



















Updated on:
சென்னை: அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் செம்மலை விலகி உள்ளார். இது தொடர்பாக கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமிக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியுள்ளதாவது:
தேர்தலுக்கு பிறகு அஇஅதிமுகவில் அடுத்தடுத்து நடக்கும் நிகழ்வுகள் எனக்கு மிகுந்த மன வேதனையை உண்டாக்கி விட்டது. இதே மனநிலையில்தான், இயக்கம் தொடங்கிய நாளிலிருந்து இந்த இயக்கத்திற்காக பாடுபட்டு வந்த லட்சக்கணக்கான தொண்டர்களும் இருந்து வருகிறார்கள்.
நடந்த சம்பவங்கள், நடக்கும் சம்பவங்கள் எதுவுமே திருப்தி அளிப்பதாக இல்லை. மாறாக கவலை அளிப்பதாகவே உள்ளது. முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் உருவாக்கிய இயக்கம், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காப்பாற்றிய இயக்கத்துக்கு இந்த கதியா?
‘கற்பூரம் கரையலாம்; கட்சி கரையலாமா! நோகுதய்யா; மனசு நோகுதய்யா’ என்ற உள்மனதின் வெளிப்பாடு எல்லோருக்குமானதே ஆகும். “உட்கட்சி சண்டையால் அதிமுக அசிங்கப்படுகிறது” என்று பிரபல ஆங்கில நாளிதழ்கள் பரிகாசம் செய்யும் அளவுக்கு நிலைமை போய்விட்டது.
முன்னாள் முதல்வர்களான எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா, எவ்வளவோ வாய்ப்புகளை எனக்கு வழங்கியதோடு அரசியலில் நிலையான ஓர் அங்கீகாரத்தை எனக்கு உருவாக்கித் தந்தார்கள். அந்த நன்றிக்காக மறைந்த அந்த ஆளுமை மிக்க இரு பெரும் தலைவர்களின் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் இந்த இயக்கத்துக்கு என் அனுபவம் பயன்படவேண்டும் என்று சுயநலமின்றி தொடர்ந்து பணியாற்றி வந்தேன்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப்பிறகு எனக்கு பல வாய்ப்புகள் மறுக்கப்பட்டன, தடுக்கப்பட்டன. அதைப்பற்றி கூட நான் கவலைப்படவில்லை. எனது ஆதங்கத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல் தலைமைக்கு கட்டுப்பட்டு தொடர்ந்து பணியாற்றி வந்தேன்.
மறைந்த ஆளுமை மிக்க இருபெரும் தலைவர்களுடன் அரசியலில் பயணித்ததை நான் ஒரு கணம் எண்ணிப் பார்க்கிறேன். இப்போது உருவாகியுள்ள சூழ்நிலைகளை பார்க்கிறபோது இயக்கத்தில் தொடர்ந்து பயணிக்க என் மனம் இடம் தரவில்லை. மனம் வேதனைப் படுகிறது.
எவ்வளவோ வாய்ப்புகளை எனக்கு வழங்கியதோடு அரசியல் வானில் அடையாளம் காட்டப்பட்ட ஒரு ஒளிரும் நட்சத்திரமாக என்னை ஆளாக்கி அழகு பார்த்த மறைந்த இரு பெரும் தலைவர்களின் ஆன்மாக்களிடம், நான் எடுத்த இந்த முடிவுக்கு மன்னிப்புக் கோரி கனத்த இதயத்தோடு நான் வகிக்கும் பொறுப்பிலிருந்தும், கட்சியிலிருந்தும் விலகிக்கொள்கிறேன் என்பதை தலைமைக்கு வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்,” என்று அதில் அவர் கூறியுள்ளார்.
தொடர்ந்து செய்தியாளர்களை இன்று சந்தித்த முன்னாள் அமைச்சர் செம்மலை, “இதுவரை உங்களையெல்லாம் சந்திக்கின்ற போது மகிழ்ச்சியோடு சந்தித்தேன். ஆனால், இன்று மனவருத்தத்தோடு சந்திக்கின்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. தேர்தலுக்கு பிறகு அதிமுகவில் அடுத்தடுத்து நடைபெறும் நிகழ்வுகள் எனக்கு மன வேதனையை ஏற்படுத்தியது. நடந்த, நடக்கும் சம்பவங்கள் எனக்கு திருப்தி அளிக்கவில்லை. எனக்கு கவலையை மட்டுமே அளிக்கிறது. இந்த இயக்கத்தை முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் எப்படி உருவாக்கினார்கள். அதை எப்படி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காப்பாற்றினார்கள் என்பதை நாடே அறியும். இரு பெரும் தலைவர்கள் வழிநடத்திய இந்த இயக்கம் இன்றைக்கு பலவீனமாகி விட்டதை பார்த்து லட்ச கணக்கான தொண்டர்கள் கவலை அடைந்துள்ளனர்.
கட்சி பலவீனமாகி கொண்டே போகிறது. அதை பலப்படுத்த வேண்டுமென்ற எண்ணம் இன்று கட்சியில் இருக்கின்ற தலைவர்கள், முக்கிய நிர்வாகிகளுக்கு இருக்க வேண்டும். ஆனால், இந்த இயக்கத்தில் உள்ள பிரச்சினை என்னவென்று சொன்னால் நிர்வாகிகளுக்கு இடையே இருக்கின்ற ‘ஈகோ’தான். அது வேகத்தடை போல கட்சியின் வளர்ச்சியை தடுக்கிறது. கட்சியை வளர்க்க வேண்டுமென்ற எண்ணம் இல்லை.
அதிமுகவை தவெக தலைவரும் முதல்வருமான விஜய் ஒரு பொருட்டாகவே கருதவில்லை. கட்சியை வலுவான இயக்கமாக காட்டத் தவறியதே இதற்கு காரணம். இதில் விஜய்யை குறை சொல்ல முடியாது.
தேர்தலில் கட்சியின் தோல்விக்கு பொதுச்செயலாளர் பழனிசாமி காரணம் என்ற குற்றச்சாட்டை ஏற்க மாட்டேன். அவர் தேர்தலின் போது கடுமையாக உழைத்தார். இருப்பினும் உட்கட்சி பூசல் காரணமாக வெற்றி பெற முடியவில்லை. அதேபோல எஸ்.பி.வேலுமணியின் பின்னால் பாஜக இருக்கிறது என்ற குற்றச்சாட்டை நான் ஏற்க மாட்டேன்” என்றார்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。