
























கடலூர் மாவட்ட மதுவிலக்கு போலீஸார் கடந்த ஆண்டு ஜனவரியில் புதுச்சேரி - தமிழக எல்லையில் உள்ள சோதனைச் சாவடியில் காட்டுமயிலூரைச் சேர்ந்த வல்லரசு என்பவரின் வாகனத்தை சோதனையிட்டனர். அப்போது அவரிடமிருந்து புதுச்சேரியில் இருந்து கொண்டு வரப்பட்ட ஒரு லிட்டர் 680 எம்.எல் எடையளவு கொண்ட 3 மது பாட்டில்களை பறிமுதல் செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
கடலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி வல்லரசு, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி எம்.நிர்மல்குமார் முன்பாக நடந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எம்.பாலாஜி, “தனிநபரின் சொந்த பயன்பாட்டுக்காக நான்கரை லிட்டர் மதுபானம் வைத்துக் கொள்ள தமிழக அரசின் 1996-ம் ஆண்டு மதுபான விதிகளில் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி தமிழக அரசு கடந்த 2017-ல் அரசாணை பிறபித்துள்ளது. எனவே மனுதாரர் தனது சொந்த பயன்பாட்டுக்காக ஒரு லிட்டர் 680 எம்.எல் மதுபானம் வைத்திருந்தது சட்டவிரோதமா னது அல்ல. எனவே வழக்கை ரத்து செய்ய வேண்டும்” என்று வாதிட்டார். ஆனால் அரசு தரப்பில், மனுதாரர் புதுச்சேரியில் இருந்து மதுபானங்களை சட்டவிரோதமாக தமிழகத்துக்குள் கொண்டு வந்து மற்றவர்களுக்கு விற்பனை செய்துள்ளார். எனவேதான் அவர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர் என்று வாதிடப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தனிநபர்கள் தங்களது சொந்த பயன்பாட்டுக்காக நான்கரை லிட்டர் மதுபானம் வைத்துக் கொள்ளலாம் என தமிழக அரசின் விதிகள் அனுமதிக்கும் நிலையில், மனுதாரர் மீது வழக்குப் பதிவு செய்தது ஏற்புடையதல்ல எனக் கூறி மனுதாரர் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், கடலூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு சார்பில் தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய சம்பந்தப்பட்ட உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும், இது தொடர்பாக கடலூர் மாவட்ட மதுவிலக்கு போலீஸார் கூறுகையில், “தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகள், உரிமம் பெற்ற வளாகங்களில் விற்கப்படும் மதுபானம் மற்றும் முறையாக அங்கீகரிக்கப்பட்ட மதுபானங்களுக்கு மட்டுமே இது பொருந்தும்.
பிற மாநில மதுபானங்கள் மற்றும் மாநில அரசின் அறிக்கை, பிராண்ட் அறிமுக அரசாணை, இறக்குமதி அனுமதிகள் மூலம் குறிப்பிடப்படாத மதுபானங்களை அதிகபட்ச வரம்பான நான்கரை லிட்டர், 7.8 லிட்டர் அளவுக்கு பீர் அல்லது 9 லிட்டர் அளவுக்கு ஒயின் ஆகியவற்றை தனிப்பட்ட பயன்பாட்டுக்கோ அல்லது விற்பனைக்காகவோ வைத்திருப்பது தமிழ்நாடு மதுவிலக்கு சட்டத்தின் பிரிவு 4(1) (சி) மற்றும் 14-இன் கீழ் குற்றமாகும். எனவே புதுச்சேரியில் இருந்து சட்டவிரோதமாக 90 எம்.எல் மதுபாட்டிலை தமிழகத்துக்குள் கொண்டு வந்தாலும் குற்றமே. அதன் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கடலூர் மாவட்ட மதுவிலக்கு போலீஸார் தெரிவித்தனர்.
தமிழக அரசு முறையீடு:
இந்த நிலையில், நீதிமன்ற உத்தரவு குறித்து விளக்கம் அளிக்க கோரிய மனுவை நாளை விசாரணைக்கு எடுக்கக் கோரி, தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, நீதிபதி எம்.நிர்மல்குமார் முன்பு முறையீடு செய்தார். அப்போது அவர், ‘நீதிமன்ற உத்தரவு தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. தனிநபர் 4.5 லிட்டர் மதுபானம் வைத்துக்கொள்ள அனுமதியளிக்கும் அரசாணை புதுச்சேரி மாநில மதுபானத்துக்கு பொருந்தாது.
பிற மாநில மதுபானங்கள், மிகக் குறைந்த அளவில் இருந்தாலும் அதனை வைத்திருப்பது அல்லது விற்பனை செய்வது சட்டப்படி குற்றம் என அரசு தரப்பில் ஏற்கெனவே விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது’ என்று அவர் கூறினார். தலைமை குற்றவியல் வழக்கறிஞரின் முறையீட்டை ஏற்ற நீதிபதி, விளக்கம் கோரிய மனுவை நாளை (ஏப்.29) விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக அனுமதியளித்துள்ளார்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。