

























Updated on:
மதுரை: “தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக நியமிக்கப்பட்ட கே.வெங்கட நாராயணா கர்நாடகாவை சேர்ந்தவர் அல்ல, ஆந்திராவை சேர்ந்தவர். அவர் உண்மையிலேயே நம்பிக்கையானவர்” என அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக, ‘ஜனநாயகன்’ பட தயாரிப்பாளர் கே.வெங்கட நாராயணா நியமிக்கப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இதுகுறித்து மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல் குமார், “ தவறான நபருக்கு பொறுப்பு கொடுக்கப்படவில்லை. அவர் கர்நாடகாவை சேர்ந்த நபர் அல்ல, ஆந்திராவை சேர்ந்தவர். அங்கே போய் தொழில் தான் செய்கிறார். அவர் தமிழகத்தில் வேலை பார்க்கப் போவதில்லை. டெல்லியில் தான் இருக்கப் போகிறார்.
அவர் டெல்லியில் ஒரு பிரதிநிதியாக, ஒருங்கிணைப்புக்கு இருக்கப் போகிறார். எந்தப் பெரிய முடிவுகளும் எடுக்கப் போவதில்லை, எந்த ஒப்புதலும் வழங்கப் போவதில்லை. அவர் ஒருங்கிணைப்புக்காக இருக்கப்போகிறார், அதில் நம்பிக்கையானவர்கள் இருப்பதில் தவறு இல்லை.
டெல்லியிலேயே பிறந்து வளர்ந்தவர்கள் பல காலங்களில் இந்த பொறுப்பில் இருந்துள்ளனர். முன்பு இது அலங்கார பதவியாக இருந்தது. யாரும் எம்எல்ஏவாக ஜெயிக்கவில்லை என்றால் இந்த பதவியை தருவார்கள். இந்த பொறுப்பை யாரும் தவறாக பயன்படுத்தக் கூடாது என்பதற்காக, கே.வெங்கட் நாராயணாவுக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
அவர் உண்மையிலேயே நம்பிக்கையானவர். எல்லா அழுத்தங்களையும் தாண்டி எங்கள் தலைவருடன் நிற்பவர். அவருக்கு பணமும், பொறுப்பும் ஒரு பெரிய விஷயம் கிடையாது. அவர் நம்பிக்கையான நபர், அதனால் இதில் தவறேதும் இல்லை. அவர் எந்த முடிவையும் எடுக்கப் போவதில்லை. எனவே அரசியலுக்காக இதை பூதாகரமாக்குவதில் தவறு ஏதும் இல்லை.
முன்பு இந்த பொறுப்பு சாதாரண பதவியாக இருந்தது. 15 ஆண்டுகளில் இதனை பெரிய பொறுப்பாக முன்னிலைப் படுத்தினர். யார் யாருக்கெல்லாம் கட்சியில் பொறுப்பு கொடுக்க முடியவில்லையோ, அவர்களுக்கு தற்காலிகமாக இந்த பதவியை வழங்குவார்கள். இது சின்ன பொறுப்புதான். இந்த அரசை கொண்டுவர உறுதியாக இருந்தவர்களுக்கு பொறுப்புகள் வழங்கப்படுகிறது” என்று அவர் கூறினார்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。