
















Updated on
:
5 min read
“நாங்களே மாற்று, தூய சக்தி..” என்று தவெக தலைவர் விஜய் அளித்த வாக்குறுதிகளுக்காக 108 இடங்களில் வெற்றி என்ற சுகமான சுமையைத் தூக்கி வைத்தவர்கள் சாமானிய மக்கள். முதல்வர் விஜய் தலைமையிலான ஆட்சி இப்போது வெற்றிகரமாக 3-வது வாரத்தில் அடியெத்து வைத்துள்ள நிலையில், மாற்றத்துக்கான அந்த ‘தூய சக்தி’-க்கு பின்புலத்துடன் சாமானியர்கள் முன்வைக்கும் 7 கேள்விகள் இங்கே...
1. சட்டம் - ஒழுங்கும், பாதுகாப்பும்:
தேர்தல் பிரச்சார மேடைகளில் எல்லாம் ‘இந்த ஆட்சியில் குழந்தை முதல் மூதாட்டி வரை பாதுகாப்பு இல்லை’ என்றீர்கள். பெண்கள் எல்லோரும் தெறி படத்தில் வந்ததுபோல் நீங்கள் நீதி செய்வீர்கள் என்று நினைத்தார்களோ என்னவோ! வாக்குகளை வாரி வழங்கியுள்ளனர். 15 நாட்களில் 19 பாலியல் குற்றங்கள் நடந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் சொல்கின்றன.
தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (NCRB) புள்ளி விவரத்தின்படி, இந்தியாவில் ஒவ்வொரு நாளும் 85 முதல் 87 பாலியல் வன்கொடுமைகள் நடக்கின்றன. மொத்தமாக பெண்களுக்கு எதிராக அன்றாடம் 1200 குற்றங்கள் நடக்கின்றன என்கிறது. இதைக் கூட நீங்கள் உங்களுக்கு ஆதரவான உதாரணமாகச் சொல்லக்கூடும்.
ஆனால், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்தும், வழக்குகளை விரைவுபடுத்துவது குறித்தும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்த ஆலோசனைக்குப் பின்னர் “பாலியல் குற்ற வழக்குகளை விரைவாக, முறையாக நடத்தி, கடும் தண்டனை பெற்றுத் தருவது குற்றச் செயல்களில் ஈடுபடத் திட்டமிடுவோரைத் தடுக்கும் விதமாக இருக்க வேண்டும்” என்று கூறியுள்ளீர்கள்.
நீங்கள் போட்ட முதல் கையெழுத்துகளில் ஒன்று சிங்கப்பெண் அதிரடிப் படை திட்டம். அதுவே முந்தைய ஆட்சியின் பிங்க் பேட்ரோல் திட்டத்துக்கு ஸ்டிக்கர் ஒட்டி பரிணாம வளர்ச்சி கண்டது என்கிறார்கள். ஆக, பெண்களின் பாதுகாப்புக்காக நீங்கள் ஆக்கபூர்வமாக என்ன செய்யப் போகிறீர்கள் எனக் கேட்கிறார்கள்.
2. லஞ்சம், ஊழல்...
பத்திரப் பதிவுத்துறையின் ஸ்டார் 3.0 மென்பொருள் திட்டத்தின்கீழ் 18 புதிய சேவைகளை உள்ளடக்கிய ‘ஸ்பிரின்ட் 1’ செயல் திட்டம் திமுக ஆட்சி முடிவுக்கு வரும் தருவாயில் அறிமுகம் செய்யப்பட்டது. அதில் மக்கள் பிறர் உதவியின்றி, சொத்து தொடர்பான குறைந்தபட்ச விவரங்களை உள்ளிட்டு, ஆவணத்தை தாங்களே உருவாக்கும் வகையில், மென்பொருள் தயாரிக்கப்பட்டுள்ளது மிக முக்கியமானதாகப் பார்க்கப்பட்டது. அத்துடன், பிரச்சினைகள் ஓய்ந்துவிட்டதா என்றால், இல்லை. என்னதான் ‘ஸ்டார் 3.0'’ மென்பொருளால் மற்றும் வீட்டில் இருந்தபடியே பதிவு செய்யும் புதிய வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டாலும், இணைய வசதி, கணினி பயன்பாடு திறன் குறைவாக உள்ள சாமானிய மக்களுக்கு இதில் சவால்களே அதிகம்.
