






















Updated on:
சென்னை: தவெக அமைச்சரவையில் இடம்பெற்றுவிட்டோம் என்ற காரணத்தினாலேயே, அக்கட்சியுடன் கூட்டணி சேர்ந்துவிட்டோம் என்று பொருள் கிடையாது. நாங்கள் இன்னும் கூட்டணியை உருவாக்கிக் கொள்ளவில்லை. எந்த நேரத்திலும் அமைச்சரவையில் இருந்துகூட நாங்கள் வெளியே வரலாம் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
இதுகுறித்து தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: தமிழகத்தில் ஆட்சி அமைக்க தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆதரவைப் பெறாமல், மதச்சார்பற்ற சக்திகளை அழைக்க தவெக முடிவு எடுத்தது. இந்த யுக்தியை அனைவரும் பாராட்டுகின்றனர். தவெகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிக்க இடதுசாரிகள் முடிவு செய்தன. வெளியில் இருந்து ஆதரவு என்ற முடிவையே விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் நான் வலியுறுத்தினேன். ஆனால், அமைச்சரவையில் பங்கேற்க வேண்டும் என எங்கள் கட்சியினர் வலியுறுத்தினர்.
தமிழகத்தில் இதுபோன்ற வாய்ப்பு அமைவது கற்பனையிலும் நடக்காது. பல மாநிலங்களில் ஏற்கெனவே பட்டியலினத்தவர்கள் துணை முதல்வர்களாக உள்ளனர். இந்த சூழலில், இப்படி வரும் வாய்ப்பை பயன்படுத்துவதில் தவறு இல்லை என கம்யூனிஸ்ட் கட்சியினரும், திமுகவில் ஒரு சிலரும் கூறினர்.
இதையடுத்து, ஆதவ் அர்ஜுனாவை அழைத்து ஆதரவுக் கடிதம் கொடுத்தபோது, ‘‘அமைச்சரவையில் நீங்கள் இடம்பெற வேண்டும்’’ என்றார். அதற்கு, ‘‘அமைச்சரவையில் இடம்பெற விருப்பம் இல்லை. வெளியில் இருந்து ஆதரவு தருகிறோம். அமைச்சரவை குறித்து பிறகு பேசலாம்’’ என்றேன். இதையடுத்து, வன்னியரசை அமைச்சராக்க முடிவு செய்து அறிவித்தேன்.
அதற்கு சில நாட்களுக்கு முன்பு எங்கள் கட்சி பொதுச் செயலாளர் ரவிகுமார், எனக்கு துணைமுதல்வர் பதவி கொடுக்க வேண்டும் என பேசியுள்ளார். அது எனக்கு தெரியாது. இது குறித்து முதல்வர் விஜய் என்னிடம் பேசினார். அப்போது, ‘‘துணை முதல்வர் பதவி என்பது எங்கள் திட்டத்தில் இல்லை. ஆனால், நீங்கள் அமைச்சரவையில் இடம்பெற வேண்டும்’’ என்றார். அப்போதும் மறுத்தேன்.
பின்னர், ரவிகுமார் பேசியது குறித்து அறிந்தவுடன் ஆதவ் அர்ஜுனாவிடம் உடனே பேசி என் பெயரை சேர்க்க வேண்டாம் என உறுதியாக கூறினேன்.
தவெகவுக்கு நாங்கள் ஆதரவு அளிக்கும் விவகாரத்தில் திமுகவும் நெகிழ்வுத்தன்மையுடன் இருந்தது எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. ‘நம் கூட்டணிக்கு ஆதரவானவர்கள்தான் தவெகவை எதிர்த்து வாக்களித்துள்ளனர். எனவே, தவெகவுக்கு விசிக, இடதுசாரிகள் ஆதரவு தரக்கூடாது’ என திமுக கூறியிருக்க வேண்டும். ஆனால், திமுக அதை செய்யவில்லை.
‘ஏற்கெனவே இடதுசாரிகள் வெளியில் இருந்து ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளன. திருமாவளவனும் அதே முடிவை எடுப்பது எந்த நேரத்திலும் பிரச்சினைதான். திடீரென ஆதரவை அவர் திரும்பப் பெற்றால் என்ன செய்வது. ஆதரவு அளிப்பதாக கூறிக்கொண்டே திமுக கூட்டணியில் தொடர்வதாக அவர் பேசுகிறாரா’ என்றெல்லாம் தவெகவினர் கவலை கொண்டனர். தவெகவின் சந்தேகத்தை போக்கத்தான் ஆட்சி அமைக்க ஆதரவு கொடுத்தோம், அதற்கு பரிசாக தவெக அமைச்சரவையில் எங்களுக்கு இடம் தரப்பட்டது.
அதேநேரம், அமைச்சரவையில் இடம்பெற்றுவிட்டோம் என்பதாலேயே, தவெக கூட்டணியில் சேர்ந்துவிட்டோம் என்று பொருள் கிடையாது. நாங்கள் இன்னும் கூட்டணியை உருவாக்கிக் கொள்ளவில்லை. இதுதான் உண்மை. எந்த நேரத்திலும் நாங்கள் அமைச்சரவையில் இருந்துகூட வெளியே வரலாம். வரமுடியாதுஎன்பதற்கு என்ன இருக்கிறது. அப்படி அரசியல் செய்ய முடியும். அப்படி ஒரு நிலைப்பாட்டையும் எங்களால் எடுக்க முடியும். திமுக - அதிமுக இணைந்து ஆட்சியமைப்பது குறித்து ஒரு கருத்து நிலவுவதாக திமுக தலைவர் எங்களிடம் கூறினாரே தவிர, திமுக - அதிமுக இணைந்து ஆட்சியமைக்கலாம் என கூறவில்லை.
அதற்காக, திமுக - அதிமுக இணைவது குறித்த கருத்தே தவறு என கூற முடியாது. ஆதவ் அர்ஜுனாவிடம் ரூ.300 கோடி வாங்கியதாக விமர்சிக்கின்றனர். விசிக எழை எளிய மக்களின் கட்சி. திருமாவளவன் பணத்துக்கு ஆசைப்படுகிறார் என கட்டமைப்பது அவதூறான குற்றச்சாட்டு. இவ்வாறு அவர் கூறினார்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。