில் கதையல்ல; நம்பிக்கைக் கதை. அநீதிகளுக்கு எதிராக வெகுண்டெழ வேண்டும் என்ற உத்வேகக் கதை,” என இயக்குநர் பகிர்ந்த தகவல் படத்தின் நோக்கத்தை நிறுவுகிறது. அதனால் உங்கள் புலனாய்வு, லாஜிக் புலமைகளை ஈகோவின்றி தோற்கடித்துவிட்டு படத்துக்குள் முன்னேறிச் செல்லலாம்.

முற்றிலும் மாறிப்போன புல்புல்லை பார்க்க வருவான் சத்யா. லண்டன் வாசம், சட்டப் படிப்பு, தான் சார்ந்த சமூகத்திலிருந்து 6 ஆண்டுகள் விலகியிருந்தது என்று எதுவுமே சத்யாவின் பார்வையை மாற்றியிருக்காது. அவன் புல்புல்லை அத்தனை ஆண்டுகளுக்குப் பின் முதன்முறை சந்திக்கும்போது கூட அவளைக் கண்ட மகிழ்ச்சியைவிட அந்நியன் (மருத்துவர் சுதீப்) முன்னால் தனது அண்ணி, வீட்டின் ‘படீ பஹூ’ முக்காடு இல்லாமல் இருப்பதே உருத்தலாக இருக்கும். ஆனாலும் தன் லண்டன் வாசம் தன்னை அறிவாளியாகவும், வீரனாகவும் ஆக்கிவிட்டதாக அறிவிக்க ஊரில் நடக்கும் கொலைகளுக்கு சூனியக்காரி காரணமல்ல, ஏதோ ஒரு மர்ம ஆசாமிதான் காரணம். அதை நான் கண்டுபிடிப்பேன் என்பான்.

சத்யாவுக்கு பதிலடியாக “ஏன் அந்தக் கொலைகளை செய்தது ஒரு பெண்ணாக இருக்கக் கூடாதா?” என்று கூறி, அதே 6 ஆண்டு கால இடைவெளியில் தான் அறிவும், தெளிவும் பெற்று ஆணாதிக்கத்தை வென்றுவிட்டதாக பிரகடனம் செய்வாள் புல்புல். கூடவே ஒரு புன்னகையையும் கடத்துவாள்.

ஒரு சூரியக் கதிர் போல் சுட்டெரிக்கும் அந்தப் புன்னகையின் வீச்சை தாங்க முடியாமல், மர்மத்தை புரிந்துகொள்ள முடியாமல் நகர்ந்து செல்வான் சத்யா. புல்புல்லின் மர்மப் புன்னகை மட்டும்தான் அவளுடைய பழிவாங்குதல்களுக்கு சாட்சி.

பாவத்தின் சம்பளம் மரணம். பழிக்குப் பழி தீர்த்தல் அதை செய்துவிடும். ஆனால், மனம் வருந்த தண்டித்தல் என்பது மாற்றத்தின் துவக்கம். அதைத்தான் சத்யாவுக்கு செய்வாள் புல்புல்.

புல்புல் - டாக்டர் சுதீப் இடையே ஏதோ இருப்பதாக சந்தேகிக்கும் சத்யாவுக்கு, அந்தப் பிணைப்பின் மீது கடும் பொறாமை வருகிறது. அதைப் புரிந்துகொண்ட புல்புல், முன்பு சத்யா மீது இந்திரானில் பொறாமை கொண்டு தன்னை தாக்கியபோது தடுக்காமல் அலறியதுபோல் இல்லாமல், “உனக்கு சுதீப் மீது பொறாமை” என்று சொல்லிக் காட்டி மீண்டும் மீண்டும் சுதீப், சுதீப் என்று சத்யா கேட்கும்படி உச்சரிப்பாள்.

சத்யா மனம் கொண்ட சந்தேகமும், பொறாமையும் டாக்டர் சுதீப் தான் கொலையாளி என்று முடிவு செய்ய வைக்கும். அவனை சட்டப்படி தண்டிக்க முடிவு செய்து அழைத்துச் செல்ல வருவான் சத்யா. “உன்னை முதன்முதலில் பார்த்தபோதே சுட்டுக் கொன்றிருப்பேன்” என்று ஆரம்பிப்பான் சத்யா.

ஒருவேளை அண்ணன் இந்திரானில் வளர்ப்பிலேயே சத்யா வளர்ந்திருந்தால், அவனைப் போலவே புல்புல்லை தண்டித்திருப்பான். ஆனால், ஆறாண்டு கால இடைவெளியும், கல்வியும் அவன் கோபத்துக்கு ஒரு வேகத்தடை போட்டது எனலாம். அதனால்தான் புல்புல் சத்யாவுக்கு பாடம் புகட்டினால் போதும் என்று முடிவு செய்கிறாள்.

கானகத்தில் சாரட் வண்டி ஓட்டுநரை கொலை செய்கிறாள் புல்புல். அப்போது சத்யாவுக்கும் இலைமறை காயாக காட்சியளிக்கிறாள். சத்யா தன்னை புரிந்து கொள்வான் என நினைக்கிறாள். ஆனால், அவளை சூனியக்காரி என்று அவன் முடிவு செய்து துப்பாக்கியால் சுடுகிறான். சுதீப் தடுக்கிறான்.

