






















Updated on
:
1 min read
சென்னை: “மக்களின் உணர்வுகளுக்கும், எண்ணங்களுக்கும் மதிப்பளித்து முதல்வர் விஜய் தலைமையில் அமைந்துள்ள தவெக அரசின் மீதான நம்பிக்கை தீர்மானத்துக்கு அதிமுக ஆதரவளிக்கிறது” என அக்கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.
இதற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், அவரது ஆதரவாளர்களும் கடும் கண்டனங்களைத் தெரிவித்தனர். அவையில் இதனால் கடுமையான சலசலப்பு நிலவியது. ஏனெனில் அவருக்கு முன்னர் பேசிய பழனிசாமி, அதிமுக நம்பிக்கை தீர்மானத்தை எதிர்ப்பதாகக் கூறியிருந்தார்.
புதிதாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள முதல்வர் விஜய் தலைமையிலான தவெக, அரசு மீதான பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான வாக்கெடுப்பு சட்டப்பேரவையில் இன்று (மே 13) காலை 9.30 மணியளவில் தொடங்கியது.
தமிழக முதல்வர் விஜய், நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை முன்மொழிந்தார். அதன் மீது வாக்கெடுப்பு நடப்பதாக சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் அறிவித்தார்.
நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தின் மீது எம்எல்ஏக்கள் உரையாற்றினார். அதிமுக தலைமையிலான கூட்டணியில் போட்டியிட்ட அமமுக எம்எல்ஏ காமராஜ் தவெக அரசுக்கு ஆதரவு அளித்தார். இபிஎஸ் அதிமுக தவெக மீதான நம்பிக்கை தீர்மானத்தை எதிர்ப்பதாக அறிவித்தார். தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி தலைமையிலான திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
முன்னதாக, நம்பிக்கை தீர்மானம் தொடர்பாக பேசிய தொண்டாமுத்தூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ எஸ்.பி.வேலுமணி, “அதிமுகவுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றிகளைத் தெரிவிக்கிறேன். என்னை 5-வது முறையாக தொண்டாமுத்தூரில் வெற்றி பெற வைத்த மக்களுக்கு நன்றி. மக்களின் உணர்வுகளுக்கு, எண்ணங்களுக்கு மதிப்பளித்து முதல்வர் விஜய் தலைமையில் அமைந்துள்ள தவெக அரசுக்கு, அவர் கொண்டு நம்பிக்கை தீர்மானத்துக்கு அதிமுக ஆதரவளிக்கிறது.
யாரும் பதவிக்கு ஆசைப்பட்டு ஆதரவளிக்கவில்லை. 54 ஆண்டுகள் பொன்விழா கண்ட கட்சி அதிமுக. 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியில் இருந்துள்ளோம். இதுவரை திமுகவை எதிர்த்து தான் அரசியல் செய்து வந்துள்ளோம். இந்தச் சூழலில், தவெக அரசுக்கு நாங்கள் ஆதரவளிக்கிறோம்” எனத் தெரிவித்தார்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。