

























Updated on
:
1 min read
சென்னை: பேரறிவாளனை வழக்கறிஞராக பதிவு செய்ததை ரத்து செய்ய உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு, அகில இந்திய பார் கவுன்சில் மற்றும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தரப்பு 4 வாரத்துக்குள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளன், உச்ச நீதிமன்றத்தால் முன்கூட்டியே விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில், கடந்த ஏப்ரல் 24-ஆம் தேதி அவர் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் வழக்கறிஞராக தன்னை பதிவு செய்துள்ளார்.
அவரது வழக்கறிஞர் பதிவை நிறுத்தி வைத்து நீதிமன்றங்களில் வழக்காட அனுமதிக்கக் கூடாது என பார் கவுன்சிலுக்கு உத்தரவிடக் கோரி சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த ரவி ராஜா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அதில், வழக்கறிஞர் சட்டத்தில் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபட்டு தண்டிக்கப்பட்டவர்களை வழக்கறிஞராக பதிவு செய்யக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட பேரறிவாளனை வழக்கறிஞராக பதிவு செய்தது வழக்கறிஞர் சட்டத்துக்கு விரோதமானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.சௌந்தர் மற்றும் பி.பி.பாலாஜி அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சுதர்சனா சுந்தர், ‘பேரறிவாளனை நீதிமன்றம் நிரபராதி என விடுதலை செய்யவில்லை என்பதால் வழக்கறிஞர் சட்டப்படி வழக்கறிஞராக பதிவு செய்யும் தகுதியை இழக்கிறார்’ என்று சுட்டிக்காட்டி வாதிட்டார்.
இந்த வாதத்தைக் கேட்ட நீதிபதிகள், இந்த மனுவுக்கு நான்கு வாரங்களுக்குள் பதில் அளிக்கும்படி இந்திய பார் கவுன்சிலுக்கும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலுக்கும் உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தனர்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。