













தமிழக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் க.விக்னேஷ்
Updated on
:
1 min read
சென்னை: தமிழகத்தில் கள்ளச்சாராய விற்பனை முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும் என்றும் விதிமீறலுக்கு துணைபோகும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் விக்னேஷ் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் க.விக்னேஷ், மதுவிலக்கு ஆயத்தீர்வை ஆணையரகத்தில் அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது, ஆணையர் கார்த்திகா, இணை ஆணையர் மற்றும் உதவி ஆணையர்கள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
தீவிர கண்காணிப்பு: இக் கூட்டத்தில் அமைச்சர் பேசியதாவது: மனமகிழ் மன்றங்கள், விதிமுறைகளின்படி முறையாக செயல்படுகிறதா என்பதை மாவட்ட அளவிலான அலுவலர்கள் புலத்தணிக்கை செய்து உறுதிப்படுத்த வேண்டும். நமது மாநிலத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சுதல், கடத்துதல் மற்றும் விற்பனை செய்தல் போன்ற நடவடிக்கைகள் முற்றிலும் இல்லாமல் மாவட்ட அளவிலான களப்பணியாளர்கள் தொடர்ந்து தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.
திடீர் புலத்தணிக்கை: கலால் மேற்பார்வை அலுவலர்கள், மதுபான ஆலைகள் விதிமுறைகளுக்கு உட்பட்டு இயங்குவதை உறுதி செய்ய வேண்டும். பொதுமக்களுக்கு கள்ளச்சாராயம், போலி மதுபானங்கள் மற்றும் போதைப்பொருட்கள் பயன்படுத்துவதற்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அவ்வப்போது திடீர் புலத்தணிக்கை மேற்கொண்டு அவற்றை முற்றிலும் களையவும் தீவிர நடவடிக்கை எடுக்க வும் வேண்டும்.
ஏதேனும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மற்றும் உடந்தையாக செயல்படும் அலுவலர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக, டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமைச்சர் விக்னேஷ் ஆலோசனை நடத்தினார். அப்போது, ‘‘717 டாஸ்மாக் கடைகளில் இதுவரை, 436 கடைகளும், அவற்றுடன் இணைந்துள்ள பார்களும் மூடப்பட்டுள்ளன. மீதமுள்ளவற்றையும் மூடுவதற்கு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். மூடப்பட்ட கடைகளில் பணிபுரிந்து வந்த பணியாளர்கள், அருகிலுள்ள மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் பணியமர்த்தவேண்டும். அதிகபட்ச சில்லறை விற்பனை விலையை விட கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்கும் பணியாளர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்’’ என்று அறிவுறுத் தினார்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。