
























அதிமுக முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான சி.விஜயபாஸ்கர், இலுப்பூரில் உள்ள தனது வீட்டில் நிர்வாகிகளிடம் நேற்று கருத்து கேட்டார்.
Updated on:
விழுப்புரம் / புதுக்கோட்டை: தமிழக அரசியல் பயணத்தில் அடுத்த நிலைப்பாடு குறித்து தங்களின் ஆதரவாளர்களுடன் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், சி.விஜயபாஸ்கர் ஆகியோர் தனித்தனியே ஆலோசனை நடத்தி வருகின் றனர்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள், அதிமுகவில் மிகப்பெரிய பிரளயத்தை ஏற்படுத்திவிட்டது என்றால் மிகையல்ல. அதிமுகவின் தொடர் தோல்விக்கு பொதுச் செயலாளர் பழனிசாமியின் அணுகுமுறைதான் காரணம் எனக் கூறி முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர் உள்ளிட்ட 25 எம்எல்ஏ.க்கள் போர்க்கொடி தூக்கினர்.
மேலும் அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் உத்தரவை மீறி, முதல்வர் விஜய் அரசு மீதான நம்பிக்கை தீர்மானத்துக்கு ஆதரவாக 25 பேரும் வாக்களித்தனர். இதனால் கட்சிக்குள் மோதல் முற்றியது. தவெக ஆதரவு எம்எல்ஏக்களுக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அமைச்சரவை யில் இடம் கிடைக்கவில்லை.
இதற்கிடையே 4 அதிமுக எம்எல்ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். அதைத் தொடர்ந்து, அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியை எஸ்.பி.வேலுமணி உட்பட 18 எம்எல்ஏக்கள் சந்தித்து, கட்சிக்குள் மீண்டும் தங்களை இணைத்துக் கொண்டனர். அதே நேரம் சி.வி.சண்முகம் இதில் பங்கேற்கவில்லை.
இந்நிலையில், அவர் என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஒருபுறம் அவர் அதிமுகவிலேயே தொடருவார் என்றும், மற்றொரு புறம் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணையப் போகிறார் என்றும் பல்வேறு தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.
இத்தகைய சூழலில், சென்னையில் கடந்த 3 வாரங்களாக முகாமிட்டிருந்த சி.வி.சண்முகம், திண்டிவனத்தில் உள்ள தனது வீட்டுக்கு நேற்று திரும்பினார். அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்து அவரைச் சந்தித்து வருகின்றனர். அவர்களிடம், ‘நீங்கள் கலங்க வேண்டாம், எல்லாவற்றையும் நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, சி.வி சண்முகத்திடம் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, “எனக்கு வாக்களித்த மயிலம் தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிப்பது தான் முதல் கடமை” என்றார்.
விஜயபாஸ்கர் ஆலோசனை: அதிமுக முன்னாள் அமைச்சரான சி.விஜயபாஸ்கரும், தனது அடுத்த கட்ட நகர்வு குறித்து ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியை, எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட எம்எல்ஏக்கள் சந்தித்து சமாதானப் பேச்சுவார்த்தை நடத்த சென்றபோது, சி.விஜயபாஸ்கரும் அவர்களுடன் செல்லவில்லை.
இந்நிலையில், விராலிமலை தொகுதி இலுப்பூரில் உள்ள தனது இல்லத்துக்கு நேற்று திரும்பினார். அங்கு தனது ஆதரவு நிர்வாகிகள், தொண்டர்களை வரவழைத்து அரசியலில் அடுத்து என்ன நிலைப்பாட்டை எடுப்பது என்பது குறித்து அவர்களிடம் கருத்து கேட்டார். இதை தொடர்ந்து, புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் அதிமுகவில்தான் தொடர்கிறேன்.
62 ஆயிரம் வாக்குகள்வித்தியாசத்தில் என்னை வெற்றிபெறச் செய்த தொகுதி மக்களுக்கு நன்றியுடன் இருக்க வேண்டும். தொகுதி மக்கள் என்னிடம் ஆதங்கத்துடன் பல்வேறு கருத்துகளைதெரிவித்தனர். அவற்றையெல்லாம் உள்வாங்கியுள்ளேன். அவர்களை பொறுமையுடன் இருக்குமாறு கூறியுள்ளேன். தவெகவுக்கு மாறப் போகிறேனா என்கிற யூகத்துக்கு பதில் அளிக்க முடியாது. மக்களிடம் கருத்து கேட்பது தொடரும்.இவ்வாறு அவர் கூறினார்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。