அதேபோல், சொத்து மோசடிகளைத் தடுக்க, பதிவு செய்யப்படும் அனைத்து சொத்துககளுக்கும் உரிய ‘பட்டா’ கட்டாயம் ஆக்கப்பட்டிருந்தாலும், நிலம் தொடர்பான சிறிய பிழைகளைத் திருத்த வருவாய்த் துறையை நாட வேண்டியுள்ளதாக சாமானியர்கள் தவிப்பை வெளிப்படுத்துகின்றனர். இன்னமும்கூட இடைத்தரகர்களின் ஆதிக்கம் ஆவணங்களை சரிபார்ப்பதிலும், நில அளவீடு செய்வதிலும் முழுமையாக முடிவுக்கு வரவில்லை என்கின்றனர்.
வந்தவுடன் கஜானா காலி என்ற ஓர் அரிய கருத்தை தெரிவித்ததோடு, அது தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிடுவதாகக் கூறினீர்கள். ‘காலியான அந்த கஜானா’-வை நிரப்புவதற்கு அதிக நிதி ஆதாரத்தை ஈட்டித் தருவது பத்திரப் பதிவுத் துறை. அந்தத் துறையின் நடைமுறை சிக்கல்களை தீர்த்து, ஊழல்களை ஒழித்துவிடுவீர்களா என்று உரிமையுடன் கேட்கின்றனர் உங்களுக்கு வாக்களித்த சாமானியர்கள். அதேபோல், ஆர்டிஓ அலுவலகங்களில் வாழையடி வாழையாக சாமானியர்களின் பாக்கெட்டுகளை பதம் பார்க்கும் லஞ்ச ஊழல்களை ஒழிப்பீர்களா என்ற எதிர்பார்ப்பும் எகிறியிருக்கிறது.
3. பெண்களின் எதிர்பார்ப்பு...
உங்களுக்கு 18 வயது முதல் தலைமுறை பெண் வாக்காளரும், விசில் என்று கூட சொல்ல முடியாத அளவுக்கு வயதான மூதாட்டியும் வாக்களித்தார்களே... நீங்கள் ‘அன்னபூரணி சூப்பர் சிக்ஸ்’ திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு 6 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என்றீர்கள். 60 வயதுக்குட்பட்ட குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,500 வழங்கப்படும். அரசுப் பள்ளிகளில் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் தாய்மார்களுக்கு ஆண்டுக்குக் கல்வி உதவித் தொகையாக ரூ.15,000 வழங்கப்படும் என்றீர்கள்.
மகளிருக்கான ‘வெற்றி பயண திட்டம்’ அறிவித்தீர்கள். அதாவது விடியல் திட்டத்தில் சாதாரண கட்டண பேருந்தில் பெண்கள் இலவசமாக பயணிப்பதுபோல் தவெக ஆட்சிக்கு வந்தால் அனைத்து அரசு பேருந்துகளிலும் இலவச பயணம் என்ற வாக்குறுதியை வழங்கினீர்கள். அது குறித்துப் போக்குவரத்துத் துறை தீவிர ஆலோசனைகளை மேற்கொண்டு வருவதாக துறை சார்ந்த அமைச்சர் கூறினாலும் பெண்கள் அதை அதிகமாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
அதேபோல், பெட்ரோல் விலை உயர்வால் விலைவாசி உயர்ந்து வரும் நிலையில், இல்லத்தரசிகள் மாதம் ரூ.2,500, இலவசமாக 6 சிலிண்டர்கள், வெற்றிப் பயணத் திட்டங்களை வெகுவாக எதிர்பார்க்கின்றனர்.
