





























Updated on
:
1 min read
சென்னை: திமுக ஆட்சியில் தேர்ந்தெடுக்கப்பட்டு பணி நியமன ஆணை வழங்கப்படாத 751 மருத்துவர்கள் சென்னை டிஎம்எஸ் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் காலியாகவுள்ள 1,100 உதவி மருத்துவர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை, தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (எம்ஆர்பி) கடந்த 2025-ம் ஆண்டு நவம்பர் 21-ம் தேதி வெளியிட்டது.
இதற்கான தேர்வு கடந்த ஜனவரி 25-ம் தேதி நடந்தது. விண்ணப்பித்திருந்த 25,172 பேரில் 20,867 பேர் தேர்வில் பங்கேற்றனர். அவர்களில் 16,986 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ்கள் சரிபார்ப்பு, இட ஒதுக்கீடு முறையில் 1,071 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
இவர்களை கலந்தாய்வு மூலம் பணியில் சேர்ப்பதற்கான பணிகள் நடந்தன. 320 பேருக்கு ஆணை வழங்கப்பட்டது. பின் காலியிடங்கள் இல்லை என 751 பேருக்கு பணி ஆணை வழங்கப்படவில்லை.
இந்நிலையில் முதல்வர் விஜய் தலைமையிலான புதிய ஆட்சி வந்துள்ளதால், ஏற்கெனவே ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு, தேர்வு செய்யப்பட்ட 751 பேருக்கும் பணி நியமன ஆணை வழங்க வேண்டும் என மருத்துவர்கள் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர்.
அவர்களுடன் அரசு அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தை உடன்பாடு ஏற்படாததால், தலைமைச் செயலகம் சென்று சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜை மருத்துவர்கள் சந்தித்து முறையிட்டனர்.
இது தொடர்பாக மருத்துவர்கள் கூறுகையில், ``இந்த சம்பவத்தை அதிகாரிகள் அமைச்சர் கவனத்துக்கு எடுத்துச் செல்லாமல் இருந்தனர். நாங்கள் நடந்ததை அமைச்சரிடம் தெரிவித்தோம்.
அவர் ஒரு மாதத்துக்குள் 370 பேர் வரை பணி நியமனம் செய்வதாக உறுதியளித்துள்ளார். மற்றவர்களும் காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப நிரப்பப்படுவர் எனத் தெரிவித்துள்ளார்'' என்றனர்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。