


















Updated on:
சென்னை: சென்னை தலைமைச் செயலகம் அருகே திடீரென புகைமூட்டம் பரவியதால், பொதுமக்கள் மற்றும் பாதுகாப்புப் பணியில் இருந்த காவல் துறையினர் மூச்சுத்திணறல் பாதிப்புக்கு உள்ளாகினர்.
சென்னை தலைமைச் செயலகத்துக்கு முதல்வர், அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் தினந்தோறும் வந்து செல்கின்றனர். பொதுமக்களும் தங்களது கோரிக்கைகள் மற்றும் குறைகளை தெரிவிக்க தலைமைச் செயலகத்துக்கு வருகை தருகின்றனர்.
இந்நிலையில், நேற்று மதியம் தலைமைச் செயலகம் எதிரே உள்ள பகுதியில் திடீரென வெள்ளை நிற புகைமூட்டம் உருவானது. இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது. இதையடுத்து தீயணைப்பு துறைக்கு உடனடியாக தகவல் கொடுக்கப்பட்டது.
இதற்கிடையே அடர்த்தியாக பரவிய இந்த புகை மூட்டத்தால், சுமார் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவு பகுதியில் இருந்த பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மூச்சுத் திணறல், கண் எரிச்சல், தொண்டை எரிச்சல், குமட்டல், வாந்தி போன்ற பாதிப்புகளுக்கு ஆளாகினர்.
நிலைமையின் வீரியத்தை புரிந்து கொண்டு தலைமைச் செயலகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த காவலர்களும், அங்கு வந்திருந்த பொதுமக்களும் முகத்தை கைக்குட்டையால் மூடியபடி சென்று வந்தனர். இதற்கிடையே இந்தப் புகை எங்கிருந்து வெளியானது என்பது குறித்து காவல் துறையினர் மற்றும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, தலைமைச் செயலகம் எதிரே உள்ள சென்னை துறைமுக வளாகத்தில் இருந்து புகை வெளியானது தெரிய வந்தது. துறைமுக வளாகத்தில் கையாளப்பட்ட சல்பர், அதிக வெப்பம் காரணமாக வேதிவினை ஏற்பட்டு புகை மற்றும் நச்சுத்தன்மை கொண்ட வாயுவை உருவாக்கியதாக தகவல் வெளியானது.
தகவல் கிடைத்தவுடன் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, சல்பர் மீது தண்ணீர் பீய்ச்சி அடித்து நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இதையடுத்து 10-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகனங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதிக்கு அனுப்பப்பட்டு பொதுமக்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்பட்டன.
இதற்கிடையே, சல்பர் கையாளும் பகுதியில் பாதுகாப்பு நடைமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டதா? என்பது குறித்து விளக்கமளித்த துறைமுக அதிகாரிகள், “துறைமுக வளாகத்தில் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்து, கப்பலில் இருந்து இறக்கி வைக்கப்பட்டிருந்த சல்பர் (கந்தகம்) குவியல், அதிக வெப்பம் காரணமாக வேதியியல் மாற்றம் அடைந்து வெண்புகையாக வெளியேறி பரவியது.
இதனைத் தொடர்ந்து தீயணைப்பு துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டு, நிலைமை விரைந்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.” என தெரிவித்தனர்.
இதேபோல் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு வந்து சோதனைக்காக மாதிரிகளை எடுத்துச் சென்றனர். பின்னர் அவர்கள் அளித்த விளக்கத்தில், “வழக்கமாக காற்றில் நுண்துகள்கள் மட்டுமே இருக்கும்.
ஆனால், தலைமைச் செயலகம் உள்ளடக்கிய சுற்று வட்டாரப் பகுதிகளில் புகைமூட்டத்துடன் பரவிய காற்றில், நைட்ரஜன் டை ஆக்ஸைடு, அமோனியா கலந்திருப்பது தெரியவந்துள்ளது. இதனால் தான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.” என்று தெரிவித்தனர்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。