தேர்தல் வாக்குறுதிகளை வழங்கும் முன்னரே குறைந்தபட்சம் மாநில அரசின் அதிகாரப்பூர்வ நிதிநிலை அறிக்கைகள் (Budget), கொள்கை விளக்கக் குறிப்புகள் மற்றும் இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கை தலைவர் (CAG) வெளியிடும் தணிக்கை அறிக்கைகளை வாசித்து ஆய்வு செய்திருந்தாலே நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளைத் தவிர்த்திருக்கலாம் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
எங்களுக்கு இலவசமாக ரெஃப்ரிஜிரேட்டர் வேண்டாம், ரூ.8,000 கூப்பனும் வேண்டாம் என்றல்லவா உங்களுக்கு வாக்களித்திருக்கிறார்கள் பெண்கள். அது நீங்கள் சொன்ன மாற்றத்துக்கான அல்லது அவர்கள் எதிர்பார்த்த மாற்றத்துக்கான வாக்குகளாக இருக்கலாம். நீங்கள் பெண்களுக்கு என்ன செய்யப் போகிறீர்கள்?
“நாங்களும் பொறுத்திருந்தே ஒவ்வொன்றாக செய்ய முடியும். எங்களுக்கும் அவகாசம் கொடுக்க வேண்டும்” என்று உங்கள் கட்சியில் உள்ள அரசியல் அனுபவம் நிறைந்த 3 முதல்வர்களோடு பயணித்த செங்கோட்டையன் சொல்லியுள்ள கருத்தை தோதாகத் சாக்கை தூக்கிக் கொண்டு வராதீர்கள் என்று ஆதங்கப்படுகிறார்கள் மக்கள்.
4. வேதனையில் விவசாயிகள்
கடந்த ஏப்ரல் மாதம் நீங்கள் வெளியிட்ட தேர்தல் அறிக்கையின் முதல் பிரதியை ஒரு விவசாயி பெற்றுக் கொண்டார். விவசாயிகளுக்கு அப்படித்தான் நீங்கள் மாபெரும் மாற்றத்துக்கான நம்பிக்கையைக் கொடுத்தீர்கள்.
கூடவே, 5 ஏக்கருக்கு குறைவாக நிலம் வைத்து வேளாண் கூட்டுறவு சங்கங்களில் கடன்பெற்ற விவசாயிகளுக்கு முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும். 5 ஏக்கருக்கு மேல் உள்ள விவசாயிகளுக்கு 50 சதவீதம் கடன் தள்ளுபடி செய்யப்படும். 2 ஏக்கர் வரை நிலம் வைத்துள்ள விவசாயிகளின் குழந்தைகளின் கல்விச்செலவை அரசே ஏற்கும். குத்தகை விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்படும். விவசாய தொழிலாளர்களுக்கு ஒரு குடும்பத்துக்கு ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் நேரடி முதலீட்டு ஆதரவு தொகையாக வழங்கப்படும் என்றெல்லாம் வாக்குறுதிகள் வழங்கினீர்கள்.
தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்டோர் முதல்வரை சமீபத்தில் சந்தித்தபோது
இந்நிலையில்தான் இப்போது ஓர் உத்தரவை பிறப்பித்தீர்கள். தமிழக அரசு கூட்டுறவு வங்கிகளில் ரூ.50 ஆயிரம் வரை பயிர்க் கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு முழுமையான தள்ளுபடியையும், அதற்கு மேல் பெற்ற விவசாயிகளுக்கான பயிர்க் கடன் தள்ளுபடியை விகிதங்களின் அடிப்படையிலும் அறிவித்துள்ளீர்கள்.
இதுவரை யாருமே செய்யாதவகையில், சிறு, குறு விவசாயிகள், பெரிய விவசாயிகள் என விவசாயிகளை தரம் பிரித்து கடன் தள்ளுபடி அறிவித்துள்ளது கண்டனத்துக்குரியது என்கிறார்கள் விவசாயிகள்.
தேர்தல் வாக்குறுதியில் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதமும், பெரு விவசாயிகளுக்கு 50 சதவீதமும் கடன் தள்ளுபடி செய்வேன் என்றார்கள். ஆனால், தற்போது சிறு, குறு விவசாயிகளுக்கு 25 சதவீதமும், பெரு விவசாயிகளுக்கு வெறும் 5 சதவீதமும் மட்டுமே கடன் தள்ளுபடி வழங்கி உள்ளனர் என்கின்றனர்.
