

























Updated on
:
2 min read
சென்னை: பணமோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை விசாரிக்க அனுமதி அளிக்கக் கோரி தமிழக அரசுக்கு அமலாக்கத் துறை கடிதம் எழுதி உள்ளது.
கடந்த 2011 முதல் 2016 வரையிலான அதிமுக ஆட்சியில், போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பலரிடம் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார் உள்ளிட்டோர் மீது பண மோசடி குற்றச்சாட்டின் பேரில் அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்தது. அவர்கள் மீது வழக்கு தொடர மாநில அரசு அனுமதி அளிக்காததால் நீதிமன்ற விசாரணை இன்னும் தொடங்காமல் உள்ளது.
இந்நிலையில்தான், போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக பணம் பெற்றதாகக் கூறப்படும் பணமோசடி வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் சிலருக்கு எதிராக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க அனுமதிகோரி தமிழக தலைமைச் செயலாளர் சாய் குமாருக்கு அமலாக்கத் துறை கடிதம் எழுதியுள்ளது.
திமுக அரசு அனுமதி மறுப்பு முன்னதாக, கடந்த 7 மாதங்களுக்கு முன்பு இதே வழக்கில் செந்தில் பாலாஜியை விசாரணை நடத்த அப்போதைய திமுக அரசு அனுமதி மறுத்திருந்த நிலையில், தற்போது அமலாக்கத் துறை மீண்டும் அனுமதி கோரி கடிதம் எழுதியுள்ளது.
கடந்த 15-ம் தேதி அமலாக்கத் துறை அனுப்பியுள்ள 3 பக்கங்கள் கொண்ட கடிதத்தில் கடந்தாண்டு அப்போதைய ஆளுநருக்கு அமலாக்கத் துறை சார்பில் அனுமதி கோரி கடிதம் அனுப்பப்பட்டது.
மாநில அரசின் அறிவுறுத்தலின்படி, அக்கடிதம் திருப்பி அனுப்பப்பட்டது. அக்.2025-ல் அப்போதைய தலைமைச் செயலாளர் ஆளுநருக்கு எழுதிய கடிதத்தில், அரசு ஊழியரை விசாரிக்க மாநில அரசே தகுதியான அதிகாரம் கொண்டது.
எனவே, அமலாக்கத்துறை ஆளுநரை அணுகுவதற்குப் பதிலாக நேரடியாக தலைமைச் செயலாளருக்குத்தான் கடிதம் எழுதியிருக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
அதன் அடிப்படையில் தற்போது அமலாக்கத் துறை தகுந்த ஆதாரங்கள், ரகசிய விசாரணை குறிப்புகளுடன் தலைமைச் செயலாளருக்கு புதிய கடிதத்தை அனுப்பி உள்ளது.
தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தவெக தலைவர் விஜய் தலைமையிலான ஆட்சி தமிழகத்தில் நடைபெறுவதால் அவர் என்ன முடிவு எடுக்கப்போகிறார் என்பதை பொறுத்தே இந்த பணமோசடி வழக்கின் போக்கு செல்லும் என அமலாக்கத் துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த பணமோசடி வழக்கில் 2023 ஜூன் 14-ம் தேதி செந்தில் பாலாஜி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். பின்னர், 471 நாள் சிறைவாசத்துக்கு பிறகு செப்டம்பர் 2024-ல் உச்ச நீதிமன்றம் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
இதனைத் தொடர்ந்து அமலாக்கத்துறை சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்திருந்தாலும், குற்றம் நடந்ததாகக் கூறப்படும் காலகட்டத்தில் அவர் அமைச்சராக இருந்ததால், மாநில அரசின் விசாரணை அனுமதி இன்னும் கிடைக்கப் பெறவில்லை. இதனால் நீதிமன்ற விசாரணை இன்னும் தொடங்கப்படாமல் நிலுவையில் உள்ளது.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。