






















Updated on
:
1 min read
மதுரை: குற்றாலம் பிரதான அருவியில் குளிப்பதற்காக அங்குள்ள பழமையான சிலைகளை சேதப்படுத்துவதை அனுமதிக்க முடியாது என, உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.
மதுரை எழுமலையைச் சேர்ந்த ராமர் ரவிக்குமார், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: குற்றால அருவிகள் வரலாற்று சிறப்புமிக்கவை. அருவிகளில் பழமையான சிலைகள் உள்ளன. தற்போது, குற்றால அருவிப் பகுதிகளில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணியின் போது, அங்குள்ள கற்சிலைகள் பொதுப்பணித் துறையால் சேதப்படுத்தப்பட்டுள்ளன. விநாயகர் உட்பட பல்வேறு சிலைகள் அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளன.
இந்த செயல்பாடு மத நம்பிக்கையை புண்புடுத்தும் வகையில் அமைந்துள்ளது. எனவே, குற்றாலம் பிரதான அருவி பகுதியில் உள்ள சிலைகளை சீரமைத்தல் என்ற பெயரில் அகற்றவோ, மாற்றவோ கூடாது என்றும், பழங்கால சிலைகளை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கோரப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் வேல்முருகன், குமரப்பன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், குற்றாலம் பிரதான அருவியில் நடைபாதை விரிவுப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இதற்கு அப்பகுதியில் உள்ள 2 கற்சிலைகள் எடுக்கப்பட்டுள்ளன. பணிகள் முடிந்ததும் அந்த சிலைகள் அதே இடத்தில் நிறுவப்படும்.
குற்றாலத்தில் இன்னும் 10 நாட்களில் சீசன் தொடங்கவுள்ளது. சீசன் தொடங்கினால் குற்றலாத்துக்கு பயணிகள் அதிகளவில் வருவர். இதனால், சீரமைப்புப் பணிகளை விரைவில் முடிக்க வேண்டும். அதற்கு, நீதிமன்றம் அனுமதி வழங்க வேண்டும் என கேட்டு கொள்ளப்பட்டது.
அதற்கு நீதிபதிகள், குளிப்பதற்காக 2 ஆயிரம் ஆண்டு பழமையான சின்னங்களை சேதப்படுத்துவதை அனுமதிக்க முடியாது. அப்படி குளிப்பதாக இருந்தால் குளியல் அறையில் போய் குளிக்கலாம். சீரமைப்புப் பணியை தொடரக்கூடாது. ஜூன் முதல் வாரம் வரை தற்போதைய நிலை தொடர வேண்டும் என உத்தரவிட்டனர்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。