





















Updated on
:
1 min read
திருச்சி: திருச்சியில் நகைபட்டறையில் ஒரு கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், நகை பட்டறை ஊழியர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருச்சி பெரியசெட்டி தெருவில் பழைய தங்க நகைகளை உருக்கி அதை கட்டியாக்கி விற்பனை செய்யும் நகை பட்டறை தொழில் நடத்தி வருபவர் உதய். இவரது வீட்டின் முதல் தளத்தில் கடை ஊழியர் நித்தின் என்பவர் தங்கி உள்ளார்.
இருவரும் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இந்நிலையில், நகை பட்டறைக்கு ஏப்.25-ம் தேதி வந்த 4 பேர், தங்கக்கட்டி வாங்குவதுபோல பேசி நித்தின், உதய் ஆகியோரை தாக்கி ரூ.1.49 கோடி மதிப்பிலான ஒரு கிலோ தங்கக்கட்டியை கொள்ளையடித்துச் சென்றனர்.
இதுதொடர்பாக, கோட்டை போலீஸார் 2 தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடினர். உதய், நித்தின் ஆகியோரது செல்போன்களை கைப்பற்றிய போலீஸார், இருவரும் யாரிடம் பேசினார்கள் என ஆய்வு செய்தனர்.
இதில், கடை ஊழியர் நித்தினிடம் விசாரணை நடத்தியபோது, அவர் தனக்கு தெரிந்த மகாராஷ்டிராவைச் சேர்ந்த 3 பேரை வைத்து கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியது தெரியவந்தது.
மேலும், சம்பவம் நடைபெற்ற அன்றே போலீஸார் மாநிலம் முழுவதும் சோதனைச் சாவடிகளை எச்சரித்தனர். ஓசூர் அருகே கொள்ளையர்கள் சென்ற காரை போலீஸார் மடக்கி பிடிக்க முயன்றபோது, காரில் இருந்த 3 பேர் தப்பியோடினர். கார் ஓட்டுநர் அமல்ஜாதவ் மட்டும் போலீஸாரிடம் சிக்கிக் கொண்டார்.
நித்தின், அமல்ஜாவத் ஆகியோர் அளித்த தகவலின்பேரில், திருட்டு நகைகளை வாங்கி விற்கும் பியூஸ் ஆனந்த், பிரவீன் ஆகியோரையும் போலீஸார் பிடித்தனர்.
தொடர்ந்து, நித்தின், அமல்ஜாதவ், பியூஸ்ஆனந்த், பிரவீன் ஆகிய 4 பேரையும் போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர். பின்னர், அவர்களை திருச்சி 3-வது குற்றவியல் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த கொள்ளை சம்பவத்தில் நேரடியாக ஈடுபட்டு தலைமறைவாக உள்ள 3 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。