




















Updated on
:
2 min read
புதுடெல்லி: “தற்போதைய பெட்ரோல், டீசல் விலை உயர்வால் யாருக்கெல்லாம் பலன் கிட்டுகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க வேண்டும்” என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், “ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100-ஐ கடந்துள்ளது. மக்களின் பணம் தவணை முறையில் கொள்ளை அடிக்கப்படுகிறது. ஒரு காலத்தில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மிகவும் குறைவாக இருந்தது. அந்தக் காலத்தில் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படவில்லை. அப்போது மக்களின் பணம் பகிரங்கமாக கொள்ளை அடிக்கப்பட்டது.
அண்மையில் சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெற்றன. இந்த தேர்தல்கள் முடிந்த உடனேயே பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு உயர்த்தியது. அண்மை காலத்தில் 3 முறை விலை உயர்த்தப்பட்டு உள்ளது.
இத்தாலி, ஆஸ்திரேலியா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் கலால் வரியை குறைத்து, பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்தி உள்ளன. பிரிட்டன், அயர்லாந்து நாடுகளில் எரிசக்திக்காக சிறப்பு மானிய உதவிகள் வழங்கப்படுகின்றன. இந்தியாவில் தற்போதைய பெட்ரோல், டீசல் விலை உயர்வால் யார், யாரெல்லாம் பலன் அடைகிறார்கள் என்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க வேண்டும்” என்று மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார்.
கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் நீண்ட தொலைவு உள்ளிட்ட காரணங்களால் இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு தினசரி ரூ.1,000 கோடி இழப்பு ஏற்பட்டது. இதை ஈடுகட்ட கடந்த 15-ம் தேதி பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு தலா ரூ.3 உயர்த்தப்பட்டது. கடந்த மே 19-ம் தேதி ஒரு லிட்டர் பெட்ரோல், டீசல் தலா 90 பைசா அதிகரிக்கப்பட்டது.
இந்த நிலையில், கடந்த 10 நாட்களில் 3-வது முறையாக பெட்ரோல், டீசல் விலை இன்று உயர்த்தப்பட்டது. இதன்படி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 82 பைசா உயர்ந்து ரூ.105.31-க்கும், ஒரு லிட்டர் டீசல் 87 பைசா உயர்ந்து ரூ.96.98-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
‘வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் இந்தியாவின் 23 நிலையங்களில் சுத்திகரிப்பு செய்யப்படுகிறது. சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோல், டீசல் மீது மத்திய அரசு கலால் வரியை விதிக்கிறது. மாநில அரசுகள் வாட் வரியை விதிக்கின்றன. எண்ணெய் நிறுவனங்கள் சார்பில் பெட்ரோல் நிலைய உரிமையாளர்களுக்கு 10 சதவீதம் கமிஷன் வழங்கப்படுகிறது.
இவை அனைத்தையும் கணக்கிட்டு பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. எண்ணெய் நிறுவனங்களின் இழப்பை ஈடுகட்ட கடந்த 10 நாட்களில் 3 முறை விலை உயர்த்தப்பட்டு உள்ளது. இதன்மூலம் ஒரு லிட்டர் பெட்ரோல், டீசல் ரூ. 5 வரை விலை உயர்ந்திருக்கிறது. இதேபோல ஒரு கிலோ சிஎன்ஜி விலை ரூ.4 வரை விலை அதிகரித்திருக்கிறது. விலை உயர்த்தப்பட்டாலும் எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து இழப்பை சந்தித்து வருகின்றன’ என்று எண்ணெய் நிறுவன வட்டாரங்கள் தெரிவித்தன.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。