


























Updated on
:
2 min read
சென்னை: ‘திருவான்மியூர் - உத்தண்டி உயர்மட்ட பாலம் அமைக்க ஒப்பந்தம் வழங்கப்பட்டதன் பின்னணியில் நடந்த ஊழல்கள், அதன் பின்னணியில் இருந்த திமுக அமைச்சர்கள் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னை திருவான்மியூர் - உத்தண்டி உயர்மட்ட பாலம் அமைக்கும் பணிகளை நிறுத்தி, ஊழல் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும்’ என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் திருவான்மியூரிலிருந்து உத்தண்டி வரை 13.30 கி.மீ தொலைவுக்கு உயர்மட்ட பாலம் அமைப்பதற்காக ஆரம்பக் கட்ட பணிகள் தொடங்கப்பட்டு, முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த திட்டத்திற்கான மதிப்பில் 50% அளவுக்கு ஊழல் நடைபெற்றிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்து, அது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றமும் சில வழிகாட்டுதல்களை வழங்கியுள்ள நிலையில், அதன் கட்டுமானப் பணிகளை சம்பந்தப்பட்ட நிறுவனம் மேற்கொள்ள தமிழக அரசு அனுமதித்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
திருவான்மியூர் - உத்தண்டி இடையே உயர்மட்டப் பாலம் அமைக்க கடந்த பிப்ரவரி 26ஆம் தேதி அன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டிய போதே அதற்கு நான் எதிர்ப்பு தெரிவித்தேன். இந்தப் பணிக்கான ஒப்பந்தம் பெற்ற ஐதராபாத்தைச் சேர்ந்த கே.என்.ஆர் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் நிறுவனம் பணிகளைத் தொடங்கக் கூடாது என்றும் வலியுறுத்தியிருந்தேன். அதன்பின் தேர்தல் அறிவிக்கப்பட்டதால் பணிகள் தொடங்கப்படவில்லை.
தேர்தலுக்குப் பிறகு தூய்மையான நிர்வாகத்தை வழங்குவதாகக் கூறி ஆட்சிப் பொறுப்பேற்ற முதல்வர் விஜய் தலைமையிலான அரசு, முந்தைய திமுக ஆட்சியில் வழங்கப்பட்ட பல ஒப்பந்தங்களை நிறுத்தி வைத்ததைப் போல இந்த ஒப்பந்தத்தையும் நிறுத்தி வைக்கும் என்று பா.ம.க. எதிர்பார்த்தது. ஆனால், அதற்கு முற்றிலும் மாறாக உயர்மட்ட பாலம் அமைக்கப்படவுள்ள கிழக்குக் கடற்கரை சாலையில் மண் ஆய்வு உள்ளிட்ட பணிகளை கே.என்.ஆர் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் நிறுவனம் முழுவீச்சில் மேற்கொண்டு வருகிறது.
அதுமட்டுமின்றி, இந்த உயர்மட்ட பாலம் கட்டுவதற்குத் தேவையான கர்டர்களை தயாரிப்பதற்காக சென்னை திருவிடந்தையில் வள்ளல் ஆயிரம் காணி ஆளவந்தார் நாயகரால் நித்திய கல்யாண பெருமாள் கோயிலுக்கு கொடையாக வழங்கப்பட்ட நூறு ஏக்கருக்கும் கூடுதலான நிலம் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு 3 ஆண்டுகள் குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது. கே.என்.ஆர் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் நிறுவனத்தின் முறைகேடுகளுக்கு முந்தைய திமுக அரசு துணை போன நிலையில், அதை த.வெ.க. அரசு தடுத்து நிறுத்தியிருக்க வேண்டும்.