“அவள் சூனியக்காரி அல்ல காளி. அவளைப் பார்த்த சாட்சியாக ஒரு குழந்தை இருக்கிறது. அந்தக் குழந்தையை ஒரு காமுகனிடமிருந்து அவளே காப்பாற்றினாள்,” என்று விளக்க முயற்சிப்பான். ஆனாலும் சத்யா காட்டுக்குள் விரைந்து சென்று வெற்றிப் புன்னகையோடு திரும்புவான்.

துப்பாக்கிச் சத்தமும், காட்டுத் தீயும் பதற்றப்படுத்த சத்யாவைப் பொருட்படுத்தாமல், ‘படீ பஹூ’ என்று கதறிக் கொண்டு செல்வான் சுதீப். அப்போதுதான் சத்யாவுக்கு தான் வீழ்த்தியது தனது புல்புல்லை என்பதே புரியவரும். கதறுவான், துடிப்பான். குற்ற உணர்ச்சி காட்டுத் தீபோல் அவன் உள்ளத்தை எரிக்கும். அந்தக் குரல் புல்புல் செவிகளையும் எட்டும்.

இனி தாக்கூர் குடும்பத்தில் இன்னொரு புல்புல் இருக்க மாட்டாள் என்பதை உறுதி செய்வதுபோல் அந்தக் குரல் இருப்பதால், நெருப்புக்கு தன்னை ஒப்புக்கொடுப்பாள். தன் கொடூர நினைவுகளை அதில் எரித்துவிட தான் கடந்து வந்த வேதனைகளை வேகமாக நினைத்துப் பார்த்து நினைவுகளின் அஸ்தியை தன் கண்ணீரில் கரைப்பாள்.

எல்லாம் நடந்து ஓராண்டு கடந்து சத்யாவின் குரல் கடிதம் வாயிலாக அவன் அண்ணனுக்கு செல்லும். அவனை மாற்றிய காட்டுத் தீயே அந்தக் கடிதத்தில் வார்த்தைகளாகியிருக்கும்.

“அண்ணா, எனது பால்ய காலங்களில் நான் வளர்ந்து உங்களைப் போல் ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால், இப்போது இந்த வீட்டைவிட்டு நான் நிரந்தரமாக வெளியேறுகிறேன். ஏனென்றால், என்னுள் ஏற்கெனவே உங்கள் சாயல் வந்துவிட்டது. இனியும் இருந்தால் நான் நீங்களாகவே மாறிவிடுவேன்,” என்று குறிப்பிட்டிருப்பான்.

இந்தியாவில் சாதியும், குடும்பப் பாரம்பரியமும், அதை வளர்த்தெடுக்கும் மதங்களும் சத்யாக்களைத் தான் இனப்பெருக்கம் செய்து கொண்டிருக்கின்றன. அந்த டிஎன்ஏ-வை கத்தியின்றி ரத்தமின்றி மாற்ற வேண்டும். அந்த மாற்றம் அவர்களுக்குள் சுயபரிசோதனையால் ஏற்பட வேண்டும்.

என் வீட்டுப் பெண்களுக்கு எல்லா சுதந்திரத்தையும் நான் வழங்கியிருக்கிறேன் என்று தன்னை அடையாளப்படுத்திக் கொள்பவனாக அல்லாமல், என் வீட்டுப் பெண்கள் தெய்வமென்று துதிப்பவனாக அல்லாமல், என் வீட்டில் இருக்கும் பெண்களும் நானும் சமமானவர்களே என்ற புரிதல் கொண்ட ஆண்கள் உருவாக வேண்டும்.

அதைச் சாத்தியப்படுத்த நெருப்பின் ஊடே சிவப்பு தோய்ந்த புல்புல் முகத்தோடு, அலங்காரங்கள் இல்லாத, முன்பின் திரும்பிய கெண்டைக் காலோடு மரத்தில் இருக்கும் புல்புல் போல் அநீதியை எதிர்க்கும் ரெளத்திரம் பழகுவோம்.

அவள் கால்கள் திரும்பியது, அவள் ஆணாதிக்கத்துக்கு எதிரான பாதையில் நடந்தாள் என்பதற்கான உருவகம் (மெட்டஃபர்). நாமும் அப்படியே நடப்போம்.

புல்புல் ஒரு சத்யாவை மனம் திருந்தச் செய்திருக்கிறாள். இன்னும் கோடானுகோடி சத்யாக்களின் கோணல் மனங்களை என்ன செய்வது?!

நாம் மாற்றத்தை நம்மைச் சார்ந்தோரிடம் இருந்து தொடங்குவோம். அதற்காக அச்சம் தவிர்ப்போம், நையப்புடைப்போம், மானம் போற்றுவோம், ரெளத்திரம் பழகுவோம்.

| தேவதைகள் தொடர்ந்து வலம் வருவர் |

தொடர்புக்கு: bharathi.p@hindutamil.co.in