
























Updated on:
சென்னை: நடிகர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படத்தை லீக் செய்தது யார் என்பது குறித்து சைபர் க்ரைம் போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமுமான விஜய் நடித்துள்ள திரைப்படம் ஜனநாயகன். ஹெச். வினோத் இயக்கத்தில், சுமார் ரூ.500 கோடி பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படம், விஜய்யின் திரைப்பயணத்தில் கடைசிப் படம் என்பதால் உலகளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இதில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பாபி தியோல் எனப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.
கடந்த ஜனவரி மாதம் பொங்கலுக்கு வெளியாக வேண்டிய படம், எதிர்பாராத தணிக்கை சிக்கல்களால் முடங்கியது. நீண்ட போராட்டத்துக்குப் பிறகு, கடந்த மாதம் மறுதணிக்கைக் குழு இப்படத்தைப் பார்வையிட்டது. விரைவில் சான்றிதழ் கிடைத்து படம் திரைக்கு வரும் என்று ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்தனர். இந்நிலையில், படக்குழுவினருக்கும் ரசிகர்களுக்கும் பேரிடியாக ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
தணிக்கைச் சான்றிதழுக்காகக் காத்திருக்கும் சூழலில், ஜனநாயகன் திரைப்படத்தின் முழுப் பதிப்பும் நேற்று முன்தினம் அதிகாலை இணையத்தில் சட்டவிரோதமாகக் கசிந்தது. திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பே படம் கசிந்ததால் ஒட்டுமொத்தப் படக்குழுவும் கடும் அதிர்ச்சியில் உறைந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் முன்னாள் தலைவர் கேயார், தமிழக டிஜிபியிடம் புகார் அளித்தார்.
திரைப்படத்தை இணையத்தில் கசியவிட்ட மர்ம நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியிருந்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ள சைபர் க்ரைம் போலீஸார், ஐபி முகவரி மற்றும் டிஜிட்டல் தடயங்களை வைத்து பல்வேறு கோணங்களில் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
இந்தச் சட்டவிரோதச் செயலில் தனிநபர்கள் ஈடுபட்டார்களா, தொழில்நுட்ப ரீதியாக படம் எங்கே இருந்து கசிந்தது, தணிக்கை அலுவலகத்துக்கு அனுப்பப்பட்ட நகலில் இருந்து ஏதேனும் கசிவு ஏற்பட்டதா என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது. விஜய் தற்போது அரசியலில் கால்பதித்துள்ள நிலையில், இதற்குப் பின்னால் ஏதேனும் அரசியல் சதி இருக்குமா என்பது குறித்தும் விசாரிக்கப்படுவதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும், படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகளில் ஈடுபட்ட ஊழியர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்த உள்ளனர்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。