


























Updated on:
சென்னை: நேர்காணல் இல்லாத பதவிகளுக்கான டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கி உள்ளது.
உதவி ஜியாலஜிஸ்ட், உதவி பொறியாளர், தோட்டக்கலை அலுவலர், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார உதவி இயக்குநர், வேளாண் விரிவாக்க அலுவலர், சுற்றுச்சூழல் விஞ்ஞானி, சட்டத்துறை மொழிபெயர்ப்பாளர், ஜூனியர் போட்டோகிராஃபர், உதவி நூலகர் உட்பட 46 விதமான பதவிகளில் 461 காலியிடங்களை நிரப்பும் பொருட்டு ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வுக்கான (நேர்காணல் இல்லாத பதவிகள்) அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி மே 20-ம் தேதி வெளியிட்டது.
இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு மே 27-ம் தேதி தொடங்கி ஜூன் 25-ம் தேதி முடிவடையும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, இத்தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று தொடங்கியது. நிர்ணயிக்கப்பட்டுள்ள தொழில்நுட்பக் கல்வித் தகுதி உடைய பட்டதாரிகள் மற்றும் முதுகலை பட்டதாரிகள் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தை பயன்படுத்தி ஜூன் 25-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
வெவ்வேறு பதவிகள், அவற்றுக்கான கல்வித்தகுதி, வயது வரம்பு, தேர்வு கட்டணம், தேர்வுமுறை, பாடத்திட்டம், ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம் என டிஎன்பிஎஸ்சி கூறியுள்ளது.
இதற்கான போட்டித் தேர்வுகளை ஆகஸ்ட் மாதத்தில் நடத்த டிஎன்பிஎஸ்சி திட்டமிட்டுள்ளது. இத்தேர்வு கணினிவழி தேர்வாகவும், ஓஎம்ஆர் ஷீட் வடிவிலான தேர்வாகவும் நடத்தப்படும். குறிப்பிட்ட தொழில்நுட்ப பாடத்தில் 200 கேள்விகளும், (300 மதிப்பெண்), பொது அறிவு மற்றும் அடிப்படை கணிதத்தில் 100 கேள்விகளும் (150 மதிப்பெண்) இடம்பெறும். அதோடு, கட்டாய தமிழ்மொழி தகுதித்தாள் தேர்வும் நடத்தப்படும்.
இதில் மொத்தம் 100 கேள்விகள் இடம்பெறும். ஒரு கேள்விக்கு ஒன்றரை மதிப்பெண் வீதம் மொத்தம் 150 மதிப்பெண். இதில் குறைந்த பட்சம் 40 சதவீத மதிப்பெண் (150-க்கு 60)) எடுக்க வேண்டும். இந்த தேர்வில் எடுக்கும் மதிப்பெண், தரவரிசை (ரேங்க்) தயாரிப்புக்கு எடுத்துக் கொள்ளப்படாது. எனினும், தமிழ் தகுதித்தாள் தேர்வில் தேர்ச்சி பெற்றால்தான் விண்ணப்பதாரரின் இதர தாள்கள் மதிப்பீடு செய்யப்படும்.
ஜூனியர் ஃபோட்டோகிராஃபர்:
தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறையில் ஜூனியர் ஃபோட்டோகிராஃபர் என்ற பதவி (23 காலியிடங்கள்) முதல்முறையாக டிஎன்பிஎஸ்சி வாயிலாக நிரப்பப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பதவிக்கு பிஎஸ்சி விஷூவல் கம்யூனிகேஷன் பட்டதாரிகள் விண்ணப்பிக்க தகுதியுடையவர் ஆவர்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。