





















Updated on
:
1 min read
சென்னை: பண்டிதர் அயோத்திதாசரின் 181-வது பிறந்த நாளை முன்னிட்டு கிண்டி, காந்திமண்டப வளாகத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு முதல்வர் விஜய் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
மேலும் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, விசிக தலைவர் திருமாவளவன் ஆகியோரும் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
முதல்வர் விஜய் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், “பண்டிதர் அயோத்திதாசர் ஏற்றத்தாழ்வு மிக்க சமூகங்களைக் கண்டு வெகுண்டெழுந்து சமூக சீர்திருத்தப் பாதையில் தனது பயணத்தை தொடங்கி சாதி ஒழிப்பையும், சமூக விடுதலையையும் தனது லட்சியமாகக் கொண்டிருந்தார்.
சித்த மருத்துவம் பயின்று, சிறந்த சித்த மருத்துவராக விளங்கினார். 1892-ல் நீலகிரி மாநாட்டுத் தீர்மானத்திலேயே அயோத்திதாசர் இட ஒதுக்கீடு கோரிக்கையை முன்வைத்தார்.
கைம்பெண் மறுமணம், பெண்களுக்கு தொழிற்கல்வியில் இட ஒதுக்கீடு, சம உரிமை ஆகியவற்றை கோரிய காரணத்தால் தென்னிந்தியாவின் சமூக சீர்திருத்தங்களின் தந்தை என்று அழைக்கப்பட்டார்” என கூறியுள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்: சாதியெனும் இருள் அகற்றிடத் தோன்றிய திராவிடப் பேரொளி அயோத்திதாசரின் புகழ் ஓங்குக. மயங்கிக் கிடந்த நம் இனம் விழித்தெழ, புரட்சிகரச் சிந்தனைகளை விதைத்த திராவிட இயக்கத்தின் முன்னோடி பண்டிதர் அயோத்திதாசர்.
அவருக்கு உருவச் சிலையும் மணிமண்டபமும் அமைத்தது, அவரது பெயரில் குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டம் உருவாக்கியது திமுக அரசுக்குக் கிடைத்த பெரும் பெருமை.
சாதிபேதமற்ற சமுதாயத்தைக் கட்டமைக்க, ‘தமிழன்’, ‘திராவிடன்’ ஆகிய சொற்களை அரசியல்களத்தில் ஆயுதமாகப் பயன்படுத்திய அயோத்திதாசரின் சிந்தனைகள் நீடூழி வாழ வேண்டும்.
திராவிடச் சிந்தனை நோக்கி இளைஞர்களை ஈர்த்த அவரது வழியில் பயணிப்போம்! தமிழ்ச் சமூகம் மேன்மையுற தொடர்ந்து பாடுபடுவோம் என்று தெரிவித்து உள்ளார்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。