நிலத்தை அளவுகோலாக எடுக்காமல், பணத்தை அளவுகோலாக வைத்து மிகப் பெரிய ஏமாற்று வேலையில் தவெக அரசு ஈடுபட்டுள்ளதாக அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. உங்களுக்கு வெளியில் இருந்து ஆதரவு கொடுத்துள்ள இடதுசாரிகளே கண்டித்துள்ளனர் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.
அதுமட்டுமல்லாது, அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், நெல் எடை போட மூட்டை ஒன்றுக்கு ரூ.60 வரை கட்டாயமாக வசூலிக்கப்படுகிறது. மேலும், மூட்டைக்கு 2 கிலோ வரை கூடுதலாக எடை பிடிக்கப்படுவதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். ஊழலை ஒழிப்பேன் என்ற நீங்கள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் என்ன நடக்கிறது என்று கவனிப்பீர்களா என்பது விவசாயிகளின் குரலாக இருக்கிறது.
5. நண்பாஸ், நண்பீஸுக்காக...
சிஜேபி (கரப்பான்பூச்சி ஜனதா கட்சி) பற்றி உங்களுக்கு அதிகாரிகள் சொல்லியிருப்பார்கள் என்று நம்புகிறோம். அது எங்கோ வடக்கே உதித்த இயக்கமல்ல, இணையம் முழுதும் மாநிலங்கள் கடந்து ஒலிக்கும் ஆதங்கக் குரல்.
முதல்வர் விஜய்யை இந்திய மாணவர் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் , மாநிலச் செயலாளர் மற்றும் நிர்வாகிகள் சந்தித்தபோது
தமிழக வேலைவாய்ப்பில் 75% தமிழக இளைஞர்களுக்கே, 12-ஆம் வகுப்புக்கு பிறகு பிஎச்டி வரை பிணை இல்லாமல் ரூ.20 லட்சம் வரை கடன், ஆண்டுதோறும் 5 லட்சம் இண்டர்ன் பணிகளை வழங்க அரசு தனியார் தொழில் நிறுவனங்கள் கூட்டாக இயங்கும், 29 வயதுக்கும் மேல் வேலைவாய்ப்பு இல்லாத டிகிரி முடித்த இளைஞர்களுக்கு ரூ.4,000, பாலிடெக்னிக் முடித்த இளைஞர்களுக்கு ரூ.2000 இளைஞர் நல நிதி...
இவையெல்லாமே நீங்கள் சொன்னதுதான்!
இரண்டு வார கால ஆட்சியில் இவற்றின் மீது தங்களின் கவனம் திரும்பியதாக தெரியவில்லை என்கிறார்கள் சாமானிய இளைஞர்கள். அவர்களில் பலரும் சிஜேபி-யில் இணைந்தோம் என்ற கூடுதல் தகவலையும் சொன்னார்கள். அவர்களுக்கு உங்களின் பதில் என்ன?
6. மீனவர்கள் பிரச்சினை
“இலங்கை கடற்படையால் ஏற்கெனவே 54 மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்டு இலங்கை சிறையில் உள்ளனர். மேலும் 264 படகுகள் இலங்கை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இப்பிரச்சினை குறித்து இலங்கை அதிகாரிகளை தொடர்புகொண்டு உரிய தூதரக நடவடிக்கைகள் மூலம் தமிழ்நாடு மீனவர்கள் மற்றும் படகுகளை உடனடியாக மீட்குமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” என்ற வெளியுறவு அமைச்சருக்கான கடிதம் டெம்ப்ளேட். இதில் ஆட்சி எதுவாக இருந்தாலும் எண்ணிக்கை மட்டுமே மாறும். ஒருவேளை துறை அமைச்சர் மாறினால் அதை மாற்றுவார்கள்.
