




















Updated on
:
2 min read
சேலம்: பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தமிழக முதல்வர் விஜய் அறிவித்த ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை’ திட்டம் (Singappen Special Force SSF) சேலம் மாநகராட்சியில் இன்று முதல் தனது பணியைத் தொடங்கியது. முதற்கட்டமாக, மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் பெண் காவலர்கள் ரோந்துப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழக முதல்வராக பதவி ஏற்றதும், முதல்வர் விஜய் பெண்கள் பாதுகாப்புக்கு என தமிழகத்தில் ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை’ தொடங்கப்படும் என்று அறிவித்தார். இந்நிலையில் தமிழகத்தில் முதல்முறையாக சேலம் மாநகர காவல் துறையில் ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை’ திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. பெண்களின் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் , சேலம் மாநகர காவல் ஆணையர் அனில் குமார் கிரி மேற்பார்வையில், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை" அமைக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை சூரமங்கலம் சரக உதவி ஆணையர் ரமளி ராமலட்சுமி கண்காணிப்பில், எஸ் ஐ., அருள்மொழி. எஸ் எஸ் ஐ., க்கள் அம்சவள்ளி, சத்தியவதி, பெண் தலைமை காவலர்கள் பிரேமலதா, மங்கையர்க்கரசி ஆகியோரைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. அதிரடிப்படை வாகனத்தின் ஓட்டுநர் மட்டும் ஆண் காவலர் ஆவார்.
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் (SSF) செயல்பாடுகள்:
குற்றச்சம்பவங்கள் நடைபெற வாய்ப்புள்ள இடங்களை கண்டறிந்து கண்காணித்தல், .பொது இடங்களில் தொடர்ந்து ரோந்து மேற்கொண்டு, பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்குதல், பேருந்து நிறுத்தங்கள், ரயில் நிலையங்கள். கல்வி நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் போன்ற மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்வது.
சட்டவிரோத மற்றும் பெண்களுக்கு எதிரான செயல்களை தடுக்க விரைந்து நடவடிக்கை எடுப்பது, பெறப்படும் புகார்களுக்கு உடனடி மற்றும் உரிய நடவடிக்கை மேற்கொள்வது.
பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் நபர்களை மீட்டு அவர்களின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்வது, தேவையான உதவிகள் மற்றும் ஆதரவுகள் உரிய நேரத்தில் கிடைக்க ஏற்பாடு செய்வது, சமூக நலத்துறை கல்வித்துறை மற்றும் அரசு சாரா தொண்டு நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துவது.
சமூகத்தின் பல்வேறு தரப்பினரையும் இணைத்து பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் பணிகளில் ஈடுபடுவது, பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தடுப்பு மற்றும் பாதுகாப்பு உத்திகளை முதன்மை இலக்காகக் கொண்டு செயல்படுவது, சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் நோக்கங்கள் ஆகும். சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை முதற்கட்டமாக காவல்துறை தலைமையக நிர்வாக கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும்.
இச்சிறப்பு படையினருக்கு தேவையான நான்கு சக்கர வாகனம் சாதனங்கள், Body Worn Camera மற்றும் இதர வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் பணியை தொடங்கி வைத்த சேலம் மாநகர காவல் ஆணையர் அணில் குமார் கிரி அதிரடிப்படையினருக்கு ஆலோசனைகளை வழங்கினார்
பின்னர் மாநகர காவல் ஆணையர் அனில் குமார் கிரி செய்தியாளர்களிடம் பேசுகையில், “பெண்கள் பிரச்சினை தொடர்பாக புகார் செய்தால் அல்லது அவசர அழைப்பிற்கு தொடர்பு கொண்டால் உடனே சிங்கப்பெண் அதிரடி படை அங்கு சென்று தேவையான உதவிகள் மற்றும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அவர் கூறினார்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。