
























வெடி விபத்தில் பட்டாசு ஆலையில் உள்ள அறை தரைமட்டமானது.
Updated on:
கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் பெண் தொழிலாளி உயிரிழந்தார். 24 பேர் காயமடைந்தனர்.
சிவகாசி அருகே எட்டக்காப்பட்டியைச் சேர்ந்தவர் கண்ணன். இவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் வட்டம் ராசாபட்டியில் கடந்த ஒரு வாரமாக இயங்கி வருகிறது. நேற்று காலை வழக்கம்போல் பட்டாசு ஆலையில் பட்டாசு உற்பத்தி தொடங்கியது. இதற்காக சிவகாசி பகுதியில் இருந்து தொழிலாளர்கள் பேருந்துகளில் அழைத்து வரப்பட்டனர்.
நேற்று மாலை சுமார் 5.30 மணியளவில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. தொழிலாளர்கள் அங்குமிங்கும் சிதறி ஓடினர். 4 அறைகள் இடிந்து சேதமடைந்தன. மாசார்பட்டி போலீஸாரும், கோவில்பட்டி, விளாத்திகுளம், சாத்தூர் ஆகிய ஊர்களில் இருந்து தீயணைப்பு மீட்புப் படை வீரர்களும் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இதில், சாத்தூர் வட்டம் நத்தத்துப் பட்டியைச் சேர்ந்த வெள்ளையப்பன் மனைவி மாரியம்மாள் (48) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், 24 பேர் காயமடைந்தனர். இவர்கள் சாத்தூர் மற்றும் விருதுநகர் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். சிவகாசி வட்டாரத்தில் நிகழ்ந்த தொடர் விபத்துகள் காரணமாக பட்டாசு ஆலைகளுக்கு அங்கு கடும் நெருக்கடி நிலவுகிறது. இதனால், அங்குள்ள பட்டாசு ஆலைகள் கோவில்பட்டி வட்டாரத்தில் தொடங்கப்படுகின்றன.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் போராடி வரும் நிலையில், நேற்று ஏற்பட்ட இந்த வெடி விபத்து, விவசாயிகள் மற்றும் கிராம மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。