






















Updated on
:
2 min read
திருவனந்தபுரம்: கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் வீட்டில் இன்று அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்தச் சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து சோதனையை முடித்து பினராயி விஜயனின் திருவனந்தபுரம் வீட்டிலிருந்து வெளியேறிய அமலாக்கத் துறை அதிகாரிகள் கார் மீது மார்க்சிஸ்ட் கட்சியினர் தாக்குதல் நடத்தினர்.
‘கொச்சின் மினரல்ஸ் அண்டு ரூடைல் லிமிடெட்’ (சிஎம்ஆர்எல்) என்ற கனிம நிறுவனத்துக்கு கேரள அரசு சுரங்க அனுமதி வழங்கியதில் லஞ்சம் பெற்றது, பண மோசடி நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதில் பினராயி விஜயனின் மகள் டி.வீணாவின் ‘எக்ஸாலாஜிக்’ என்ற ஐடி நிறுவனத்துக்கு நேரடி தொடர்பு இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு வைத்தன. இந்நிலையில், அமலாக்கத் துறை சோதனை நடத்தியது.
சோதனையை முடித்து திரும்பிய அமலாக்கத் துறை வாகனத்தை மார்க்சிஸ்ட் தொண்டர்கள் சூழ்ந்து கொண்டனர். பின்னர் அந்தக் காரின் மீது செங்கல், இரும்புக் கம்பிகள் கொண்டு தாக்குதல் நடத்தினர். காரினுள் ஒரு பெண் அதிகாரி உள்பட 4 அதிகாரிகள் இருந்தனர். அதைப் பொருட்படுத்தாமல் சிபிஎம் தொண்டர்கள் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டனர்.
கூடவே வந்த சிஆர்பிஎஃப் பாதுகாவலர்களின் வாகனங்களையும் தாக்கினர். இதில் ஒரு வாகனத்தின் ஓட்டுநர் காயமடைந்தார். அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தாக்குதல் தீவிரமடையவே, காவல் துறையும், மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரும் இணைந்து நீண்ட போராட்டத்துக்குப் பின்னர் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இன்று காலை பினராயி வீட்டில் ரெய்டு தொடங்கியதிலிருந்தே மாநிலத்தின் குறிப்பாக திருவனந்தபுரத்தின் பல்வேறு பகுதிகளிலும் சிபிஎம் தொண்டர்கள் ஆங்காங்கே வீதிகளில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பினராயியின் திருவனந்தபுரம் வீட்டின் வாசலில் பாதுகாப்புக்கு நின்ற காவலர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
முன்னதாக, காலையில் சோதனை தொடங்கியபோது பினராயி விஜயன் குடும்பத்துடன் வீட்டில் தான் இருந்தார். அவரது வீடு உள்பட 10 இடங்களில் சோதனை நடந்தது. அதில் அவரது கண்ணூர் பூர்வீக இல்லம், கோழிக்கோட்டில் உள்ள மருமகனும் முன்னாள் அமைச்சருமான முகமது ரியாஸ் இல்லம் அடங்கும்.
சோதனையின் பின்னணி என்ன?
சிஎம்ஆர்எல் நிறுவனத்திடம் இருந்து எக்ஸாலாஜிக் நிறுவனம் ரூ.1.72 கோடியை முறைகேடாக பெற்றதாக வருமான வரி தீர்வு வாரியம் தெரிவித்தது. இதில் வீணா மட்டுமல்லாது அரசு அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
கடந்த 2023-ல் இந்த விவகாரம் முதன்முதலாக வெளிச்சத்துக்கு வந்தது. அதில் சிஎம்ஆர்எல் நிறுவனத்திடம் இருந்து 2017 முதல் 2020 வரை நிதி முறைகேடு நடந்ததாக தகவல் வெளியானது. இதையடுத்து அமலாக்கத் துறை, வருமான வரித்துறையினர் வீணா உட்பட பலரிடம் ஏற்கெனவே விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。