


























Updated on
:
1 min read
கோதன்பர்க்: பிரதமர் நரேந்திர மோடிக்கு ஸ்வீடன் நாட்டின் உயரிய விருதான ‘ராயல் ஆர்டர் ஆப் போலார் ஸ்டார்’ விருதை வழங்கி கவுரவித்தார் அந்நாட்டின் இளவரசி விக்டோரியா. இதையடுத்து பிரதமர் மோடிக்கு பாஜக எம்.பி-க்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடி ஐந்து நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். இதில் முதல் நாடாக ஐக்கிய அரபு அமீரகம் சென்றார். பின்னர் அங்கிருந்து நெதர்லாந்து சென்றிருந்தார்.
இந்நிலையில், இந்த பயணத்தில் மூன்றாவது நாடாக ஸ்வீடனுக்கு அவர் நேற்று சென்றார். அந்நாட்டு பிரதமர் உல்ப் கிறிஸ்டர்சன் விமான நிலையத்துக்கு நேரில் வந்து பிரதமர் மோடியை வரவேற்றார். பிரதமர் மோடிக்கு அரசு தரப்பு வரவேற்பு கொடுக்கப்பட்டது. ஸ்வீடன் வாழ் இந்திய மக்கள், பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
“இந்தியா மற்றும் ஸ்வீடன், ஜனநாயகத்துக்கு மதிப்பளிப்பதன் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. இதுவே இருதரப்புக்கும் இடையிலான பொருளாதார கூட்டுறவுக்கு வாய்ப்பளிக்கிறது” என்று ஸ்வீடன் நாட்டு நிறுவனங்களின் சிஇஓ-க்கள் உடனான சந்திப்பு கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியிருந்தார்.
அதோடு அந்நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய வேண்டுமென்றும் அழைப்பு விடுத்தார். அப்போது இந்தியா கண்டு வரும் பொருளாதார வளர்ச்சியை அவர் குறிப்பிட்டிருந்தார். அந்நாட்டு பிரதமர் உல்ப் கிறிஸ்டர்சன் உடன் இருதரப்பு உறவுகள் குறித்தும் ஆலோசித்தார்.
ஸ்வீடன் நாட்டின் உயரிய விருது: இரு தரப்புக்கு இடையே சிறப்பான உறவுக்காக பிரதமர் மோடி அளித்த பங்களிப்பு, அவரது தலைமை பண்பினை அங்கீகரிக்கும் வகையில் ஸ்வீடன் நாட்டின் உயரிய விருதான ‘ராயல் ஆர்டர் ஆப் போலார் ஸ்டார், கமாண்டர் கிராண்ட் கிராஸ்’ விருதை வழங்கி கவுரவித்தார் அந்நாட்டின் இளவரசி விக்டோரியா. சர்வதேச அளவில் பிரதமர் மோடிக்கு கிடைத்த 31-வது கவுரவ விருதாக இது அமைந்துள்ளதாக தகவல்.
ஸ்வீடனின் உயரிய விருதை பெற்ற பிரதமர் மோடிக்கு, மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உள்ளிட்டோர் தங்களது வாழ்த்தினை தெரிவித்துள்ளனர்.
ஸ்வீடன் பயணத்தை முடித்துக் கொண்டு நார்வே செல்கிறார் பிரதமர் மோடி. தொடர்ந்து அங்கிருந்து இத்தாலி செல்லும் அவர், தன் பயணத்தை நிறைவு செய்து கொண்டு தாயகம் திரும்புவார்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。