தூத்துக்குடியில் மீனவ சமுதாயத்தினர் வாக்குகளை அள்ளி வீசியுள்ளனர், மாற்றம் வரும் என்பதற்காக. உங்கள் அமைச்சரவையில் மீன்வளத் துறை அமைச்சர் ஸ்ரீநாத், கச்சத்தீவு பிரச்சினையில் உங்கள் நிலைப்பாடு என்னவென்று கேட்டால் ‘நோ கமென்ட்ஸ்’ எனக் கூறியிருக்கிறார். உங்கள் கடிதத்தில் நீங்களே கச்சத்தீவு பிரச்சினையில் தவெக நிலைப்பாடு என்னவென்று சொல்லியிருந்தால், அந்தக் கேள்வியே எழுந்திருக்காது அல்லவா? உங்கள் நிலைப்பாட்டை அறிய மீனவ சகோதரர்களும் ஆர்வமாக இருப்பதாகக் கூறுகின்றனர்.
7. ஆசிரியர்களுக்கு...
ஒவ்வோர் ஆண்டும் பள்ளி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் மற்றும் பொது மாறுதல் கலந்தாய்வு ஆண்டுதோறும் கல்வி தகவல் மேலாண்மை முகமை (EMIS) இணையதளம் மூலமாக மே மாதத்தில் நடைபெறும். இந்த ஆண்டு ஆட்சி மாறியுள்ளது. ஆனாலும், இதுவரை பணியிட மாறுதல் தொடர்பான அறிவிப்பு ஏதும் வரவில்லை.
இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒன்றிய, மாவட்ட அளவிலான கலந்தாய்வு ரத்து செய்யப்பட்டு மாநில அளவில் மட்டுமே நடத்தப்படுகிறது. ஒட்டுமொத்தமாக மாநில அளவில் கலந்தாய்வு நடத்துவதற்காக பிறப்பிக்கப்பட்ட அரசாணை 243-ஐ ரத்து செய்ய வேண்டுமென்று புதிய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளதாக ஜாக்டோ ஜியோ, டிட்டோ ஜாக் அமைப்பைச் சேர்ந்தவர்கள் கூறுகின்றனர்.
மேலும், கலந்தாய்வு நடத்தும் பட்சத்தில் கலந்தாய்வுக்கு முன்பே பல இடங்களுக்கு நிர்வாக மாறுதல் என்ற பெயரில் பணியிட மாறுதல் வழங்கப்படுவது, கலந்தாய்வில் பணியிடங்கள் மறைக்கப்படுவது போன்ற முறைகேடுகள் களையப்படுமா என்று கேள்வி எழுப்புகின்றனர்.
அதேபோல் தமிழக அரசுப் பள்ளிகள் ஆசிரியர்கள் காலிப் பணியிடங்கள் விவரங்களை முறையாகக் கணக்கெடுக்கவும், பதவி உயர்வு பட்டியலை எவ்வித பாரபட்சமும் இன்றி தயாரிக்கவும் கோரிக்கைகள் வைக்கப்படுகின்றன. பதவி உயர்வுக்கு பணம் பெறும் கலாச்சாரம் முடிவுக்கு கொண்டுவரப்படும் என்றும் உங்கள் வாக்குறுதியில் இருந்தது என்பதை நினைவுபடுத்துகிறோம்.
தவெக தனிபெரும் கட்சியாக தேர்தலில் சோபிக்க அரசுப் பணியாளர்கள், குறிப்பாக ஆசிரியர்கள் அளித்த வாக்குகள் மிக முக்கியப் பங்கு வகிப்பதாக பல்வேறு ஊடகங்களிலும் பேசப்பட்டதை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறோம் என்பதும் மக்களின் குரலாக உள்ளது.
இந்தப் பட்டியல் நீளமானது. ஆனால், ஆளத் தொடங்கி இரண்டு வாரமே ஆன நிலையில், முதன்மையான சிலவற்றை மட்டுமே மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மாண்புமிகு சிஎம் சார்... உரிய உறுதுணைகளுடன் நீங்களே ஏற்கெனவே பெரும்பான்மையை சட்டப்பேரவையில் நிரூபித்துவிட்டீர்கள். எனினும், ‘தொலைநோக்கு’ அரசியல் பார்வையுடன் பிற கட்சி எம்எல்ஏக்களை வசப்படுத்துவதில் காட்டும் அதே தீவிரத்தை, எங்கள் அத்தியாவசிய பிரச்சினையிலும் கொஞ்சம் காட்டலாமே என்பதே சாமானிய மக்களின் குரலாக உள்ளது இப்போதைக்கு.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。