திருவான்மியூர் - உத்தண்டி உயர்மட்ட பாலம் அமைப்பதற்கான ஒப்பந்தம் கடந்த திமுக ஆட்சியில் வழங்கப் பட்டதில் நடைபெற்ற ஊழல்களை ஒட்டுமொத்த தமிழ்நாடும் அறியும். உயர்மட்ட பாலம் அமைக்க ரூ.2100 கோடி செலவாகும் என கே.என்.ஆர் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் குறிப்பிட்டிருந்த நிலையில், அதில் மூன்றில் ஒரு பங்கு, அதாவது ரூ.700 கோடி குறைவாக ரூ.1400 கோடியில் அப்பணியை முடித்துத் தருவதாக மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த திலிப் பில்ட்காப் என்ற நிறுவனம் ஒப்பந்தப்புள்ளி அளித்திருந்தது.
ஆனால், அதிக தொகையை குறிப்பிட்டிருந்த கே.என்.ஆர் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் நிறுவனத்திற்கு ஒப்பந்த அளிக்க வேண்டும் என்பதற்காக திலிப் பில்ட்காப் நிறுவனத்தின் ஒப்பந்தப் புள்ளியை எந்தக் காரணமும் கூறாமல் திமுக அரசு நிராகரித்து விட்டது. பின்னர் கே.என்.ஆர் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் நிறுவனத்திற்கு கடந்த டிசம்பர் 24-ஆம் தேதி ஒப்பந்தம் அளிக்கப்பட்டது.
இதை எதிர்த்து திலிப் பில்ட்காப் நிறுவனம் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, உயர்மட்டச் சாலை அமைப்பதற்கான பணி ஆணை வழங்கத் தடை விதித்தது. இத்தடையை நீக்க திமுக அரசு பலமுறை முயன்றும் கூட அதை நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளவில்லை. ஒரு கட்டத்தில் வழக்குத் தொடர்ந்த நிறுவனத்தையே திமுக அரசு விலைக்கு வாங்கிவிட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
அதனால், உயர்நீதிமன்றத்தில் அந்த நிறுவனம் வலிமையான வாதங்களை முன்வைக்காத நிலையில், ஒப்பந்தம் தொடர்பான அரசின் முடிவை எதிர்த்து திலிப் பில்ட்காப் 5 நாள்களில் அரசிடம் மேல்முறையீடு செய்யலாம் என்றும், அதன் மீது அடுத்த 10 நாள்களில் அரசு முடிவெடுக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் ஆணையிட்டது. ஆனால், முந்தைய ஆட்சியாளர்கள் சார்பில் கட்டாயப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து திமுக அரசின் முடிவை மத்தியப் பிரதேச கட்டுமான நிறுவனம் எதிர்க்காமல் விட்டு விட்டதாகக் கூறப்படுகிறது. அதன் பயனாகத் தான் கே.என்.ஆர் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் நிறுவனத்திற்கு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.
திருவான்மியூர்-உத்தண்டி உயர்மட்ட பாலம் அமைப்பதற்கான ஒப்பந்தம் முறைப்படி வழங்கப்பட்டிருந்தால், அரசுக்கு ரூ.700 கோடி மிச்சமாகியிருந்திருக்கும். ஆனால், திமுக அரசின் ஊழல் வேட்கையால் ரூ.1400 கோடிக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டிய ஒப்பந்தம் ரூ.2100 கோடிக்கு வழங்கப்பட்டது. இதனால் மக்களின் வரிப்பணம் ரூ.700 கோடி வீணாகியுள்ளது. எனவே, திருவான்மியூர் - உத்தண்டி உயர்மட்ட பாலம் அமைக்கும் பணிகளை உடனடியாக நிறுத்த ஆணையிட வேண்டும்; அதுமட்டுமின்றி, இந்தப் பணிக்காக கே.என்.ஆர் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ள ஒப்பந்தத்தையும் தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும்.
மேலும் திருவான்மியூர் - உத்தண்டி உயர்மட்ட பாலம் அமைப்பதற்கான ஒப்பந்தம் கே.என்.ஆர் கன்ஸ்ட்ரக்சன்ஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டதன் பின்னணியில் நடந்த ஊழல்கள் மற்றும் முறைகேடுகள், அதன் பின்னணியில் இருந்த திமுக அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்து, சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத் தர த.வெ.க. அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.’ எனத்தெரிவித்துள்ளார்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。